பாரீஸ்: பாரீஸ் நகரில் தொடங்கியுள்ள செயற்கைத் நுன்னறிவு தொழில்நுட்பம் தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி உரையாடியபோது, நமது அன்றாட வாழ்க்கையில் முக்கியப் பங்காற்ற தொடங்கி விட்டது செயற்கைத் நுன்னறிவுத் தொழில்நுட்பம் என்று தெரிவித்தார்.
மனித வாழ்க்கையை ஒருங்கிணைக்கும் மிகப் பெரிய வேலையை ஏஐ செய்வதாகவும் அவர் தெரிவித்தார். பாரீஸில், ஏஐ தொடர்பான மாநாடு தொடங்கியுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்று உரையாற்றியுள்ளார். இதற்காக அவர் பாரீஸ் சென்றார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானும், பிரதமர் மோடியும் இணைந்து மாநாட்டைத் தொடங்கி வைத்தனர்.
மாநாட்டில் பிரதமர் மோடி பேசிய உரையிலிருந்து:
மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் மிக முக்கியப் பங்காற்றத் தொடங்கி விட்டது ஏஐ. செயற்கை நுன்னறிவால் பல நல்ல விஷயங்கள் உள்ளன என்றாலும் அதன் பாதகங்களையும் நாம் கவனத்தில் கொள்ளத் தவறி விடக் கூடாது.
நமது திறமைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து இந்தத் தொழில்நுட்பத்தை மேலும் செழுமைப்படுத்த வேண்டும். நம்பிக்கைக்குரிய ஒரு தொழில்நுட்பமாக இது மாற வேண்டும். இதில் ஒளிவு மறைவு இருக்கக் கூடாது. உலகத்துக்கும், மனித குலத்துக்கும் இது பலன் தர வேண்டும். மக்களை மையமாக வைத்து இந்தத் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும். சைபர் பாதுகாப்பு, தவறான தகவல்களை பரப்புவது, போலியான உருவங்களை உலவ விடுவது போன்ற பிரச்சினையும் உள்ளன. நாம் அதையும் தீர்க்க வேண்டும்.
பல கோடி மக்களின் வாழ்க்கையை ஏஐ மேம்படுத்த உதவும் என்பதில் நிச்சயம் சந்தேகம் இல்லை. மருத்துவம், கல்வி, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏஐ தொழில்நுட்பம் நமக்கு பெரும் உதவி செய்யும்.
ஏஐ தொழில்நுட்பம் வந்தால் வேலையிழப்பு ஏற்படும் என்று அஞ்சப்பட்டது. ஆனால் எந்த ஒரு வேலையும் ஒரு தொழில்நுட்பத்தால் அழியாது. மாறாக அது மேம்படவே செய்யும். புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். அதை நாம் பார்த்து வருகிறோம்.
இந்தியாவில் கிட்டத்தட்ட 1.4 பில்லியன் மக்களுக்கு மிகவும் குறைந்த செலவில் நாங்கள் டிஜிட்டல் பொது அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்துள்ளோம். எங்களது பொருளாதாரத்தை நவீனப்படுத்தவும், சீரமைக்கும், ஆட்சி முறையை சிறப்பாக்கவும், பல கோடி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் இது உதவியுள்ளது.
டிஜிட்டல் காமர்ஸை அனைவருக்கும் எடுத்துச் செல்ல இந்தத் தொழில்நுட்ப் உதவியுள்ளது. இந்தியாவின் தேசிய செயற்கை நுன்னறிவுத் தொழில்நுட்ப இலக்கை அடைய இது உதவியுள்ளது. அனைவரும் உகந்த தொழில்நுட்பமாக நாங்கள் மாற்றி வருகிறோம். ஏஐ தொழில்நுட்பத்தை சரியான முறையில் பயன்படுத்துவதிலும், தொழில்நுட்ப சட்ட ரீதியான தீர்வுகளை அடைவதிலும் இந்தியா முன்னோடியாக உள்ளது என்றார் பிரதமர் மோடி.
{{comments.comment}}