சென்னை: பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள முதல் அறிக்கையில் திமுக அரசை கடுமையாக விமர்சித்து, திமுக அரசை வீழ்த்த சபதம் ஏற்போம் என்று பாஜகவினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
நடைபெற்ற பிரம்மாண்ட பதவியேற்பு விழாவில் தமிழக பாஜக மாநில தலைவராக பதவியேற்றேன். இந்த பொறுப்பை எனக்கு வழங்கிய கட்சி தலைமைக்கும் தொண்டர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.
விக்சித் பாரத் 2047 அதாவது வளர்ச்சி அடைந்த பாரதம் 2047 இன் கீழ் நமது தமிழகத்தின் வலுவான எதிர்காலத்தை உறுதி செய்யும் வகையில் எண்ணற்ற வளர்ச்சி திட்டங்களை வாரி வழங்கி வரும் நமது மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது உள்ளத்தில் தமிழகத்திற்கும் தமிழ் மக்களுக்கும் சிறப்பிடம் கொடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் தமிழரின் அடையாளமான செங்கோலை நிறுவியது, நமது தமிழ் சமூகத்தின் பழம்பெருமை வாய்ந்த ஆன்மீக பாரம்பரிய பிணைப்புகளை கொண்டாடும் வகையில் காசி தமிழ் சங்கமம் என்ற கலாச்சார நிகழ்வை அறிமுகப்படுத்தியது, உலக அரங்குகளில் நமது தொன்ம வாய்ந்த தமிழ் நூல்களை மேற்கோள் காட்டி உரையாற்றுவது என அரசியலுக்கு எல்லாம் அப்பாற்பட்டு நமது தமிழ் மொழியை நெஞ்சார நேசிக்கும் ஒரு உன்னத தலைவர் நமது மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.
அண்ணார் வகுத்த பாதையில் சென்று பணியாற்றும் வாய்ப்பினை பெற்றதை பெரும் பாக்கியமாக நான் கருதுகிறேன். நமது கட்சிக்காகவும் நமது கட்சியின் உயர்வான கொள்கைக்கு கொள்கைகளுக்காகவும் தமிழகத்தின் வளர்ச்சி குறித்த நமது பாரத பிரதமரின் எல்லையில்லா கனவுகளுக்காகவும் நமது கட்சித் தொண்டர்களின் நலனுக்காகவும் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் அயராது உழைப்பேன் என உளமாற உறுதி கூறுகிறேன்.
மிக முக்கியமாக இந்த நேரத்தில் நாம் உயரிய சித்தாந்தத்திற்காகவும் நமது புனித பாரத மண்ணையும் மக்களையும் காப்பதற்காகவும் எத்தனையோ கடுமையான சவால்களை சந்தித்து உயிர் தியாகம் செய்த எண்ணற்ற புனித ஆன்மாக்களுக்கு வணக்கம் கூறி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி அவர்களது தியாகம் என்றும் வீணாகாது என்று சபதமிட்டு எனது பொறுப்பினை ஏற்க விரும்புகிறேன்.
இந்த புனித நாளில் நாம் ஒரு சபதம் ஏற்போம். மக்கள் விரோத திமுக ஆட்சியினால் தமிழகத்தை கொடிய கருமேகங்கள் இன்று சூழ்ந்திருக்கிறது. நமது தமிழகப் பெண்களை பாதுகாக்க தவறிய இந்த கையாலாகாத அரசை, நமது பிள்ளைகளுக்கு நற்கல்வி கிடைத்து அவர்கள் முன்னேறி விடக்கூடாது என துடிக்கும் இந்த கேவல அரசை, ஊற்றிக் கொடுத்து பல அப்பாவி குடும்பங்களுக்கு உலை வைக்கும் இந்த உதவாக்கரை அரசை, ஊழலில் கொழுத்துப் போய் கொள்ளையடிக்கும் இந்த திருட்டு மாடல் அரசை, திக்கெட்டும் புகழ் ஒளி வீசிய நமது தமிழகத்தை இருளில் தள்ளிய இந்த கொடிய திமுக அரசை அதிகாரத்திலிருந்து துரத்தி அடிப்போம்.
மக்கள் பணியே மகேசன் பணி என்ற தெய்வீக குறிக்கோளை உந்துசக்தியாக கொண்டு நரிகளின் ராஜ்யத்தை நடத்திக் கொண்டிருக்கும் தீய சக்தி திமுகவை விரட்டி அடிப்போம் என்ற சூளுரையோடு 2026 இல் சட்டமன்றத் தேர்தல் எதிர் கொள்ள தயாராகும் தமிழக மக்களுக்கு விடிவு காலத்தைப் பெற்றுத் தந்திட தேசிய ஜனநாயக கூட்டணியும் ஆட்சி அமைந்திட அயராது உழைப்போம் அயராது உழைப்போம் அயராது உழைப்போம் என்று அவர் கூறியுள்ளார்.
பாஜக தலைவர்கள் திமுக அரசை விமர்சிக்கும்போது திருட்டு திராவிட மாடல் அரசு என்றுதான் விமர்சிப்பார்கள். ஆனால் நயினார் நாகேந்திரன் தலைவராக பொறுப்பேற்ற பிறகு வெளியிட்ட முதல் அறிக்கையிலேயே திராவிட என்ற பெயரை தவிர்த்துள்ளார். இது கவனிப்புக்குரியதாகியுள்ளது.
{{comments.comment}}