மதுரை: மதுரை மாவட்டத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கியது.
அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க நாளை மதியம் 12 வரை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் எனவும் அறிவித்துள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை வரும் ஜனவரி 15ஆம் தேதி நாடு முழுவதும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்தப் பொங்கல் பண்டிகையில் தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் விதமாக ஒவ்வொரு வருடமும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும். இந்த நிலையில் இந்த வருடம் உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஜனவரி 17ஆம் தேதியும், பாலமேடு ஜல்லிக்கட்டு 16ஆம் தேதியும், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 15ஆம் தேதியும் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.
இந்த போட்டிகளில் பங்கு பெறுவதற்காக காளைகளும், மாடுபிடி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த போட்டிகளை சிறப்பாக செயல்படுத்த தமிழக அரசும் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் 700 க்கும் மேற்பட்ட காளையர்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகளும் ஆடுகளத்தில் விளையாட தயாராக உள்ளனர்.
இந்நிலையில் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்கான முன்பதிவு இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கியது. இந்த ஆன்லைன் முன்பதிவு நாளை மதியம் 12 மணி வரை நடைபெறும். ஜல்லிக்கட்டில் பங்கு பெறுவோர் madurai.nic.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.
காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் அவர்களுக்கான தனித்தனியாக உள்ள பிரிவுகளில் முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
காளைகளுக்கான முன்பதிவு தகுதிகள்:
ஜல்லிக்கட்டில் பங்குபெறும் காளைகளின் நிறம்,கொம்பின் நீளம், நாட்டு மாடா அல்லது கலப்பின மாடா, காளைகளுக்கு முறையான தடுப்பூசி செலுத்தப்பட்டதா.. அதன் விவரம், கால்நடை மருத்துவ சான்றிதழ்கள், காளைகளின் உரிமையாளர் பெயர் மற்றும் புகைப்படம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களுடன் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
மாடுபிடி வீரருக்கான தகுதிகள்:
ஜல்லிக்கட்டில் பங்குபெறும் மாடு பிடி வீரர்களின் பெயர், வயது, முகவரி, உயரம் எடை, ரத்த மாதிரிகள், மருத்துவ சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களுடன் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இது மட்டுமல்லாமல் போட்டியில் பங்குபெறும் காளைகளை விதிமுறைப்படி துன்புறுத்தலில் ஈடுபட மாட்டேன் என்ற உறுதிமொழி ஒப்பந்தமும் களையர்களிடம் பெறப்படுகிறது. தற்போது காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.
{{comments.comment}}