சென்னை: வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வக்பு திருத்த சட்டப்படி புதிய உறுப்பினர் நியமனமோ, சொத்துக்களின் நிலம் வகைப்படுத்துதலோ கூடாது எனவும் அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா கடந்த ஏப்ரல் மூன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு கட்சிகளின் எதிர்பார்ப்புக்கு மத்தியில்
குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்த மசோதா பெரும்பான்மை அடிப்படையில் நிறைவேற்றப்பட்டு, அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. பின்னர் இந்த வக்பு சட்டம் குடியரசு தலைவர் ஒப்புதலுடன் தற்போது சட்டமாக நடைமுறையில் உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் திமுக, காங்கிரஸ், திர்ணாமுல், சமாஜ்வாதி, ஆர்.ஜே.டி., ஜே.டி.யு., ஓவைசி எம்.பி.,ஆம் ஆத்மி, ஒய். எஸ்.ஆர்.சி.பி.,த.வெ.க., மற்றும் தனிநபர் என மொத்தம் 73 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் 72 ரீட் மனுகளும் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த அனைத்து மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் வாதிட்டனர். இதில் வக்பு வாரிய திருத்த சட்டம் என்பது ஜனநாயகத்திற்கு எதிரானதாகும். இந்த விவகாரத்தில் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 26 கீழ் விரிவாக ஆய்வு செய்ய வேண்டும். மேலும் இந்த நடவடிக்கை என்பது இஸ்லாமியர்கள் மற்றும் மதரீதியான சட்டத்திற்கு முற்றிலும் புறம்பானதாகும் எனக் கூறினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியது. அதில் வக்பு வாரியத்தில் இந்துக்கள் உறுப்பினராக இருந்தால், இந்து சமய அறநிலையத் துறையில் முஸ்லிம்கள் உறுப்பினர்களாக இருப்பார்களா.. இப்படி ஒரு நடைமுறை இருக்கிறதா என கேள்வி எழுப்பியது. இரண்டு நாட்களாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மதியம் 2 மணிக்குள் வாதங்கள் நடைபெறும் என ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் வக்பு சட்டத் திருத்தத்திற்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம். மேலும் வக்பு திருத்த சட்டத்தின்படி, எந்த உறுப்பினர் நியமமும் கூடாது. ஏற்கனவே வக்பு என அறிவிக்கப்பட்ட சொத்துகளின் நிலம், வகைப்படுத்துதலும் கூடாது. உறுப்பினர் நியமனம் அனைத்திலும் தற்போதைய நிலை தொடர வேண்டும். மத்திய- மாநில அரசுகள், வக்பு வாரியம், 7 நாட்களில் பதில் அளிக்க வேண்டும் எனவும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
{{comments.comment}}