தற்காலிகமாக X உரையாடல்களிலிருந்து விலகுகிறேன்.. பாடம் புகட்டுவேன்.. வருண் குமார் ஐபிஎஸ் அதிரடி!

Aug 24, 2024,10:59 AM IST

சென்னை: திருச்சி மாவட்ட எஸ்பி வருண் குமார் ஐபிஎஸ் தன் மீதும் தனது குடும்பத்தினர் மீதும் சிலர் தொடுத்து வரும் எக்ஸ் தள ஆபாச அவதூறுப் பிரச்சாரங்களுக்குப் பதில் கொடுப்பத்திலிருந்து தற்காலிகமாக விலகுவதாக தெரிவித்துள்ளார். அதேசமயம், இந்த ஆபாசக் கும்பல்களுக்கு சரியான பாடம் கற்றுக் கொடுக்கப் போவதாகவும், இதுபோன்ற கும்பல்களால் பாதிக்கப்பட்டோர் தயங்காமல் முன்வந்து புகார் அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


திருச்சி எஸ்பியாக உள்ளவர் வருண்குமார். இவரது மனைவி வந்திதா பாண்டேயும் காவல்துறை அதிகாரிதான். அவர் புதுக்கோட்டை எஸ்பியாக உள்ளார். இருவர் குறித்தும், எக்ஸ் தளத்தில் திட்டமிட்டு சிலர் அவதூறாகப் பேசியும் எழுதியும் வருகின்றனர். குறிப்பாக வந்திதா பாண்டேவை ஆபாசமாக சித்தரித்தும் இவர்கள் போட்ட பதிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்தக் கும்பல்களின் திட்டமிட்ட ஆபாச தாக்குதல்களுக்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.




இந்த நிலையில் வருண் குமார் கொடுத்த புகாரின் பேரில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் உள்ளிட்டோர் மீது திருச்சி காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த பின்னணியில் தற்போது வருண் குமார் ஐபிஎஸ் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அந்த அறிக்கை விவரம்:


விளிம்புநிலை மக்களுக்காக செயலாற்றுகிறேன்:


நான் வருண்குமார் வீரசேகரன். பல் மருத்துவருக்கான படிப்பை முடித்திருந்தாலும் காவல்துறை மேலுள்ள பற்று காரணமாக 2010 ஆம் ஆண்டு யு பி எஸ் சி குடிமை பணிகள் தேர்வு எழுதினேன். அதில் அகில இந்திய அளவில் மூன்றாம் இடத்தை பிடித்திருந்தாலும் ஐபிஎஸ்ஐ தேர்ந்தெடுத்தேன். 2011 ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வாகி பயிற்சி முடித்து உதவி காவல் கண்காணிப்பாளராக அருப்புக்கோட்டை திருப்பத்தூர் மற்றும் அதிவிரைவுபடை சென்னையில் கடமையாற்றினேன். பின்னர் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று குடிமைப் பொருள் நுண்ணறிவு பிரிவு ராமநாதபுரம் மாவட்டம் திருவள்ளூர் மாவட்டம் சென்னையில் அலுவலக தாணியங்கி மற்றும் கணினிமயமாக்கல் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு மதுரை மண்டலம் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்துள்ளேன். தற்போது திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கடந்த  ஒரு வருடமாக பணிபுரிகிறேன்.


எனது 13 ஆண்டுகால ஐபிஎஸ் வாழ்க்கையில் எல்லா ஆண்டுகளிலும் அவுட் ஸ்டாண்டிங் ரேட்டிங் மட்டுமே உயர் அதிகாரிகளிடம் இதுவரை பெற்றுள்ளேன். இன்று ஒரு மாவட்ட பொறுப்பில் இருந்தாலும் கூட இராமநாதபுரத்தில் ஒரு எளிமையான பின்னணியில் இருந்து வந்தவன் நான். எனது தகப்பனார் வழி தாத்தா ஒரு தபால்காரராக பணிபுரிந்தார். எனது தாய் வழி தாத்தா திருச்சியில் விவசாய விதை வியாபாரம் செய்து வந்தார். இப்பேற்பட்ட சாமானிய சூழலில் இருந்து வந்த நான் பெண்கள் குழந்தைகள் விளிம்பு நிலை மக்கள் போன்ற சாமானியர்களின் பிரச்சினைகளை போக்க வேண்டும் என்று தீவிர முனைப்பில் செயலாற்றி வருகிறேன்.


அவதூறு பரப்பும் யூடியூபர்கள்




2021 ஆம் ஆண்டு யூடியூபர் ஒருவர் அரசியல் கட்சி பின்புலத்தோடு பொய் செய்திகளை பரப்பி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தினார். அப்போது திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த நான் அந்த youtube பதிவரை கைது செய்து பிரச்சனையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு குண்டர் சட்டத்தில் அடைத்தேன். சமீபத்தில் அதை யூடியூபர் பதிவு செய்த சர்ச்சையான அவதூறுகளால் சைபர் கரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். சட்ட அடிப்படையில் பணியாற்றியதற்காக அந்த யூடியூபர் சார்ந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் என்னை கடுமையாக (சில சாதிப் பெயர்களை குறிப்பிட்டு) சாடினார். அது விமர்சனத்தையும் தாண்டி தீவிர அவதூறு கோணத்தில் இருந்தது. எனவே அதற்கு எதிராக சிவில் மற்றும் கிரிமினல் டெபமஷன் நோட்டீஸ் என் வழக்கறிஞர் மூலமாக அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பினேன்.


நான் சட்டப்படி இந்த நோட்டீஸ் அனுப்பிய ஒரே காரணத்திற்காக என்னை தாண்டி என் குடும்பத்தினர்கள், பெண்கள், குழந்தைகள் என என்னை சார்ந்தவர்கள் மீது வசைகளையும் ஆபாசமான அவதூறான செய்திகளையும் அருவருப்பான வாக்கியங்களுடன் எக்ஸ் தளத்தில் பரப்பினர். என் குழந்தைகள் மற்றும் என் குடும்ப பெண்களின் புகைப்படங்களும் தரம் தாழ்ந்து ஆபாசமாக சித்தரிக்கப்பட்டது. இது ஒரு கட்டத்தில் என் குடும்பத்தினருக்கே கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு அச்சுறுத்தல் ஆக மாறியது. இவற்றில் ஈடுபட்ட ஒரு சில எக்ஸ் கணக்குகளை கீழே குறிப்பிட்டுள்ளேன்.


ஒருங்கிணைப்பாளர் தூண்டுதலில் நடக்கிறதா:




இவ்வாறு தொடர்ந்து ஆபாச சித்தரிப்பில் ஈடுபடும் இந்த கணக்குகளை ஆராயும்போது இவை அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தொடங்கி மாநில பொறுப்பாளர்கள் வரை முக்கிய நிர்வாகிகளின் தூண்டுதலால் இயக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. ஏனெனில் இவை அனைத்தும் போலி கணக்குகள் ஆகவும் தொடர்ந்து இதே வேலையை செய்து வருபவையாகவும் உள்ளன. இதில் பல போலி கணக்குகள் அந்த கட்சியின் தூண்டுதலின் பேரில் வெளிநாடுகளில் வாழும் தமிழ் தெரிந்த நபர்களுக்கு பணம் கொடுத்து ஆபாச பதிவுகளை பதிவிட உத்தரவிட்டதாக தெரிய வருகிறது. நான் இந்த விஷயத்தில் அளித்த மூன்று புகார்களில் மூன்று குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சைபர் க்ரைம் போலீசார் இதனை விசாரித்து வருகிறார்கள்.


நானும் எனது மனைவி மரியாதைக்குரிய வந்திதா பாண்டே அவர்களும் தமிழ்நாட்டில் மத்திய காவல் மண்டலத்தில் முக்கிய இரு மாவட்டங்களில் (திருச்சி, புதுக்கோட்டை) காவல் கண்காணிப்பாளர்களாக பணிபுரிகிறோம். இந்த சவாலான பணியில் நேர்மையாக கடமையாற்றினால் மக்களின் நன்மதிப்புகளோடு ஒரு சிலரின் பகையும் சம்பாதிக்க நேரம் என்பதை நாங்கள் அறிவோம். பொதுவாழ்வில் இருக்கும் எங்களுக்கு இது போன்ற தொடர் ஆபாச தாக்குதல் ஒரு பொருட்டே அல்ல. என்னதான் காவல்துறையில் உயர் பொறுப்பில் இருந்தாலும் நாங்களும் சராசரி மனிதர்கள் தான். ஒரு சாதாரண தகப்பன் மற்றும் தாயாக இது எங்கள் குழந்தைகளையும் குடும்பத்தினரையும் ஒரு அளவிற்கு பாதிப்பு உள்ளது.


தற்காலிகமாக விலகுகிறேன்:




நிஜ வாழ்வில் பலரை எதிர்கொள்ளும் சூழலில் இந்த இணைய கூலிப்படை எதிர்கொள்வது எங்களுக்கு பொருட்டல்ல. ஆனால் ஒரு சராசரி குடும்பமாக, நபராக எங்கள் மூன்று குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மீதான அக்கறைக்காக இந்த இணையதள உரையாடல்களில் இருந்து தற்காலிகமாக நானும் எனது மனைவியும் விலக முடிவு செய்துள்ளோம். எங்களது இந்த முடிவு தற்காலிகமானது என்ற போதும் நாங்கள் இதை பயத்தினாலோ அருவருப்பினாலோ மேற்கொள்ளவில்லை. போலி கணக்குகள் மூலம் பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் குழந்தைகளுக்கு கொலை மிரட்டல் விடும் அக்கிர புத்தியும் கொடூர எண்ணமும் கொண்டவர்கள் தான் இதற்கு அவமானப்பட வேண்டும்.


எங்கள் கையில் உள்ள பொறுப்பு மக்கள் எங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கை நாங்கள் மேற்கொண்டு வரும் பணியின் பொருட்டு இது போன்ற குறுக்கீடுகளை புறந்துள்ளுகிறோம். முகம் தெரியாத கோழைகளுக்கும் இணைய கூலிப்படைகளுக்கும் நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் தேவையில்லை. ஒரு காவல்துறை அதிகாரியாக நான் எனது கடமையை செய்ததற்கு எனது மனைவி குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரை தாக்க வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது. அது என்னை நேரடியாகவோ சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ள முடியாத கையாலாகதனத்தின் வெளிப்பாடாகவே பார்க்கிறேன். அதே நேரத்தில் ஒரு சாதாரண குடிமகனாக இணையத்தில் எழுந்துள்ள இது போன்ற கூலிப்படை தாக்குதலை கண்டு மிகவும் அக்கறையும்  அறச்சீற்றமும் கொள்கிறேன். 


ஒரு பெண் எஸ்.பிக்கே இந்த நிலை:




மாவட்ட கண்காணிப்பாளராக உள்ள பெண்ணையே இவர்கள் இந்த அளவுக்கு தாக்குகிறார்கள் என்றால் சாதாரண மக்களையும் பெண்களையும் என்ன செய்வார்கள். இன்றுவரை எந்த ஆபாச பதிவுகளையும் நீக்கவில்லை, வருத்தம் தெரிவிக்கவில்லை, மன்னிப்பும் கேட்கவில்லை எனும் போது இந்த கூட்டத்திற்கு சட்டத்தின் முன் தகுந்த பாடம் புகட்ட வேண்டி உள்ளது. இது சம்பந்தமாக சைபர் பிரிவில், மூன்று குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இதுவரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் விசாரணையும் கைது நடவடிக்கையும் தொடரும். இதில் ஈடுபட்ட நபர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்று தருவது உறுதி.


ஒரு குடும்ப நபராகவும் காவல் அதிகாரியாகவும், சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் சமூக விரோத கும்பல்களின் செயல்பாட்டை முறியடிப்பது எனது கடமை. இது போன்ற தாக்குதல்களுக்கு ஆளாகும் சாமானிய மக்கள் எந்தவித அச்சத்திற்கும் ஆட்படாமல் தானாக முன்வந்து புகார் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஆபாச மற்றும் அவதூறு பரப்பி அனைத்து போலி கணக்குகளை அதன் பின் ஒளிந்து கொண்டு ஆபாசம் பரப்பும் விஷமிகளையும் அவர்கள் கூலிக்காக தூண்டிவிடும் அந்த கட்சி பொறுப்பாளர்களையும் வழக்கு தொடர்ந்து சட்டத்தின் முன் நிறுத்துவேன். இதுபோக இந்த கட்சியில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இரண்டு பொறுப்பாளர்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடர உள்ளேன். எந்தவித சமரசமும் வேண்டி இந்த சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.


ஆன்லைன் அப்யூஸ் என்பது சட்டத்தின் இரும்பு கரங்களால் ஒடுக்கப்பட வேண்டிய ஒன்று. அதை பொறுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை. குறிப்பாக பெண்களுக்கு, குழந்தைகளுக்கும் அறவே இல்லை. உங்கள் அருகாமையில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆன்லைன் அப்யூஸ் பற்றிய புகார்களை உடனடியாக எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யவும். மேலும் நேஷனல் கமிஷன் ஃபார் உமன் உதவி எண் 7827170170 இதர உதவி எண்கள் 100, 112, 181, 1091, 1098, 1930 மூலமும் புகார்களை தெரிவிக்கலாம். சமூக வலைத்தளங்கள் இன்று குழந்தைகள் உட்பட அனைவரும் பயன்படுத்தும் சூழலில் நாம் அதில் இது போன்ற அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்பாகவும் விழிப்புணர்வு உணர்வுடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் வருண் குமார் ஐபிஎஸ்.


புகைப்படங்கள்: Varun Kumar Ips/Facebook


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்