அமீர் Vs ஞானவேல்ராஜா.. வலுக்கும் எதிர்ப்பு.. "கார்த்தி ஏன் அமைதி காக்கிறார்".. இயக்குநர்கள் ஆவேசம்!

Nov 26, 2023,12:00 PM IST

சென்னை: இயக்குநர் அமீர் மீது, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறியுள்ள புகார்கள் குறித்து நடிகர் கார்த்தி மெளனம் சாதிப்பது ஏன் என்ற கேள்வியை பல்வேறு இயக்குநர்கள் முன்வைத்துள்ளனர். மேலும்  அமீருக்கு ஆதரவாக முன்னணி இயக்குநர்கள் குரல் கொடுத்துள்ளனர்.


அமீர் இயக்கத்தில் வெளி வந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் பருத்தி வீரன். இப்படம்தான் நடிகர் கார்த்தியின் முதல் படமாகும். முதல் படத்திலேயே கார்த்தியை பிரமாதமான நடிகராக வெளிக் கொண்டு வந்திருப்பார் அமீர். இன்று வரை கார்த்தியின் முத்திரை பதித்த முதல் பத்து படங்களைப் பட்டியலிட்டால் பருத்தி வீரன்தான் முதலிடத்தில் இருக்கும்.


அதேபோல இப்படத்தில் முத்தழகி என்ற கேரக்டரில் நடிகை பிரியாமணி வாழ்ந்திருப்பார். இந்தப் படம் அவருக்கு தேசிய அளவில் சிறந்த நடிகை என்ற விருதையும் வாங்கிக் கொடுத்தது. இந்தப் படம் வெளியானதே பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில்தான். இப்போது வரை அது நீரு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கிறது.




சமீபத்தில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அளித்த ஒரு பேட்டியின்போது அமீர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கியிருந்ந்தார். இதற்கு பல்வேறு இயக்குநர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். படத்தை பாதியில் கைவிட்டு விட்டுப் போனவர் ஞானவேல்ராஜா. தனது கையில் இருந்த காசை வைத்தும், பிறரிடம் கடன் வாங்கியும் படத்தை முடித்தவர் அமீர். கார்த்தியின் கேரியர் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இத்தனை ரிஸ்க் எடுத்தார். அவரை ஞானவேல்ராஜா விமர்சிப்பதா என்று கேட்டுள்ளனர் இயக்குநர்கள்.


இயக்குநர் சசிக்குமார் விடுத்துள்ள அறிக்கையில், அண்ணன் அமீர் குறித்த ஞானவேல் ராஜாவின் கருத்துக்களை வன்மையாக கண்டிக்கிறேன்  'பருத்திவீரன்” இறுதி கட்ட படப்பிடிப்பிற்கான முழு தொகையையும் அண்ணன் அமீருக்கு நானே கடனாக கொடுத்தேன். எங்களுக்கான பணம் செட்டில் செய்யப்படாமலேயே படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அவர் சொல்வது உண்மை.


அண்ணன் அமீர், இயக்குநர்கள் சங்கத்தின் பொறுப்பில் இருந்தபோதே பல்வேறு பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தவர். அவரது பிரச்சினைகளைத் தீர்க்கும் வல்லமையும் அவருக்கு உண்டு. இப்போது அண்ணன் அமீர் மீது தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வாரியிறைத்த வன்மமான வார்த்தைகள் மற்றும் குற்றச்சாட்டுக்களை இயக்குநர்கள் சங்கம் தனது கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். மெளனமாக இருப்பது என்பது உண்மையை மறைத்து வைப்பதற்குச் சமம் என்று கூறியுள்ளார்.


பொங்கி எழுந்த சமுத்திரக்கனி


இதேபோல இயக்குநர் சமுத்திரக்கனி கடும் கோபத்துடன் நீண்டதொரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை:




ஞானவேல்ராஜா, அமீர் அண்ணன பத்தி நீங்க பேசுன வீடியோவ இப்பதான் பார்த்தேன்...! ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டிருக்கிங்க ப்ரோ ! தப்பு தப்பா பேசிருக்கீங்க..!


கேக்குறதுக்கே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.. ஏன் சொல்றேன்னா. அந்த படத்துல ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் இருந்தவன் நான்.. எல்லா பிரச்னையும் எனக்கு தெரியும். ஆறு மாசம் "பருத்திவீரன் படப்பிடிப்பிலே இருந்துருக்கேன். ஆனா உங்கள ஒருநாள் கூட அங்க பாத்தது இல்ல.. நான்தான் தயாரிப்பாளர், நான்தான் தயாரிப்பாளர்'னு பேசிக்கிட்டே இருக்கிறீங்க. உங்கள தயாரிப்பாளர் ஆக்கினது, கார்த்தியை ஹீரோ ஆக்கினது அந்த மனுஷன்... எந்த நன்றி விசுவாசமும் இல்லாம் பேசி இருக்கிறீங்க பிரதர்.. தப்பில்லையா ? எங்கிருந்து வந்தது இவ்ளோ தைரியம்..? பருத்திவீரன் சம்பந்தமான பிரச்சனைகள் வரும்போதெல்லாம் சரி நமக்கெதுக்கு அவங்களே பேசிக்குவாங்க. அவங்களே தீத்துக்குவாங்க... அப்படின்னு தான் நான் இருந்தேன். ஆனா இந்த முறை அப்படி இருக்க முடியல.. ரொம்ப கஷ்டமா இருக்கு.


அண்ணன் இந்த படத்துக்காக எவ்ளோ உழைச்சிருக்கார்... எவ்ளோ கஷ்டப்பட்டுருக்கார்'னு எனக்கு தான் தெரியும். ஏன்னா கால்வாசி படம் நடக்கும்போதே நீங்க கைய விரிச்சிட்டீங்க... என்னால் தயாரிக்க முடியாது. பணம் இல்ல அப்படின்னு சகோதரர் சூர்யா வந்து "படத்தை நீங்களே வச்சுக்கோங்க அமீர் அண்ணா" அப்படின்னு சொல்லிட்டு போய்ட்டார்.. அதுக்குப் பிறகு அந்த படத்தை முடிக்கிறதுக்கு ஒவ்வொரு நாளும் அமீர் அண்ணனோட சொந்தக்காரங்க, நண்பர்கள், இப்படி ஒவ்வொருத்தர்கிட்டயும் அவர் சொல்லச்சொல்ல போய் ஒரு லட்சம் ஐம்பதாயிரம், ரெண்டு லட்சம் இப்படி வாங்கிட்டு வந்தவன் நான். இது இல்லாம தம்பி சசி கூட கொஞ்சம் பணம் கொடுத்திருக்கான் பிரதர் அந்த படத்துக்கு..


Almost அம்பது, அறுபது பேர் சேர்ந்து காசு கொடுத்து தான் அந்த படத்தை எடுத்து முடிச்சோம். ஆனா கடைசில நீங்க வந்து அந்த தயாரிப்பாளர் சட்டையை போட்டுக்கிட்டிங்க... உண்மையிலேயே யார் தயாரிப்பாளர்.? சொல்லுங்க..! தயாரிப்பாளர் பதவிய அண்ணன் அமீர் உங்களுக்கு விட்டுக் கொடுத்தார்.


அந்த பஞ்சாயத்து வந்தப்ப யார் வேணாலும் என்ன வேணாலும் பேசியிருக்கலாம். ஆனா களத்திலேயே இருந்த கார்த்தி அமைதியா இருக்கிறதத் தான் என்னால இப்ப வரைக்கும் ஏத்துக்க முடியல... ஒருநாள் அமீர் அண்ணனோட நண்பர் ஒருத்தர். எதுக்கு இது... அப்படியே உட்டுட வேண்டியது தானே நிறுத்துங்க படத்தை அப்படின்னு சொன்னாரு. அதுக்கு அமீர் அண்ணன் என்ன சொன்னாரு தெரியுமா? "ஆரம்பிச்சுட்டோம். கார்த்தியோட எதிர்காலம் இது. அதுமட்டும் இல்லாம பெரியவர் என் கைய புடிச்சிட்டு கார்த்தி கைய புடிச்சு என் கைல கொடுத்துட்டு சொன்ன வார்த்தைகள் எல்லாம் என் காதிலேயே இருக்கு. நான் இவங்களுக்காக ஏதும் செய்யலிங்க. அந்த பெரிய மனுஷனுக்காகத்தான் செய்றேன்." அப்படின்னு சொல்லி செஞ்சார்.. அன்னைக்கு அவரு படத்தை நிறுத்தி இருந்தா இந்த படம் வந்துருக்குமா.? ஒரு ஹீரோ வெளில வந்துருப்பாரா..? என்ன பேச்சு பேசுறீங்க? ஆனா அவ்வளவு தூரம் பெருந்தன்மையா நடந்துக்கிட்ட ஒரு மனுஷனைத்தான் எல்லாருமா சேர்ந்து...


இப்படி அம்பது அறுபது பேர்ட்ட வாங்குன பணத்துக்குத்தான் நீங்கெல்லாம் சேர்ந்து உக்காந்து கணக்கு கேட்டீங்க. எனக்கே தெரியல. எத்தனை பேர்ட்ட போய்ட்டு வாங்கிட்டு வந்தேன்னு... யார் யார் எவ்ளோ கொடுத்தாங்கன்னு... சொன்ன வார்த்தையை காப்பாத்தணும்னு பல பேர்கிட்ட கை ஏந்தி அந்த படத்தை முடிச்சாரு அமீர் அண்ணன்... அதுக்கு ஆயிரம் கோடி இல்ல லட்சம் கோடி கொடுத்தாக்கூட ஈடாகாதுங்க.


நீங்களெல்லாம் ஏதோ ஒண்ணரை கோடிக்கு கணக்கு கேட்டுட்டு இருக்கீங்க ஞானவேல்..! செலவு பண்ணது அதுக்கும் மேல.. அதெல்லாம் பாவம். கணக்கிலேயே இல்ல! அமீர் அண்ணனோட பணம் அது.. இப்ப நான் சொல்லிருக்கிறது ஒரு சம்பவம் தான்...இன்னும் நிறைய இருக்கு தேவைப்பட்டா நானும் பேச வேண்டி வரும்.. இந்தமாறி பொதுவெளில தப்பு தப்பா பேசுறத இதோட நிறுத்திக்கங்க... அதுதான் எல்லாருக்கும் நல்லது என்று காட்டமாக கூறியுள்ளார் சமுத்திரக்கனி.


கார்த்தி பேச வேண்டும் - கரு பழனியப்பன் கோரிக்கை




இந்த நிலையில் அமீருக்கு ஆதரவாக இன்னும் ஒரு இயக்குநரின் குரல் வெளி வந்துள்ளது. அது  இயக்குநர் கரு. பழனியப்பன். அவர் போட்டுள்ள டிவீட்டில், "மெளனம் பேசியதே" என்று தன் திரைப்பயணத்தைத் தொடங்கியவர் இயக்குநர் அமீர் !  இன்று மெளனம் உடைத்து பேசிய தம்பி சசிக்குமார்,  சமுத்திரக்கனி 

இருவரும் தொடக்கமே! பருத்திவீரனில் பங்காற்றிய பிற கலைஞர்களும் பேச வேண்டும் ! கார்த்தி உட்பட  என்று கூறியுள்ளார் கரு. பழனியப்பன்.


இந்த விவகாரம் மீண்டும் அனல் பறக்க கிளம்பியதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. இத்தனை வருடம் கழித்து ஞானவேல்ராஜா இதை மீண்டும் தோண்ட என்ன காரணம்.. நடிகர் கார்த்தி இதில் தலையிட்டு பிரச்சினையை முடித்து வைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்