வரலாறு காணாத ஈரான் தாக்குதல்.. இதை இஸ்ரேல் எதிர்பார்க்கலையே.. முழு போர் வெடித்தால் என்னாகும்?

Oct 02, 2024,08:06 PM IST

டெல் அவிவ்:   இஸ்ரேல் - ஈரான் இடையே முழு அளவிலான போர் மூளும் சூழல் எழுந்துள்ளது. இதற்குக் காரணம், ஈரான் நடத்திய அதிரடி ஏவுகணைத் தாக்குதல்தான். இதுவரை இல்லாத அளவுக்கு இஸ்ரேலுக்குள் ஈரான் நடத்திய இந்தத் தாக்குதலை இஸ்ரேலும் சரி, அதன் முழு ஆதரவாளரான அமெரிக்காவும் சரி எதிர்பார்க்கவில்லை.


இஸ்ரேலிடம் அதி நவீன தொழில்நுட்பம் உள்ளது. அதாவது வெளியிலிருந்து யார் ஏவுகணை மூலம் தாக்கினாலும் அதை முறியடிக்கக் கூடிய அயன் டோம்  பாதுகாப்புத் திட்டத்தை அது வைத்துள்ளது. அதாவது எதிரி நாட்டு ஏவுகணைகளை வானிலேயே தகர்த்து தாக்குதலை முறியடிக்கும் அமைப்புதான் இது. இந்த பாதுகாப்பு அமைப்பை முதலில் ஹமாஸ் அமைப்புதான் தகர்த்து அதிர வைத்தது. ஹமாஸ் அமைப்பு நடத்திய அதிரடித் தாக்குதலால் முதல் முறையாக இஸ்ரேல் நிலை குலைந்தது. அதன் பிறகுதான் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக முழு அளவிலான தாக்குதலைத் தொடங்கி இன்று காஸா நகரையே நிர்மூலமாக்கி வைத்துள்ளது இஸ்ரேல்.


கேள்விக்குள்ளான அயன் டோம் பாதுகாப்பு




இந்த நிலையில் அடுத்தடுத்து நேரடியாகவும், மறைமுகமாகவும் அது ஈரானைச் சீண்டியதால்தான் இன்று ஈரான், வெகுண்டெழுந்து இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலை கையில் எடுத்துள்ளது. ஆனால் நேற்று ஈரான் நடத்திய சரமாரியான ஏவுகணைத் தாக்குதலை இஸ்ரேல் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக இஸ்ரேல் பெரிதும் நம்பியிருக்கும் அயன் டோம் பாதுகாப்பு அமைப்பை ஈரான் ஏவுகணைகள் தகர்த்து இஸ்ரேலைத் தாக்கியதை அந்த நாட்டு மக்கள் அதிர்ச்சியுடன் நேற்று பார்த்து ஸ்தம்பித்துப் போனார்கள்.


குறிப்பாக இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாத்தின் தலைமை அலுவலகம் அருகேயே வந்து ஈரான் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியதை இஸ்ரேல் நாட்டு மக்கள் பெரும் அதிர்ச்சியுடன் பார்த்துள்ளனர். ஈரான் நேற்று நடத்தியது மிகப் பெரிய தாக்குதல் கிடையாது. சிறிய அளவிலான தாக்குதல்தான். இதுவே வரலாறு காணாத வகையில் இருந்துள்ளது. இதுவே முழு அளவில் ஈரான் தனது ராணுவ பலத்தைப் பயன்படுத்தினால் மிகப் பெரிய உலகப் போருக்கு அது வித்திடும் என்பதில் ஐயமில்லை. அது வந்து விடக் கூடாதே என்பதுதான் பெரும்பாலான உலக நாடுகளின் விருப்பமாக, கோரிக்கையாக உள்ளது.


ஏப்ரல் 1ம் தேதி சிரியாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ அதிகாரிகள் ஏழு பேர் கொல்லப்பட்டனர். இதுதான் இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் உரசல் ஆகும். இந்த தாக்குதலால் கோபமடைந்த ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. இதற்குப் பதிலடியாக ஏப்ரல் 19ம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.  அதன் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே உரசல் நீடித்து வந்தது.


இரு நாட்டு ராணுவ பலம்


இடைப்பட்ட காலத்தில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் மற்றும் ஹமாஸ் தலைவர் மற்றும் ஈரான் அதிபர் ஆகியோர் அடுத்தடுத்துக் கொல்லப்பட்டனர். இதனால் ஈரான் மேலும் கோபமடைந்தது. இந்த நிலையில்தான் நேற்று ஈரானின் அதிரடித் தாக்குதல் வந்துள்ளது. பல்வேறு சர்வதேச தடைகள் ஈரான் மீது உள்ளன. ஆனாலும் அது அவற்றைப் பொருட்படுத்தாமல் தனது ராணுவ பலத்தை தொடர்ந்து அதிகரித்தபடியே உள்ளது. ரஷ்யா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகள் ஈரானுக்கு உதவுகின்றன. மேலும் ஈரானிடம் எண்ணெய் வளம் நிறையவே உள்ளது. 


ஈரானிடம் அதி நவீன கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகள் உள்ளன. இவற்றால் இஸ்ரேலுக்கு மிகப் பெரிய ஆபத்து உள்ளதாக ஏற்கனவே பல்வேறு பாதுகாப்பு துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அந்த ஏவுகணைத் தாக்குதல் நடைபெற்றால் இஸ்ரேலால் அதை சமாளிப்பது கடினம் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக அதன் அயன் டோம் திட்டத்தால் இந்த ஏவுகணைகளைத் தடுக்க முடியாது என்றும் சொல்லப்படுகிறது.


ஈரான் - இஸ்ரேல் ராணுவங்களின் பலத்தை ஒப்பிடுவதாக இருந்தால் அளவில் ஈரான் ராணுவம்தான் பெரியது போலத் தோன்றும். ஆனால் இஸ்ரேலிடம் அதி நவீன ஆயுத பலம் உள்ளது. அதேசமயம், ஈரானிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. அவற்றை அது பயன்படுத்தாது என்று நாம் எதிர்பார்க்க முடியாது. இஸ்ரேலிடமும் அணு ஆயுதம் உள்ளது. இரு நாடுகளில் எது அணு ஆயுதத்தைப் பயன்படுத்தினாலும் அது மிகப் பெரிய உலகப் போருக்கே வித்திடும் என்பதால் உலக நாடுகளிடையே அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலிடம் 90 அணு ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.


சர்வதேச அளவில் பிரச்சினை




ஈரானிடம் சுமார் 6 லட்சத்து 10 ஆயிரம் ராணுவ வீரர்கள் உள்ளனர். இஸ்ரேலிடம் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் உள்ளனர். டாங்குகள் என்று எடுத்துக் கொண்டால் ஈரானிடம் கிட்டத்தட்ட 1500 டாங்குகள் உள்ளன. இஸ்ரேல் வசம் 400 உள்ளது. பீரங்கிகள் ஈரானிடம் கிட்டத்தட்ட 7000 உள்ளன. இஸ்ரேலிடம் 550 உள்ளது. தாக்குதல் ஹெலிகாப்டர்கள் என்று எடுத்துக் கொண்டால் இரு நாடுகளிடமும் தலா 50 வரை இருக்கலாம். தரையிலிருந்து வானில் உள்ள இலக்குகளைத் தாக்கும் ஏவுகணை யூனிட்டுகள் ஈரானிடம் 400ம், இஸ்ரேலிடம் 65ம் உள்ளன. இஸ்ரேலிடம் 5 தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. ஈரான் வசம் ஒன்று மட்டுமே உள்ளது. 


இஸ்ரேல் - ஈரான் இடையே முழு அளவில் போர் வெடித்தால் அது அந்த நாடுகள் இடம் பெற்றுள்ள பிராந்தியங்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகையுமே கடுமையாக பாதிக்கும். ஏற்கனவே ரஷ்யா - உக்ரைன் போரால் ஐரோப்பிய நாடுகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. சர்வதேச அளவிலும் இது பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஈரான் - இஸ்ரேல் இடையே போர் மூண்டு, அதற்கு இஸ்லாமிய நாடுகள் ஈரான் பக்கம் ஒருங்கிணைந்தால் பல்வேறு வகையான பிரச்சினைகளை உலகம் சந்திக்கக் கூடும் என்ற அபாய நிலை உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தென் மாவட்டங்களுக்கு.. தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. புதன் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்

news

பொது இடத்தில் கட்டுக்கடங்காத கோபம் வருதா.. கன்ட்ரோல் பண்ண முடியலையா.. இதைப் படிங்க!

news

குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் அறுத்த விவகாரம்.. போலீஸ் விசாரணை தொடங்கியது

news

மாமல்லபுரத்தில் செக்யூரிட்டியை சரமாரியாக தாக்கிய குடும்பம்.. 2 பெண்கள் உள்பட 3 பேர் அதிரடி கைது!

news

முதல்வரும், துணை முதல்வரும் எத்தனை முறை வந்தாலும்.. சேலம் அதிமுகவின் கோட்டை.. எடப்பாடி பழனிச்சாமி

news

தீபாவளி 2024 ஸ்பெஷல்.. அமுதம் அங்காடிகளில்.. ரூ. 499க்கு 15 பொருட்கள்.. அப்படியே செட்டா வாங்கலாம்!

news

BSNL லோகோ மாறிப் போச்சு.. அது மட்டுமா.. 7 புதிய சேவைகளும் அறிமுகம்!

news

64 சிசிடிவி கேமராக்கள்.. 7 பாதுகாப்பு கோபுரங்கள்.. தி.நகரில் தீயாய் வேலை செய்யும் சென்னை போலீஸ்!

news

என்ன நண்பா விக்கிரவாண்டிக்கு கிளம்பலாமா.. த.வெ.க. மாநாட்டு பணிகள் 90% முடிந்தன!

அதிகம் பார்க்கும் செய்திகள்