வந்துருச்சு "பிள்ளையார் சதுர்த்தி".. பூரண கொழுக்கட்டை பண்ணலாமா?

Sep 15, 2023,04:06 PM IST

- மீனா


சென்னை: விநாயகர் சதுர்த்தி வந்து விட்டது.. விநாயகர் சதுர்த்தி என்றாலே களிமண் சிலைகளும் அடுத்து களிப்பூட்டும் பூரண கொழுக்கட்டையும்தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அந்த வகையில் களிமண் பிள்ளையார்களை வரவேற்க மக்கள் தயாராகி விட்டார்கள். கூடவே கொழுக்கட்டைக்கும் ஆவலாக காத்திருக்கிறார்கள் குடும்பத்தினர்.


சரி, பூரண கொழுக்கட்டை எப்படி செய்யலாம்னு உங்களுக்குத் தெரியுமா.. என்னாது தெரியாதா.. அட கவலைய விடுங்க பாஸ்.. நான் சொல்லித் தர்றேன்.




கொழுக்கட்டை செய்வது என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் அதிலும் சில பேருக்கு மாவு பிசையும் போது ஏற்படும் பிரச்சனைகளை எப்படி சரி செய்வது  என்று குழம்பி போவோம். அதனாலேயே பெரும்பாலானோர் அரிசியை ஊறவைத்து அதை பக்குவமாக மிக்ஸி அல்லது கிரைண்டரில்  அரைத்து செய்தால்தான் சாப்டான பதத்தில் கொழுக்கட்டை கிடைக்கும் என்று இந்த முறையை தொடர்ந்து செய்து வருவார்கள். ஆனால் நமக்கு எல்லா நேரமும் இதை செய்வதற்கு போதிய நேரம் இல்லாமல் இருக்கலாம். அதனால் இந்த யுக்தியை கையாண்டு நீங்கள் ரெடிமேட் அரிசி மாவை வைத்து கொழுக்கட்டை செய்யும்போது கொழுக்கட்டை  ஆறினால் கூட மிகவும் சாஃப்ட்டான பதத்திலேயே இருக்கும்.  




இப்படி மாவு  பிசைந்து பூரண கொழுக்கட்டை செய்யும் போது கொழுக்கட்டையில் விரிசல் வராமல் இருப்பதற்கும், இது ஒரு சிறந்த முறையாகும். முதலில் மாவு பிசையும் பதத்தை தெரிந்து கொள்வோம்.


1 கப் மாவு எடுத்தால் இதற்கு 1 1/2 கப் தண்ணீர் தேவைப்படும். இந்த தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அந்த மாவிற்கு தேவையான உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி கொதிக்க விடவும்.  தண்ணீர் நன்றாக கொதிக்கும் நிலையில் அடுப்பை சிம்மில் வைத்து மாவை கொஞ்சம் கொஞ்சமாக அதில் போட்டு கரண்டியை வைத்து கட்டிப்படாமல்  கிளறி விட வேண்டும். பிறகு அடுப்பை அணைத்துவிட்டு அந்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி சூடு ஆறி வெதுவெதுப்பாக  இருக்கும் தருணத்தில் கை வைத்து நன்கு பிசைந்தால் மாவு மிகவும் சாப்டான பதத்தில் நமக்கு கிடைத்துவிடும். 


கொழுக்கட்டை ரெடியாய்ருச்சா.. அடுத்து கொழுக்கட்டைக்கான பூரணம் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். இரண்டு வகையான பூரணத்தை நாம் பார்க்க போறோம். 


1. இனிப்பு பூரணம்

2. காரப்பூரணம்


இனிப்பு பூரணம் செய்வதற்கு தேவையான பொருட்கள்


பாசி பருப்பு-1 கப்

நாட்டுச் சர்க்கரை-1 1/2 கப்

தேங்காய் துருவல்- 3/4 கப்

ஏலக்காய் பொடி-1/4 ஸ்பூன்

உப்பு-  சிறு பின்ச் 

தண்ணி -1/4


இனிப்பு பூரண கொழுக்கட்டை செய்முறை:




முதலில் பாசிப்பருப்பை வெறும் வானொலியில் மிதமான சூட்டில் வறுத்து அதை நன்கு கழுவ வேண்டும். பிறகு ஒரு மணி நேரம் ஊறவைத்து அதை மிக்ஸி ஜாரில் போட்டு ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும். இப்போது அரைத்த பாசிப்பருப்பை இட்லி வேக வைப்பது போல் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மேலே இட்லி தட்டில் துணி விரித்து இந்த அரைத்த பாசிப்பருப்பை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பு வெந்த பிறகு அதை ஆற விடவும். அதன் பிறகு அதை சிறு துண்டுகளாக வெட்டி மறுபடியும் மிக்ஸி ஜாரில் போட்டு  பின்ச் உப்பும் சேர்த்து முன்பு போலவே ஒன்றிரண்டாக அரைத்து கொள்ளவும். 


இப்பொழுது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில்  1/4 கப் தண்ணீர் ஊற்றி , நாட்டுச் சர்க்கரையை போட்டு சிறிது நேரம் கொதிக்க விடவும். கொதித்த பிறகு அரைத்த பாசிப்பருப்பு, தேங்காய் துருவல் இரண்டையும் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து நன்கு கிளறி விடவும். மிகவும் அதிக நேரம் கிளற வேண்டாம். சாப்டாக இருக்கும்போதே இறக்கி விடவும். அப்போதுதான் கொழுக்கட்டை ஆறிய பிறகும் உள்ளே உள்ள பூரணம் நாம் சாப்பிடும் போது மிகவும் மிருதுவான தன்மையுடன் இருக்கும். கடைசியில் பாத்திரத்தில் இருந்து இறக்கும்போது  ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி விட்டால் இனிப்பு பூரணம் ரெடி. 


மாவை மோதக அச்சில் நன்கு எண்ணெய் தடவிய பிறகு அதனுள்  உள்ளே வைத்து அச்சுக்கு ஏற்றார் போல் சரிப்படுத்தி ,அதன் பிறகு அதன் நடுவில் இந்த பூரணத்தை வைத்து, அதன் மீதும் சிறிது மாவை எடுத்து வைத்த பிறகு அச்சை ஓப்பன் செய்தால் நமக்கு விரிசல் இல்லாத பூரண கொழுக்கட்டை மோதக வடிவில் இருக்கும். அதை அப்படியே இப்போது இட்லி வேக வைப்பது போல்  வேக வைத்து எடுத்தால் இனிப்பு பூரண கொழுக்கட்டை ரெடி.

   

கார பூரணம் செய்ய தேவையான பொருட்கள்:


வெள்ளை உளுந்து: 1கப்

கடலை பருப்பு:  3 ஸ்பூன்

தேங்காய் துருவல்:1/2 கப்

பச்சை மிளகாய்-5

சீரகம்-1/2 ஸ்பூன் 

பெருங்காயத்தூள்-சிறிதளவு

உப்பு -தேவையான அளவு

மஞ்சள் தூள்-சிறிதளவு

தாளிப்பதற்கு:

கடுகு உளுந்த பருப்பு-ஒரு ஸ்பூன்

நல்லெண்ணெய்-1

ஸ்பூன்

கருவேப்பிலை மல்லி இலை ( நறுக்கியது)-சிறிதளவு


கார பூரண கொழுக்கட்டை செய்முறை:




வெள்ளை உளுந்து மற்றும் கடலைப்பருப்பு இவை இரண்டையும் நன்கு கழுவி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் இந்த பருப்பு இரண்டையும் சேர்த்து அதனுடன் சீரகம், பச்சை மிளகாய் ,உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் இவை எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றிரண்டாக தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.


பிறகு அரைத்த இந்த கலவையை இட்லி பாத்திரத்தில்  வேக வைத்து எடுத்து துண்டுகளாக வெட்டி, மறுபடியும் மிக்ஸி ஜாரில் போட்டு ஒன்றிரண்டாக அரைத்து வைத்துக் கொள்ளவும் .பிறகு ஒரு வானலியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு உளுந்தம் பருப்பு போட்டு பொறிந்தவுடன் அரைத்து வைத்திருக்கும் கார பூரண பூரண கலவையை பாத்திரத்திற்கு மாற்றி நன்கு கிளறி விட வேண்டும். பிறகு இறக்கும் தருணத்தில் நறுக்கிய கருவேப்பிலை, மல்லி இலையை இதனுடன் சேர்த்து நன்கு கிளற வேண்டும். அதன் பின்னர் மாவை எடுத்து நமக்கு தேவையான வடிவத்தில் செய்து அதனுள் இந்த பூரணத்தை வைத்து ஆவியில் வேகவைத்து எடுத்தால் காரபூரண கொழுக்கட்டை ரெடி.


ஓகே.. சிறப்பான டிப்ஸ் கொடுத்துட்டோம்.. இனி நீங்க தடபுடலா பண்டிகையை கொண்டாடுங்க.. மறக்காம பூரண கொழுக்கட்டை  எப்படி இருந்துச்சுன்னு எங்களுக்கும் சொல்லுங்க.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்