கொட்டுக்காளி.. இனி இதுபோன்ற படங்கள்தான் வரும்.. எச்சரிக்கை.. கமல்ஹாசனின் தூள் விமர்சனம்!

Aug 21, 2024,03:30 PM IST

சென்னை: கமல்ஹாசன் போன்ற ஒரு பிரமாதக் கலைஞரை இனி காண்போமா என்று தெரியவில்லை. கொட்டுக்காளி படம் குறித்து அட்டகாசமான விமர்சனக் கருத்தை அவர் படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனுக்கு அனுப்பியுள்ளார். படிக்கவே சூப்பராக இருக்கிறது.


சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் கொட்டுக்காளி. பி.எஸ். வினோத் ராஜ் இயக்கியுள்ளார். படம் மிகப்  பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் குறித்து நடிகர் கமல்ஹாசன் , சிவகார்த்திகேயனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதம் உங்களுக்காக:


கொட்டுக்காளி என்ற மத்திய அரசு சான்றிதழ் திரையில் தோன்றும் கணத்தில் இருந்து ஆச்சரியங்கள் தொடங்குகின்றன. சான்றிதழில் 103 நிமிடங்கள் 44 செகண்டுகள் என்ற குறிப்பை பார்த்ததுமே தமிழ் சினிமா ராக்கூத்து யுகத்தில் இருந்து மீண்டு நவீனக் கதை சொல்லிகளின் களமாகிவிட்டது புரிகிறது. தம்பி சூரியைத் தவிர எனக்கு தெரிந்த முகங்கள் இல்லை. மூன்று நிமிடங்களுக்கு பிறகு அவரும் தெரியவில்லை. பாண்டியன் எனும் கதாபாத்திரம் தான் தெரிந்தார். காலில் கல் கட்டிய சேவல் ஒன்று விடியலுக்காக கூட கூவாமல் குழம்பி நிற்கிறது. மறுபுறம் நம் கண்ணுக்கு தெரியாத கல் ஒன்று காலில் கட்டப்பட்ட பெண் ஒருத்தி அந்த சேவலையே வெறுத்துப் பார்க்கிறாள். கொட்டுக்காளி டைட்டில் திரையில்.




கண்ணிமைக்கும் நேரத்தில் கால் கட்டை உதறித் தப்பிக்கிறது சேவல். விரித்துப் பார்த்த பெண்ணின் கண்ணில் சின்ன எதிர்பார்ப்பு. பின் இரு உறவினர்கள் சேவலை துரத்தி பிடித்துக் கொண்டு போகிறார்கள். பெண்ணின் முகத்தில் கண்ணில் நம்பிக்கை மங்குகிறது. இவள் தான் நாயகி. 


உலகத்தை தலைகீழாக அண்ணாந்து பார்த்தபடி அறிமுகமாகிறான் பாண்டி. அவர் கழுத்தில் ஒரு வெண் சுண்ணாம்பு களியைத் தடவி விடுகிறாள் ஒரு பெண். பாண்டிக்கு தொண்டைக்கட்டாகவும் இருக்கலாம் அல்லது புற்றுநோயின் ஆரம்ப கட்டமாக கூட இருக்கலாம். ஒரு இளம் பெண்ணின் கல்லூரி காதலையும் கேன்சரையும் எந்த ஒரு புரிதல் இல்லாது அணுகும் ஒரு கிராமத்து குடும்பம்.


கிராமம் என்றால் சிமென்ட் சாலை, வாகன வசதி, செல்போன், டாஸ்மாக், சானிட்டரி நாப்கின், 24 மணி நேரம் மின்சாரம் என 21 ஆம் நூற்றாண்டின் நவீன வசதிகள் நிறைந்த கிராமம். இருப்பினும் எங்க வீட்டு பிள்ளைக்கு பேய் பிடிச்சிருக்கு பேய்  ஓட்ட கூட்டி போறோம் என்று விசாரிப்பவரிடம் கூசாமல் சொல்கிறான் பாண்டியன். வழிமொழிகிறது குடும்பம். போகிற வழி எல்லாம் பிளாஸ்டிக் குடங்கள் விற்கும் வண்டி ஒன்று பேயாய் ஆடிச் செல்கிறது. கண்ணேறு தவிர்க்கும் அசுர முகங்கள் இன்னொரு வண்டியில் பேயாடுகிறது. நடுவழியில் டாஸ்மாக் பேய் என்று பல பேய்களின் ஆட்டம் தென்பட்டாலும் அவை பூசாரிகளால் விரட்ட முடியாத பேய்கள் எனப் புரிந்து கொள்கிறோம்


இது பேய் கதை தான்.. காதல் பேய் கதை. நாயகியின் கண்ணில் பூமியின் பொறுமை தெரிகிறது. பின்னணி இசை என்று எதுவும் இல்லை. டைட்டில் கார்டில் வரும் இயற்கைக்கு நன்றி என்ற வாசகத்தின் பொருள் ஒளிப்பதிவியிலும் ஒலிப்பதிவிலும் தெரிகிறது. இயற்கைதான் படத்தின் இசை. குலதெய்வ கோயிலை நெருங்குகையில் சிறுவன் கார்த்திக் வாயால் கொடுக்கும் சினிமா பானி பின்னாடி இசைதான் ஒரு சின்ன கிண்டலுடன் இந்த படத்தில் அவை இல்லை என்பதை நினைவு படுத்துகிறது.


ஆணாதிக்கத்தின் குறியீடுகளாக சேவல், சீறும் காளை, பாண்டியன், பூசாரி என்ற பலர் இருந்தாலும் அவற்றை நாயகி எதிர்கொள்ளும் விதம், காலம் மாறிவிட்டதை மற்ற பாத்திரங்கள் புரிந்து கொள்ளாவிடினும் பார்வையாளர்கள் ஆகிய நமக்கு படம் பிடித்து காட்டப்படுகிறது. கடைசியில் இயக்குனர் பாண்டியனையும் நம்மையும் பகுத்தறிவின் கரையோரமாகவும் மனிதத்தின் விளிம்பிலும் நிறுத்திவிட்டு தன்னுடைய கடமை முடிந்த சந்தோஷத்தில் விளக்கை அணைத்து விட்டு வீட்டுக்கு கிளம்பி விடுகிறார். 




இந்த காதல் கதையின் முடிவை பாண்டியனைப் போலவே நாமும் உணர உந்தப்படுகிறோம். இது கொட்டுக்காளி படத்தின் விமர்சனம் அல்ல. இனி இது போன்ற நல்ல சினிமாக்களும் தமிழில் அடிக்கடி வரும் எனக் கூறும் கட்டியம்.. ஒரு சிலருக்கு எச்சரிக்கை. ரசனை குறைபாடு உள்ளவர்கள் தம்மை விரைவில் மேம்படுத்திக் கொள்ளாவிடில் நல்ல நவீன சினிமாவின் நீரோட்டத்தில் கலக்க முடியாது. கரையிலேயே நின்றபடி தண்ணீரை அசுத்தப்படுத்தாமல் அவர்கள் தங்கள் தாகங்களை தீர்த்துக் கொள்ள வேண்டியதுதான்.


மொத்தத்தில் கொட்டுக்காளி குழுவினர் அழகான சினிமா மொழியில் அற்புதமான பகுத்தறிவு கதை ஒன்றை சொல்லியிருக்கிறார்கள். அதற்காக இயற்கைக்கு மட்டுமல்ல திரு சிவ கார்த்திகேயனுக்கும் நன்றி. சாளரமில்லாத சிறையாக தமிழ் சினிமாவை பழைய வர்த்தகர்கள் வைத்திருக்க முடியாது. புதிய பார்வையாளர்களும் புதிய படைப்பாளர்களும் பல்கி விட்டார்கள் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.


இந்தக் கடிதத்தை வெளியிட்டு சிவகார்த்திகேயன், வினோத்ராஜ், சூரி ஆகியோர் கமல்ஹாசனுக்கு நன்றியும், அவரது பாராட்டுக்கு மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்