சென்னை: தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த மாதக் கடைசியில் முதல்வர் வெளிநாடு செல்லத் திட்டமிட்டுள்ளார். அதற்கு முன்பாக அமைச்சரவையில் சிறிய அளவிலான மாற்றத்தை செய்ய அவர் திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டது. சில அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்படலாம் என்றும் சில நாட்களாக பேச்சு அடிபட்டு வந்தது.
குறிப்பாக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நீக்கப்படக் கூடும் என்ற பேச்சும் இருந்து வந்தது. ஆனால் அந்த அளவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர கதியில் செயல்பட மாட்டார் என்ற எதிர்பார்ப்பும் சிலரிடம் இருந்தது.
சா.மு.நாசர் நீக்கம் - டிஆர்பி ராஜா சேர்ப்பு
இந்த நிலையில் தற்போது அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் எல்லோரும் எதிர்பார்த்தது போல பிடிஆர் பழனிவேல்தியாகராஜன் பதவிக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. மாறாக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் மட்டும் நீக்கப்பட்டுள்ளார். புதிய அமைச்சராக மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையின் பேரில் தமிழ்நாட்டு அமைச்சரவையில் மன்னார்குடி எம்எல்ஏ டிஆர் பி ராஜா அமைச்சராக நியமிக்கப்படுகிறார். இதற்கான ஒப்புதலை ஆளுநர் வழங்கியுள்ளார். இவரது பதவியேற்பு விழா மே 11ம் தேதி காலை 10. 30 மணிக்கு ராஜ்பவனில் நடைபெறும்.
அதேபோல முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் ஆகியுள்ளநிலையில் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்படும் முதல் அமைச்சர் சா.மு.நாசர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
உதயநிதி தோழன் டிஆர்பி ராஜா
புதிய அமைச்சராகும் டிஆர்பி ராஜா, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தோழர் ஆவார். உதயநிதியின் நெருங்கிய நண்பர்களாக வலம் வருவது அன்பில் மகேஷ், டிஆர்பி ராஜா ஆகியோர்தான். இருவரும் தற்போது அமைச்சராகியுள்ளனர். மொத்தத்தில் 3 பேருமே அமைச்சர்களாக உள்ளனர். இதனால் புதிய வகை அதிகார வரிசை திமுகவில் உருவாகி வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எதிர்வரும் சட்டசபைத் தேர்தலை கருத்தில் கொண்டு இப்போதே திமுக தனது வியூகங்களை வகுக்க ஆரம்பித்து விட்டதா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. கருணாநிதி காலத்தில் பெரும்பாலும் மூத்த தலைமுறையினரே கோலோச்சி வந்தனர். இளம் தலைமுறைக்கு அத்தனை சீக்கிரம் பதவி வந்து விடாது. ஆனால் ஸ்டாலின் வித்தியாசமாக இருக்கிறார். உதயநிதிக்கு மிகவும் இளம் வயதிலேயே அமைச்சர் பதவியைக் கொடுத்து விட்டார். தற்போது அவரது தோழர்களுக்கும் அமைச்சர் பதவியைக் கொடுத்துள்ளார்.
பழனிவேல் தியாகராஜன் தொடர்கிறார்
முன்னதாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதவி குறித்து பல்வேறு பேச்சுக்கள் நிலவி வந்தன. அவரது ஆடியோ பேச்சுக்களே இதற்குக் காரணம். ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுத்தால் அவர் சொன்னது உண்மையாகி விடும். மேலும் இதை வைத்தே பாஜக ஒரு ஆட்டம் காட்டி விடும். மக்கள் மத்தியிலும் கெட்ட பெயர் ஏற்பட்டு விடும் என்று திமுக தலைமை கருதுகிறது. எனவே பிடிஆர் குறித்த முடிவு ஏதும் இப்போதைக்கு எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
{{comments.comment}}