என்னோட பிறந்த நாளன்று.. சத்யராஜ் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. நெகிழ்ச்சி அடைந்த லாரா கார்த்திகேசன்

Jun 14, 2024,12:58 PM IST

சென்னை:   சஸ்பென்ஸ் திரில்லர், பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல், இந்த மூன்றும் சேர்ந்த கலவையில் உருவாகியுள்ள லாரா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ளார். அதுவும் என் பிறந்தநாள் அன்று வெளியிட்டது எனக்கு ஓர் இன்ப அதிர்ச்சி என லாரா பட தயாரிப்பாளர் எம்.கார்த்திகேசன் உணர்ச்சி பொங்க பேசியுள்ளார்.


நரம்பில்லாத நாக்கு எதை வேணாலும் பேசும் என்பார்கள். அதுபோலவே நாம் ஒரு கதையை ஒருவரிடம் சொல்லும்போது அதை அடுத்தடுத்த மக்களின் காதுகளுக்கு  போகும்போது ஆளாளுக்கு விதவிதமாக திரித்து பேசுவார்கள். அப்படி பல்வேறு கட்டுக்கதைகள் உருவாகும். இந்த கதைகள் சிலவேளைகளில் ஆச்சரியமூட்டும். சில நேரங்களில்  எரிச்சலூட்டும் வகையிலும் அமையும்.  அப்படி சில ஆண்டுகளுக்கு முன்பு காரைக்காலில் நடந்த ஒரு உண்மை சம்பவம் தற்போது வரை மர்மமாகவே இருந்து வருகிறது. இது பற்றிய கதை விவரங்கள் பலவகையிலும் பரவி இருக்கிறதாம். இந்த சம்பவத்தை மையப்படுத்தி சஸ்பென்ஸ், திரில்லர், பரபரப்பு படமாக உருவாகி இருப்பது தான் லாரா படத்தில் கதை களம் ஆகும்.




இப்படத்தை அறிமுக இயக்குனர் மணி மூர்த்தி இயக்க, கோவை கட்டுமானத்துறையில் சிறந்து விளங்கிய தொழிலதிபர் எம் கார்த்திகேசன் தனது என்கே பிலிம்ஸ் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஆர்.கே ரவி ஒளிப்பதிவு செய்ய, ரகு சரவண குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் பிடிச்சிருக்கு பட நடிகர் அசோக் குமார் ஹீரோவாகவும், அனுஸ்ரீ, வெண்மதி, வர்ஷினி, என மூன்று பேர் ஹீரோயின்களாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் மேட்டிவ் வர்கீஸ், கார்த்தி கேசன், எஸ்கே பாபு, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


 இப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நான்கு கட்டமாக படமாக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது லாரா படத்தின் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இப்படம் குறித்து தயாரிப்பாளர் எம். கார்த்திகேசன் கூறியதாவது,


90களில் நான் படித்துக் கொண்டிருக்கும் போது  எங்கள் பகுதியில் ஒரு சம்பவம் நடந்தது. அதாவது காரைக்காலுக்கும் அக்கரை வட்டம் என்ற பகுதிக்கும் இடையில் ஒரு குறுக்குப் பாலம் உண்டு. அதில் போக்குவரத்து குறைவாக இருக்கும்.தனியே செல்வதற்கு அச்சமூட்டும். சுற்றுப்புறம் எல்லாம் விவசாய நிலங்கள். அந்த மரப்பாலத்தினருகே ஒரு பெண் சடலம் கிடந்தது.  அடையாளம் தெரியாது சேதமடைந்த நிலையில் அந்தப் பெண் சடலம் கிடந்தது. அது பற்றி போலீஸ் எவ்வளவோ விசாரித்த போதும் சரியாகத் துப்பு கிடைக்காமல் அவர்களுக்கு மிகவும் சவாலாக இருந்தது.ஆனால் மக்கள் அது இன்னார் என்றும் இன்னாரது மனைவி என்றும் ஆளாளுக்கு ஒரு கதை சொன்னார்கள். ஆனால் எதையும் நிரூபிக்க முடியவில்லை. நான் அதைக் கேட்டு ஆச்சரியப்பட்டேன். மக்கள் தாங்களாகவே எப்படி இப்படிப் புனைகதைகள் சொல்கிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சிலர் சொன்ன கதைகள் வியப்பாகவும் , யாரும் யோசிக்காத விதத்தில் சுவாரஸ்யமாகவும் இருந்தன. 




நாங்கள் திரைப்படம் எடுப்பது என்று பேசியபோது  வேறொரு கதையைத்தான் படமாக்க நினைத்தோம். ஆனால் அந்தச் சம்பவம் ஏனோ எனக்கு அப்போது நினைவுக்கு வந்தது. மனதில் பொறி தட்டி வெளிச்சம் கிடைத்தது போல் இருந்தது.  உடனே அது பற்றி நாங்கள் யோசித்தோம். அதை விரிவாக்கி திரைப்படமாக எடுப்பதாக முடிவு செய்தோம். அதுதான் இந்த  'லாரா '  திரைப்படம்.திட்டமிட்டபடி படத்தையும் எடுத்து முடித்து விட்டோம்.


ஒரு தயாரிப்பாளராக இங்கே நான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது ஒன்று உள்ளது.இந்தத் திரைப்படத்தை, குழுவினரின் ஒத்துழைப்பாலும் நடித்தவர்களின் அபரிமிதமான ஆதரவாலும் திட்டமிட்டபடி குறித்த நேரத்தில்  முடித்திருக்கிறோம். இது ஒன்றையே இந்தப் படக்குழுவினரின் ஒத்துழைப்பிற்கும் உழைப்புக்கும் சான்றாகச் சொல்வேன்.


இப்படத்தின் டைட்டில் லுக்கை என் மதிப்பிற்குரிய நடிகர் சத்யராஜ் அவர்கள் வெளியிட்டது, அதுவும் என் பிறந்த நாளில் வெளியிட்டது எனக்கு ஓர் இன்ப அதிர்ச்சி என்றுதான் கூற வேண்டும். நான் சத்யராஜ் அவர்களின் தீவிர ரசிகன். அவரே என் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டதில் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி. படத்தின் பர்ஸ்ட் லுக்கை பார்த்து விட்டுப் பாராட்டி வாழ்த்தினார். அதுவே இப்படத்திற்குக் கிடைத்த இன்னொரு பலமாக மாறியுள்ளது. படக்குழுவினர் புதிய உற்சாகத்துடன் இருக்கிறார்கள் என கூறியுள்ளார்.


இயக்குநர்  மணிமூர்த்தி பேசும்போது,




இந்தக் கதை கடலும் கடல் சார்ந்த பகுதியில் நடப்பதால் கடலூர், பாண்டிச்சேரி, காரைக்கால் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம் .அதே போல பொள்ளாச்சி, கோயம்புத்தூர் போன்ற இடங்களிலும் படப்பிடிப்பு நடந்தது.


வெவ்வேறு இடங்களில் நான்கு கட்டங்களாகப் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.தயாரிப்பாளர் சொன்ன கதையை விரிவாக்கம் செய்து திரைக்கதை அமைத்த போது, கதைக்கு வலுவும் சுவாரஸ்யமும் சேர்ப்பதற்காக இது சார்ந்த பல விவரங்களைத் தேடினோம். நான் காரைக்காலில் பல மாதங்கள் தங்கி இருந்து அதைப் பற்றி விவரங்களைச் சேகரித்தேன் . இந்த வழக்கு சார்ந்த தொழில்நுட்ப விவரங்களை அறிவதற்கு காவல் நிலையம் சென்று இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் போன்றவர்களிடம் பேசித் தகவல்களைச் சேகரித்தேன் ஒரு குற்றவியல் வழக்கு,எப்போது காவல்துறையைக் குழப்புகிறது? என்னென்ன புள்ளிகளில் அந்த வழக்கு  நிலை பெறாமல் புலனாய்வில் இருந்து நழுவிச் செல்கிறது? எப்படிப்பட்ட சூழலில் அந்த வழக்கு காவல்துறைக்குப் பெரும் சவாலாக மாறுகிறது? போன்ற கேள்விகளுக்கு எல்லாம் விடைகளைப் பெற்றோம். அதற்கான தொழில் நுட்பக் காரணங்களையும் கண்டறிந்தோம். அவற்றையெல்லாம் அடிப்படையாக வைத்து இந்தத் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறோம்.


 இதில் வரும் ஒவ்வொரு சிறு பாத்திரமும் கூட தொடர்பு இல்லாமல் சம்பந்தம் இல்லாமல் படத்தில் இருக்காது. கதையில் ஒவ்வொன்றுக்கும் தொடர்பு இருப்பது போல் காட்சிகளை உருவாக்கி இருக்கிறோம். இது ஒரு புது யூனிட் என்று பார்க்காமல் அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்களது சொந்தப் படம் போல் இதற்காக உழைத்திருக்கிறார்கள். படப்பிடிப்பின் போது  சிலரைத் தலைகீழாகத் தொங்க விட வேண்டி இருந்தது.என்னதான் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பக்கவாகச் செய்திருந்த போதும் சிலருக்குக் காயங்கள் ஏற்பட்டன. கடற்கரைகள், காடுகள், பாறைகள், நீருக்கடியில் உள்ள பாறைகள் என்று கரடுமுரடான இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம்.


நாங்கள் புதுப் படக்குழு தான்.இருந்தாலும், எந்த அசெளகரியத்தையும் மனதில் வைக்காமல் படத்திற்காக சிறிதும் தயக்கம் காட்டாமல் இறங்கிப் பணியாற்றி  இருக்கிறார்கள். படத்துக்காகத் தங்களது முழு ஒத்துழைப்பையும் கொடுத்து இருக்கிறார்கள் .தொழில்நுட்பக் கலைஞர்களும் சரி, நடிப்புக் கலைஞர்களும் சரி யாரும் எந்தக் குறையும் வைக்கவில்லை.




திரையுலகில் நிறைய படங்கள் தயாரானாலும் சில படங்கள் வெளிவராமல்,சில படங்கள் முடிக்கப்படாமல் இருப்பதைப் பார்க்கிறோம். அதற்குக் காரணம் தயாரிப்பாளர் - இயக்குநர் இவர்களிடையே ஏற்படும் முரண்பாடுகள் அதுவும் பெரிதாக இருக்காது .யார் சொல்வதை யார் கேட்பது என்கிற ஈகோ மோதல்கள் வருவதுண்டு.பெரும்பாலும் சில சில சொற்கள் தந்த மனத்தாங்கல்கள், மனவருத்தங்கள், தர்ம சங்கடங்கள்தான் அப்படிக் கொண்டு போய் நிறுத்தி இருக்கும். அதனால் ஒரு படைப்பு மட்டுமல்ல,பலரது உழைப்பும்  தயாரிப்பாளரின் பணமும் முடங்கிப் போகிற நிலை வருகிறது.


இந்தப் படத்தைப் பொறுத்தவரை படத்தை எடுக்கும்போது ஒற்றை இலக்கை நோக்கியே தயாரிப்பாளரும் நானும் இணைந்து பணியாற்றினோம். எனவே படம் நன்றாக வந்துள்ளது. பெரிய பட்ஜெட்டில் சிறப்பாகக் கொடுத்துள்ளோம் என்பதை விட, அதைவிட மேலாகக் கொடுத்துள்ளோம் என்று நம்புகிறோம் என கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்