சட்டசபைத் தேர்தலுக்கு முன்பே பற்றி எரியும் களம்.. நம்பர் 2 யார் என்பதற்கான சண்டையா இது?

Feb 22, 2025,03:44 PM IST

சென்னை: தமிழ்நாட்டு அரசியல் களம் படு சூடாக காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக நடைபெறும் சமூக வலைதள ஹாஷ் டேக்ஸ் சண்டை மக்களை பரபரப்புக்குள்ளாக்கி உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு அனல் பறக்க நடக்கும் இந்த ஹேஷ்டேக் சண்டையின் பின்னணி என்ன?


தமிழ்நாட்டு சட்டசபைக்கு அடுத்த ஆண்டு பொது தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் களம் இதுவரை இல்லாத அளவுக்கு மிக மிக சூடாக காணப்படும் என்பதை இப்போது உறுதியாக சொல்லிவிட முடியும். ஆளும் கட்சியான திமுக அசுர பலத்துடன் இன்னும் மக்கள் மத்தியில் முழுமையான செல்வாக்குடன் வலம் வருகிறது. மறுபக்கம் திமுக அரசை காலி செய்துவிட்டு அந்த இடத்துக்கு தாங்கள் வருவதற்கு பாஜக கடுமையாக முயற்சித்து வருகிறது. இதற்காக என்னவெல்லாம் செய்ய முடியுமோ, எந்த இடங்களில் எல்லாம் கல்லெறிய முடியுமோ, எந்த இடங்களில் எல்லாம் தாக்குதல் நடத்த முடியுமோ, எங்கெல்லாம் நெருக்கடி தர முடியுமோ, அதை எல்லாம் பாஜக முழுமையாக செய்து வருகிறது.




இன்னொரு பக்கம் பிரதான எதிர்க்கட்சியாக சட்டசபையில் உள்ள அதிமுக சைலன்டாக தனது காய்களை நகர்த்தி வருகிறது. அதிமுக இணைய வேண்டும் என்ற ஒரு குரல் இருந்தாலும் கூட அதை புறம் தள்ளிவிட்டு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக பெரிய அளவில் பரபரப்பு இல்லாமல் ஒரு அரசியலை செய்து வருகிறது. இப்படி மூன்று கட்சிகளின் நிலை ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சி தனது பாணியில் நிதானமாக அடி எடுத்து வருகிறது.


நடிகர் விஜய் தனது கையில் இருக்கும் படத்தை முழுமையாக முடித்த பின்னரே தீவிர அரசியலுக்குள் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் தற்போது அவர் கட்சியை பலப்படுத்தும் வேலைகளில் சைலன்டாக வேகம் காட்டி வருகிறார். பல்வேறு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இது மார்ச் மாத வாக்கில் நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.




இப்படி அரசியல் களம் அனல் பறந்து கொண்டுள்ள நிலையில் இன்னொரு பக்கம் சமூக வலைதளங்கள் பற்றி எரிகின்றன. திமுக - பாஜக இடையிலான ஹேஷ்டாக் சண்டை பலரை கவனம் ஈர்த்துள்ளது. தேசிய அளவில் இது பேசு பொருளாகியுள்ளது. சண்டைக்கு என்ன காரணம் என்பதை விட இந்த காரணத்தின் பின்னணி என்ன என்பதை நாம் சற்று பார்க்கலாம்.


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளும் கட்சியான திமுக தொடர்ந்து மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக அதிருப்திகள் நிலவினாலும் கூட, குறைகள் சுட்டிக் காட்டப்பட்டாலும் கூட, முழுமையான அளவில் மக்களின் செல்வாக்கை ஆதரவை திமுக அரசு தக்க வைத்து வருகிறது என்பதில் சந்தேகம் இல்லை. மறுபக்கம் பிரதான எதிர்க்கட்சியாக ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டிய அதிமுக செயல்படவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே உள்ளது. அதற்கு பதில் பாஜக அந்த இடத்தை நிரப்பும் அளவில் படுவேகமாக ஒவ்வொரு பிரச்சனையையும் கையில் எடுத்து களமாடி வருகிறது.


இப்பொழுது நடந்துள்ள இந்த ஹேஷ்டேக் சண்டைக்கும் கூட அதுவே காரணமாக பார்க்கப்படுகிறது. பாஜகவைப் பொறுத்தவரை முதலில் அதிமுகவை பலவீனமாக்க வேண்டும்.. சிறு சிறு குழுக்களாக அதன் தலைவர்கள் பிரிய வேண்டும். சிறிய கட்சிகளை ஒன்று நமது கூட்டணிக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவற்றையும் காலி செய்து விட வேண்டும். பிறகு திமுகவுடன் நேருக்கு நேர் மோத வேண்டும். இப்படித்தான் அது திட்டமிட்டு களமாடி வருகிறது. அது நினைத்தபடிதான் இதுவரை எல்லாம் நடந்து கொண்டுள்ளது.




திமுகவுக்கு அடுத்து பாஜக என்ற சூழல் வர வேண்டும் என்பதே இப்போதைக்கு பாஜகவின் நோக்கம். அதை நோக்கித்தான் ஒவ்வொரு விஷயத்தையும் அது கையில் எடுக்கிறது. தமிழ்நாட்டில் ஏதாவது பிரச்சினை வெடித்தால் முதல் ஆளாக ஓடி வந்து அதில் அரசியல் செய்வது பாஜகவாகத்தான் உள்ளது. காரணம், அப்படிச் செய்து வந்தால்தான், மக்கள் மத்தியில் நாம் ஆக்டிவாக இருக்கிறோம், எதிர்க்கட்சி போல செயல்படுகிறோம் என்ற எண்ணம் உருவாகும் என்று பாஜக கருதுகிறது. ஆனால் பல நேரங்களில் இது அக்கட்சிக்கு பின்னடைவையும் கொண்டு போய் விடுகிறது என்பதையும் பார்க்க முடிகிறது. இருந்தாலும் அதைப் பற்றி பாஜக கவலைப்படுவதாக இல்லை.


திமுக ஒன்று பேசினால் பாஜகவிலிருந்து பத்து பேர் வந்து அதற்கு பதிலடி கொடுக்கிறார்கள். மக்களிடம் நமது இருப்பை பலமாக்கிக் கொண்டே போக வேண்டும். இதுதான் பாஜகவின் நோக்கம். இது அதிமுகவுக்கும், மக்களுக்கும் இடையிலான தொடர்பை காலி செய்யும் உத்தியே அல்லாமல் வேறு எதுவும் இல்லை. ஆனால் அதிமுக இது பற்றிக் கவலைப்படுகிறதா இல்லையா என்றே தெரியவில்லை. இனி விஜய் வேறு ஆக்டிவாக மாறி விட்டால் மக்களின் முழுக் கவனமும் அதிமுகவிடமிருந்து ஷிப்ட் ஆகி விடும் அபாயமும் உள்ளது.


தேர்தலுக்கு முன்பு ஏகப்பட்ட அதிரடிக் காட்சிகள் அரங்கேறும் என்பதில் ஐயமில்லை.. watch and enjoy மக்களே!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?

news

என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 18, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

ஹஜ் ஒதுக்கீடு ரத்து...பிரதமர் தலையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

அதிகம் பார்க்கும் செய்திகள்