"எப்ப வரும்.. எப்படி வரும்னு தெரியலை".. மிரட்டும் "இளம் வயது மாரடைப்பு"!

Oct 24, 2023,01:08 PM IST

- மீனா


மாரடைப்பு.. சமீப காலமாக பலரையும் மிரட்டி வரும் வார்த்தைதான் இது..!


"நல்லாதாங்க இருந்தான் அந்தப் பையன்.. திடீர்னு மயங்கி விழந்தான்.. போய்ப் பார்த்தா முடிஞ்சு போச்சு.. 35 வயசுதான்"


"ஜிம்முக்குப் போய்ட்டு வந்தான்.. அம்மா டீ குடுன்னு கேட்டான்.. கொண்டு வந்து கையில் கொடுத்தப்போ வாங்கிட்டு அப்படியே சரிஞ்சுட்டான்.. அடுத்த மாசம் வந்தா 19 வயசு முடியுது"




இப்படிப்பட்ட செய்திகளை அடிக்கடி கேட்கிறோம்.. படிக்கிறோம்.. அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இப்படிப்பட்ட செய்திகள் சமீப நாட்களில் அதிகரித்துள்ளன. மாரடைப்பு.. முன்பெல்லாம் வயதானவர்களுக்குத்தான் அதிகம் வரும்.. அதிலும் ஆண்களுக்குத்தான் அதிகம் வரும்.. ஆனால் இன்று அப்படி இல்லை.. 15 வயது சிறுவனுக்கும் கூட மாரடைப்பு வருகிறது.. பெண்களுக்கும் அதிகம் வருகிறது.


சமீபத்திய  ஆராய்ச்சியின் முடிவில் 50 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயம்  அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது . இப்போது டீன் ஏஜ் வயது உடையவர்களும் மாரடைப்பு ஏற்பட்டு மரணத்தை சந்திப்பது இந்த ஆய்வின் முடிவை பிரதிபலிப்பதாகவே இருக்கிறது. இது கவலை அளிப்பதாக உள்ளது. 


சமீபத்தில் குஜராத்தில் நடந்த நவராத்திர விழாவையொட்டி நடத்தப்படும் கர்பா டான்ஸ் ஆடும் போது அடுத்தடுத்து மாரடைப்பு ஏற்பட்டு பத்து பேர் ஒரே நாளில் இறந்த செய்தி நம்மை அதிர்ச்சி அடைய வைத்தது.  அதில் ஒருவர் 17 வயது நிரம்பிய சிறுவன் என்பது மேலும்  அதிர்ச்சியாக உள்ளது. இது மட்டுமல்ல சமீபத்தில் கூட உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது கூட மாரடைப்பு ஏற்பட்டு மரணம் என்ற  செய்தியை அதிகம் படித்தோம்.  பெரும்பாலும் இளைஞர்களிடையே மாரடைப்பு சம்பவங்கள் மிகவும் அதிகரித்து உள்ளது என்பது வேதனையான விஷயம்.




இந்த சின்ன வயதில் மாரடைப்பு வருமா என்று அசாதாரணமாக இருந்த காலம் போய் இன்று டீன் ஏஜ் வயதிலும் மாரடைப்பு வரலாம் என்று உணரும் மரணங்களை பார்த்துக் கொண்டு வருகிறோம். அரிதாக அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடக்கும் மாரடைப்பு மரணங்கள்  இன்று சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை கூட  அதிகமாக நிகழ்வதை பார்க்க முடிகிறது. வாழ்க்கை முறை மற்றும்  பிறவியிலேயே இதய கோளாறு இருந்தாலும் கூட இத்தகைய மரணங்கள் நிகழ்கிறது என்று சொல்லப்பட்டாலும், இதைத் தாண்டி என்ன காரணம் இருக்க முடியும் என்ற கேள்வியும் எழுகிறது.


பொதுவாக மாரடைப்பு யாருக்கு வரும்


உடல் பருமன் 


உடல் பருமனால் நேரடியாக  மாரடைப்பு ஏற்படுவதில்லை. ஆனால் இதயத்திற்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அதிக அளவில் கொழுப்பு படிவது,  உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பிற ஆபத்தான நிலைமைகளை உண்டு செய்யும் வாய்ப்புள்ளது. ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும்போது, இதயத்திற்குப் போதிய அளவுக்கு ரத்தம் பம்ப் செய்யப்படாமல் போகும்.. அதனால் மாரடைப்பு ஏற்படலாம். இளம் வயது உடல் பருமன் இன்று அதிகரித்துள்ளது. 40 ஆண்டுகளில் உடல் பருமன் உள்ள சிறார்களின் எண்ணிக்கை ஆறு மடங்கு அதிகரித்திருப்பதாக சொல்லப்படுகிறது.


குறிப்பாக 20 வயதுக்குட்பட்டவர்களிடையே உடல் பருமன் கொண்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஆய்வில் இதுகுறித்து தெரிய வந்தது. அங்கு மட்டுமல்ல நமது நாட்டிலும் கூட இளம் வயது உடல் பருமன் பிரச்சினை அதிகமாகியுள்ளது. ஆரோக்கியமான செல்களை உருவாக்க உடலுக்கு நல்ல கொழுப்பு மிகவும் அவசியம். அதே நேரத்தில் அதிகப்படியான கொழுப்பு மாரடைப்பு வருவதற்கும் காரணமாக மாறிவிடும். 


எப்படி என்றால் கொழுப்பு அதிகரிக்கும் போது இதயத்துக்கு செல்லும் தமனிகள் வழியாக போதுமான ரத்தம் 

செல்வது என்பது கடினமான செயலாக மாறிவிடுகிறது. இதனால் ரத்தம் சீராக  செல்லாமல் தடுக்கப்பட்டு உறைவை ஏற்படுத்தி அது மாரடைப்பு வருவதற்கு வழி செய்து விடும். நம்முடைய வாழ்க்கை முறையில் மாற்றமடைந்துள்ள உணவு பழக்க வழக்கங்களில் அதிகப்படியான கொழுப்பு நிறைந்த உணவுகளை தொடர்ந்து உண்ணும் போது கொழுப்பு அதிகரித்து அதனால் கூட மாரடைப்பு வரலாம் .




இதே போல் டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம். நீரிழிவு நோய் இருந்தால் நீரிழிவு இல்லாதவர்களை காட்டிலும் இளம் வயதில் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் இரண்டு மடங்கு அதிகம் என்கிறது நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய ஆய்வு. ஏனென்றால் நீரிழிவு நோயுடன் தொடர்புடைய உயர் ரத்த சர்க்கரை, ரத்த நாளங்கள் இதயத்தை கட்டுப்படுத்தும் நரம்புகளை சேதப்படுத்துவதை இதற்கு காரணம்.  டைப் 2 சர்க்கரை நோய் வயதானவர்கள் என்பதை தாண்டி இன்று இளம் வயதினரிடையே அதிகமாக பார்க்க முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவையும் மாரடைப்பு வருவதற்கு காரணமாக அமைகிறது. 


இதய பிரச்சனைகள் மற்றும் மனநல பிரச்சனைகள் இவை இரண்டிற்கும் தொடர்பு உள்ளது. மன அழுத்தம் மனசோர்வு மற்றும் பதட்டம் ஆகியவை இன்றைய இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. இதனால் மனநல போராட்டங்களுக்கும் மாரடைப்புக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து அறிந்திருப்பதும் அவசியம். மனநிலையில் மாற்றம் ஏற்படும் போது அதை இயல்பான நிலைக்கு மாற்ற, பிடித்த நபருடன் மனப் புழுக்கங்களைப் பகிர்தல், உரையாடுதல் மற்றும் பிடித்த விஷயங்களில் மனதை செலுத்துவதின் மூலம் இயல்பு நிலைக்கு மாறுவதற்கான முயற்சிக்கு  இது பயனளிக்கலாம்.


மேலும் கோவிட்-19 நோய் பாதிப்பை சந்தித்தவர்களில் 4% பேர் இதயம் சார்ந்த பிரச்சனைகளை சந்திக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு 15 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் ஆரம்ப நோய் தொற்றுக்குப் பிறகு ஒரு வருடம் கழித்து ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, இதய செயலிழப்பு, இதய வீக்கம் அல்லது மாரடைப்பு போன்ற இத்தகைய நிலையை உருவாக்கும் ஆபத்து அதிகரித்து உள்ளதாக சொல்லப்படுகிறது. நீண்ட நாள் கொரோனா தொற்று பாதிப்பு இருந்தவர்களுக்கு இதயம் சம்பந்தமான  பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் சொல்லப்படுகிறது. 


இளம் வயதில் மாரடைப்பு வருபவர்களுக்கான அறிகுறிகள் ஒவ்வொரு நபரை பொறுத்து மாறுபடலாம் . மாரடைப்பு வருவதற்கான நம்பகமான அறிகுறி என்றால் இடதுபுற நெஞ்சு வலி தான். வலி பொதுவாக மார்பின் மையத்தில் அல்லது இடது பக்கத்தில் இருக்கும். பல நிமிடங்கள் தொடரலாம் பிறகு மீண்டும் இயல்புக்கு வரும். பிறகு மீண்டும் வலி வரும்..  இதை "இதய அழுத்தம் அல்லது இதய வலி" என்று சொல்வர்.

மேலும் கடினமான முறையில் உயர் பயிற்சி செய்யும் போது இதய நிலையில் மாற்றம் ஏற்படலாம்.

குறிப்பாக:


மார்பு வலி

மூச்சுத் திணறல்

தோள்பட்டை வலி

பலவீனமாக உணர்தல் அல்லது தலை சுற்றல்

சொல்ல முடியாத அளவிற்கு சோர்வு

குமட்டல் மற்றும் வாந்தி


இந்த மாதிரி அறிகுறிகள் தென்படும் போது  எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். இத்தகைய அறிகுறிகள் ஆண்கள், பெண்கள் இருவருக்கும் வெவ்வேறாக மாறுபடலாம். இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவதை தடுப்பது என்பது மிகவும் சவாலான விஷயம் தான். பெரும்பாலான நேரங்களில் அவர்கள் ஆபத்தை உணர்வதில்லை. முந்தைய காலங்களில்  குழந்தைகள் வீட்டிற்கு வெளியே ஓடி விளையாடிய காலங்கள் மாறி அவர்கள் இப்பொழுது வீட்டினுள் தன்னுடைய நேரத்தை செல்போன், டிவி மூலம் செலவழிப்பதினால் உடலுக்கு தேவையான வலிமை அவர்களுக்கு முழுமையாக கிடைப்பதில்லை. பிறகு தன்னுடைய வாழ்க்கை சூழ்நிலை மாறி வருவதை உணர்ந்து அவர்கள் உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று கடுமையான விதத்தில் உடற்பயிற்சி செய்யும் போது திடீரென்று  அதிகப்படியான உடல் அசைவுகள், உடலை வருத்துவது  கூட இதற்கு காரணமாக அமையலாம். 


ஆகையால் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு மருத்துவரிடம் தக்க ஆலோசனை பெற்று அதை கடைபிடிப்பது அவசியம். இதய ஆரோக்கிய செயல்பாடு பற்றி அறிந்து கொள்வதற்கு இது  முக்கியமானது. மேலும் உணவு முறை ,வாழ்க்கை முறை இவை இரண்டும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். நீரிழிவு ,இரத்த அழுத்தம் போன்றவை இருந்தால் அதை கட்டுக்குள் வைத்துக் கொள்வது நல்லது. மேலும் சர்க்கரை ட்ரான்ஸ் கொழுப்பு போன்றவை உணவில் சேர்க்காமல் பார்த்துக் கொள்வதும் சிறந்தது. 


உடற்பயிற்சி செய்து உடல் எடையை கட்டுக்குள் வைப்பது நல்லது தான். ஆனால் அவை திடீரென்று நிகழாமல் சிறு வயது முதல் படிப்படியாக நடைபெறுவது சரியானதாக இருக்கும்.. உடல் உழைப்பிலும், வாழ்க்கை முறைமாற்றம், உணவுப் பழக்க வழக்கம், மன நிலை ஆகியவற்றில் ஒரு சேர  கவனம் செலுத்துவது முக்கியம்.. இதன் மூலம் இதயத்தின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க முடியும்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்