"ஆணாதிக்க கும்பலால் குறி வைக்கப்பட்டேன்".. புதுச்சேரி பெண் அமைச்சர் பரபர புகார்.. ராஜினாமா!

Oct 10, 2023,05:16 PM IST
- மஞ்சுளா தேவி

புதுச்சேரி: புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் சந்திர பிரியங்கா. இவர் திடீரென தனது  பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் இவர் ராஜினாமா செய்வதறகாக கூறியுள்ள காரணங்கள்தான்.

"தலித்" மற்றும் "பெண்" ஆகிய இரு காரணங்களுக்காக,  சாதிய ரீதியிலும், பாலின ரீதியிலும் தாக்குதலுக்கு உள்ளானதாக  உணர்ந்தேன். மேலும் ஆணாதிக்க கும்பலால் குறி வைக்கப்பட்டேன். தலித் மக்களுக்கு துரோகம் செய்ய வேண்டாம் என தனது ராஜினாமா கடிதத்தில் கூறியுள்ளார் சந்திர பிரியங்கா.

முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் சந்திரகாசுவின் மகள்தான் சந்திர பிரியங்கா. அமைச்சரானது முதல் சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்தார். பொதுமக்களுடன் இயல்பாக கலந்து பேசுவது என்று மக்கள் மனதைக் கவர்ந்தவராக வளர்ந்து வந்தார். புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து வந்த  சந்திர பிரியங்கா தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் ரங்கசாமிக்கு அனுப்பியுள்ளார். அதை அவர் துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.






சந்திரபிரியங்கா தனது ராஜினாமா கடிதத்தில் கூறியிருப்பதாவது:

என் அன்பான புதுச்சேரி காரைக்கால் நெடுங்காடு மக்களுக்கு உங்கள் சந்திரா பிரியங்காவின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

என்னை சுற்றி பின்னப்பட்டுள்ள வலையில் சிக்கியுள்ள நிலையில் நான் இக்கடிதத்தினை எழுதுகிறேன். ஒரு சட்டமன்ற உறுப்பினராக மாநில அமைச்சராக என் பணியினை மன திருப்தியுடனும் மக்களின் ஆதரவுடனும் இந்த நிமிடம் வரை ஓயாமல் செய்து வருகிறேன்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்தும் பெண்களும் அரசியலுக்கு வந்தால் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் என பொதுவாக கூறுவார்கள். ஆனால் கடின உழைப்பும், மன தைரியமும் இருந்தால் இதைப் பற்றி கவலைப்படாமல் களத்தில் நீந்தலாம் என்பதற்கான பல முன் உதாரணங்கள் வரலாற்றில் உள்ளதை பார்த்து களமிறங்கி கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி மக்களுக்காக இரவு பகலென ஓடி ஓடி உழைத்து வருகிறேன் .

மக்கள் செல்வாக்கு மூலம் மன்றம் நுழைந்தாலும் சூழ்ச்சி அரசியலிலும் ,பணம் என்ற பெரிய பூதத்தின் முன்னும் போராடுவது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்ந்து கொண்டேன் . தலித் பெண் என இரு பெருமைகளோடு இருந்த எனக்கு அதுதான் மற்றவர்களின் உறுத்தல் என்பது தெரியாமல் போனது. தொடர்ந்து சாதிய ரீதியிலும் பாலின ரீதியிலும் தாக்குதலுக்கு உள்ளதாக உணர்ந்தேன்.






சொந்தப் பிரச்சினைகளை ஆணாதிக்க கும்பல் கையில் எடுத்து காய் நகர்த்துதல் நாகரீகம் அல்ல. ஆனால் தொடர்ந்து குறிவைக்கப்பட்டேன். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக்கொள்ள இயலாதல்லவா..  கண்மூடித்தனமாக அமைச்சராக என் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்பவர்களுக்கு நான் அமைச்சராக பொறுப்பேற்றது முதல் என் துறைகளில் என்னென்ன மாற்றங்கள் முன்னேற்றங்கள் சீர்பாடுகள் செய்துள்ளேன் என்பதை விரைவில் பட்டியலாக சமர்ப்பிக்கிறேன் என உறுதியளிக்கிறேன் .

என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த மக்களுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன் ஆனால் ஆணாதிக்க சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி அமைச்சராக நீடிக்க இயலாது என்பதை உணர்ந்து எனது அமைச்சர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன் இதற்காக எனது தொகுதி மக்களிடம் நான் மனமார்ந்த மன்னிப்பினை கேட்டுக்கொள்கிறேன். மேலும் என் மக்களுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினராக என் பணியினை தொடர்ந்து ஆற்றுவேன் என உறுதி அளிக்கிறேன்.

எனக்கு இப்பதவியினை கொடுத்த மாண்புமிகு முதலமைச்சர் ஐயா அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அவருக்கு எனது ஒரு தாழ்மையான வேண்டுகோளை முன் வைக்கிறேன். புதுச்சேரியில் பெரும்பான்மையாக உள்ள இரு சமூகங்கள் வன்னியர் மற்றும் தலித் இச்சமூகங்களில் இருந்து வந்துள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் தம் மக்களுக்காக அயராது பாடுபட்டு வருகிறார்கள். அச்சமுகங்கள் மேலும் மேம்பட காழ்ப்புணர்ச்சியில்லாத அரசியலை உறுதி செய்ய காலியாகும் இந்த அமைச்சர் பதவியை வன்னியர்,  தலித் அல்லது சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு அளித்து நியாயம் செய்ய வேண்டும் .






மக்கள் பின்புலம் இல்லாவிட்டாலும் பணத் திமிரினாலும் அதிகார மட்டத்தில் உள்ள செல்வாக்கினாலும் பதவிக்கு வந்துவிட துடிப்பவர்களுக்கு இப் பதவியினை கொடுத்து பெரும்பான்மையாக உள்ள வன்னியர், தலித் மக்களுக்கு துரோகம் செய்ய வேண்டாம் .

எனக்கு வாக்களித்து என்னை சட்டமன்ற உறுப்பினர் ஆக்கி அரசுக்கு முழு ஆதரவு அளித்து வரும் என் மக்களுக்கு எவ்வித இடையஞ்சலும் அளிக்காமல் தாழ்த்தப்பட்ட தொகுதியான என் நெடுங்காடு தொகுதிக்கு மக்கள் நல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டுகிறேன்.

இதுநாள் வரையில் அமைச்சர் பணியினை திறம்பட செய்ததற்கு உறுதுணையாக இருந்த அரசு அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும், எனக்கு  உறுதுணையாக இருக்கும் எனது தொகுதி மக்களுக்கும், என் நலன் விரும்புகளுக்கும் குறிப்பாக என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து அம்மாக்கள் ,
சகோதரிகள், தோழிகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை இரு கரம் கூப்பி தெரிவித்துக் கொள்கிறேன்.

இறுதியாக பெண்களுக்கான முன்னுரிமை அதிகாரத்தில் பங்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு என மேடைகளில் மட்டுமே முழங்கி கொண்டிருப்பவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்ளவும் விரும்புகிறேன். நன்றி என இக்கடிதத்தில் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்