பாஜகவுக்கு எதிரான மக்கள் தீர்ப்பு.. மகத்தானது, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

Jun 04, 2024,09:37 PM IST

சென்னை: இந்த தேர்தல் முடிவுகள் என்பது, அரசியல்சாசனத்தை மாற்றிவிடலாம் – வெறுப்பு பரப்புரைகளால் மக்களைப் பிளவுபடுத்தலாம் என்று நினைத்த பா.ஜ.க.வுக்கு எதிரான மக்களுடைய தீர்ப்பு! இதுதான் எங்கள் கூட்டணியின் வெற்றி! பா.ஜ.க.வின் பணபலம் – அதிகார துஷ்பிரயோகம் – ஊடகப் பரப்புரை ஆகிய அனைத்தையும் உடைத்தெறிந்து பெற்றுள்ள இந்த வெற்றி மகத்தான வெற்றியாக; வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாக அமைந்திருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


லோக்சபா தேர்தல் முடிவுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், இந்த மாபெரும் வெற்றிக்குக் காரணமான அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கும் தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளுக்கும் கோடான கோடி நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். 'பாசிசத்தை வீழ்த்தி இந்தியாவைக் காப்போம்' என்ற முழக்கத்தோடு பரப்புரைப் பயணத்தைச் செய்த தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், செயல்வீரர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்!


கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீதமிருந்த ஒரு தொகுதியையும் சேர்த்து நாற்பதுக்கு நாற்பதையும் தமிழ்நாட்டு மக்கள் வழங்கி இருக்கிறார்கள். அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணியை ஜனநாயகச் சக்திகள் அனைவரும் சேர்ந்து உருவாக்கினோம். 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று கூறி, தங்களுக்கு யாருமே எதிரியாக இல்லை என்ற பிம்பத்தை பா.ஜ.க. ஏற்படுத்தியது.




ஆனால், ஆட்சி அமைக்கும் தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைக் கூட பெற முடியாத அளவுக்கு பா.ஜ.க. இப்போது தள்ளப்பட்டிருக்கிறது. அது மாதிரிதான் இப்போதுவரை செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்புகூட கருத்துக்கணிப்பு என்ற பெயரில் உளவியல் ரீதியான தாக்குதலை பா.ஜ.க. தொடுத்தது. ஆனால் இந்த தேர்தல் முடிவுகள் என்பது, அரசியல்சாசனத்தை மாற்றிவிடலாம் – வெறுப்பு பரப்புரைகளால் மக்களைப் பிளவுபடுத்தலாம் என்று நினைத்த பா.ஜ.க.வுக்கு எதிரான மக்களுடைய தீர்ப்பு! இதுதான் எங்கள் கூட்டணியின் வெற்றி!


பா.ஜ.க.வின் பணபலம் – அதிகார துஷ்பிரயோகம் – ஊடகப் பரப்புரை ஆகிய அனைத்தையும் உடைத்தெறிந்து பெற்றுள்ள இந்த வெற்றி மகத்தான வெற்றியாக; வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாக அமைந்திருக்கிறது! தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியான பிறகு - இந்திய ஜனநாயகத்தையும் அரசியல்சாசனத்தையும் காக்கத் தேவையான அரசியல் செயல்பாடுகளைத் தி.மு.க. தொடர்ந்து முன்னெடுக்கும்.


முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவுவிழா ஆண்டு இது. நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியைத் தலைவர் கலைஞருக்குக் காணிக்கை ஆக்குவோம் என்று சொல்லி இருந்தேன். இந்தியாவிலேயே 75 ஆண்டுகளைக் கடந்த ஒரே மாநிலக் கட்சியான தி.மு.க.வின் இந்தத் தேர்தல் வெற்றியை - இந்த இயக்கத்தை ஐம்பது ஆண்டுகாலம் கட்டிக்காத்து இயக்கிய தலைவர் கலைஞருக்கு நான் காணிக்கை ஆக்குகிறேன் என்றார் முதல்வர் ஸ்டாலின்.


இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க முயன்றால் நீங்கள் பிரதமர் பதவிக்குப் போட்டியிடுவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, கலைஞர் சொன்னதை தான் நான் திரும்ப திரும்ப சொல்லியிருக்கிறேன். என் உயரம் எனக்கு தெரியும். முதலில், தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. அது வெளிவந்த பிறகு அந்தக் கருத்தைப் பற்றிப் பிறகு பேசலாம் என்றார்.


நாற்பதுக்கு நாற்பதை எதிர்பார்த்தீர்களா என்ற கேள்விக்கு, நாங்கள் எதிர்பார்த்தோம். மோடியின் எதிர்ப்பு அலை இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருக்கிறது. அதே போல், இன்று தமிழ்நாட்டில் முழு அளவிற்கு எதிர்ப்பு அலை இருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்றார் முதல்வர் ஸ்டாலின்.


நாளை டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க தானும் டெல்லி செல்லவிருப்பதாகவும் அப்போது முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.


கமல்ஹாசன் சந்திப்பு




இதற்கிடையே, திமு கூட்டணியின் வெற்றிச் செய்தியைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவாலயத்திற்கு விரைந்து வந்தார். அவரை வாசலில் நின்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார். பின்னர் உள்ளே சென்ற கமல்ஹாசன், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவருக்கு புத்தகம் ஒன்றையும் பரிசாக அளித்தார்.


லோக்சபா தேர்தல் சமயத்தில் திமுக கூட்டணியில் இணைந்தார் கமல்ஹாசன். அவருக்கு திமுக சார்பில் ராஜ்யசபா சீட் ஒன்று ஒதுக்கப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்