சென்னை: விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பது தொடர்பாக 11 கட்டுப்பாடுகளை சென்னை காவல்துறை விதித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிவுரைகள் அடங்கிய குறிப்பு:
- விநாயகர் சிலைகள் நிறுவுமிடத்தின் நில உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத்துறை அல்லது அரசுத் துறையிடமிருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
- தீயணைப்புத்துறை, மின்வாரியம் ஆகியவற்றிடமிருந்து தடையில்லாச் சான்றுகள் பெற்றிருக்க வேண்டும்.
- சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரியிடம் விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கான படிவங்களைப் பூர்த்தி செய்து, அதில் குறிப்பிட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை கடைப்பிடிக்க உறுதியளித்து அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
- நிறுவப்படும் சிலையானது அடித்தளத்திலிருந்து மேடை வரை 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது.
- பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் அருகில் சிலைகள் நிறுவப்படுவதை தவிர்க்க வேண்டும்.
- மதவாத வெறுப்புணர்ச்சியைத் தூண்டும் வகையிலோ, பிற மதத்தினர் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலோ முழக்கவிடுவதற்கும், கோஷமிடுவதற்கும் எவ்விதத்திலும் இடம் தரக் கூடாது.
- சிலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இரு தன்னார்வலர்களை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் நியமிக்க வேண்டும்.
- நிகழ்ச்சி நடக்கும் வளாகத்தில் எவ்வித அரசியல் கட்சிகள் அல்லது மத ரீதியான தலைவர்கள் ஆகியோருக்கு ஆதரவான பலகைகள், விளம்பரத் தட்டிகள் வைக்கக் கூடாது.
- தீ பாதுகாப்பு விதிமுறைகளும், விதிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். மின்சார சாதனங்கள், பந்தல்கள் அவ்வப்போது கண்காணித்து விபத்துகள், அசம்பாவிதங்கள் நிகழாமல் கவனித்துக் கொள்ள வேண்டும்.
- விநாயகர் சிலைகளைக் கரைக்க காவல்துறை அனுமதிக்கப்பட்ட நாட்களில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை அனுமதிக்கப்பட்ட நான்கு சக்கர வாகனங்களில் எடுத்துச் சென்று அமைதியான முறையில் கரைக்க வேண்டும்.
- விநாயகர் சிலை நிறுவப்பட்ட இடங்கள், ஊர்வலப் பாதைகள் மற்றும் கரைப்பிடங்களில் பட்டாசுகள் வெடிக்க அனுமதி இல்லை
{{comments.comment}}