வாலிபங்கள் ஓடும்.. வயதாக கூடும்.. ஏழேழு ஜென்ம பந்தம்.. இரு மண உறவு சிறப்பிக்க என்ன செய்யலாம்?

Apr 21, 2024,01:33 PM IST

- பொன் லட்சுமி


மதுரையே விழாக்கோலம் பூண்டுக் காணப்படுகிறது.. என்ன விசேஷம்.. அட, இன்னிக்குதாங்க நம்ம மீனாட்சி அம்மனுக்கும், சுந்தேரஸ்வரருக்கும் திருக்கல்யாணம்.. ஒவ்வொரு சுமங்கலிப் பெண்ணும் இன்று புதுத் தாலி சரடு மாற்றிக் கொண்டு மனமுருக அம்மனின் அருள் பெற்று மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.


திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்று முன்னோர்கள் கூறினார்கள்... உண்மைதான்.. திருமணம் என்பதே இரு மனங்களின் இணைப்புதான்... அந்த மனங்களின் இணைப்பும், பிணைப்பும், சங்கமும் நம்மை இறுகப் பற்றி இருக்கும்போது அந்தத் திருமண பந்தம் மணக்கிறது.. மலர்ந்து மணம் வீசி வாழ்க்கையை ரம்மியமாக்குகிறது.


ஆனால் இன்று  எவ்வளவு வேகமாக திருமணம் நடைபெறுகிறதோ அதே வேகத்தோடு விவாகரத்து வரை போய் விடுகிறார்கள். முன்பை விட அதிக அளவில் இன்று விவாகரத்து வழக்குகள் குவிந்து கொண்டுள்ளன.. இதற்கெல்லாம் என்ன காரணம்.. சரிவர புரிந்து கொள்ளாத வாழ்க்கை, எடுத்ததற்கெல்லாம் கோபப்படுவது, அவசர கதி வாழ்க்கை, ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்க மறுப்பது, ஈகோ.. இப்படி பல காரணங்கள்..  


மீனாட்சி  திருக்கல்யாணம் நடந்தேறியுள்ள இந்த நேரத்தில் அழகான மண வாழ்க்கைக்கு, சிறப்பான திருமண பந்தத்திற்கு, கணவன் மனைவி உறவை சிறப்பாக வைத்துக் கொள்ள கொஞ்சம் டிப்ஸ் தர்றோம்.. பார்த்து படித்து பாலோ பண்ணி ஹேப்பியா வாழுங்க.


அன்பை வெளிப்படுத்துங்கள் :-




இல்லறத்தின் ஆணிவேரே அன்பு ஒன்றுதான்  அதை சரியாக பயன்படுத்தக் கற்றுக் கொண்டால் வாழ்க்கை சிறப்பாக மாறும்.. நீ என்னிடம் அன்பு காட்டினால் தான் நான் உன்னிடம் அன்பு காட்டுவேன் என்னும் ஈகோவை விட்டுவிடுங்கள் ... அன்பு காட்டுவது என்றால் சர்ப்ரைஸாக கிப்ட் வாங்கிக் கொடுப்பது அடிக்கடி வெளியே அழைத்துச் செல்வது விலை உயர்ந்த பொருள்கள் வாங்கி கொடுப்பது இது மட்டும் தான் என்று இல்லை, அதைவிட பெரியது  கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ  உடல்நிலை  சரியில்லாத போது அருகில் இருந்து கவனித்துக்  கொள்வது, வேலைக்கு வெளியில் செல்லும்போது  நேரம் கிடைக்கும் போது கால் பண்ணி சாப்டியா என்று கேட்பது கூட ஒருவித அன்பு தான்... 


அடிக்கடி ஐ லவ் யூ என்னும் வார்த்தையை உபயோகப்படுத்துங்கள்   நம்மில் எத்தனை பேர் இதை கடைப்பிடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. அது உங்களுக்குள் ஈர்ப்பை இறுக்கமாக வைத்திருக்க உதவும்.


விட்டுக் கொடுங்கள்  :-




விட்டுக்கொடுங்கள் என்று சொன்னதும் தாய் தந்தைக்காக  கணவன் மனைவியையோ, மனைவி கணவனையோ விட்டுக் கொடுங்கள் என்று அர்த்தம் இல்லை , மனைவியின் உணர்வுகளுக்காகவும் கணவரின்  உணர்வுகளுக்காகவும் விட்டுக் கொடுங்கள்.. ஏதாவது கருத்து வேறுபாடு காரணமாக சண்டை வரும்போது யாராவது ஒருத்தர் விட்டுக் கொடுக்க முன்வர வேண்டும்.


விட்டுக் கொடுப்பவர் ஒருபோதும் கெட்டுப்போவதில்லை... பெரும்பாலான கணவன் மனைவி செய்யும் தவறு என்னவென்றால் வெளியில் முகம் தெரியாத யாரோ ஒருவருக்காக கூட ஒரு சில நேரங்களில் விட்டுக் கொடுப்பார்கள். ஆனால்  வீட்டில் மனைவி தானே அல்லது கணவன் தானே என்ற எண்ணம் தான் மேலோங்கி நிற்கிறது.. அந்த போக்கை மாற்றிக் கொள்ளுங்கள். 


ஒப்பிட்டு பேசுவதை நிறுத்துங்கள் :-




பெரும்பாலான கணவன் மனைவிக்குள் பிரச்சனை வருவதற்கான முதல் காரணமே இந்த ஒப்பீட்டு பேச்சு தான்.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்திறமை உண்டு. என் அம்மா சமையல் அளவுக்கு உன்னுடைய சமையல் இல்லை என்று பெரும்பாலான கணவர்கள் மனைவிடம் கூறுவார்கள்... உங்கள் அம்மாவின் சமையல் அனுபவம் வருடக்கணக்கானது. அதை எப்போதும் மனைவியுடன் ஒப்பிடாதீர்கள்...  அவரும் ஒரு கட்டத்திற்குப் பின்னர் சமையலில் எக்ஸ்பர்ட் ஆகி விடுவார்.. அப்ப என்ன பண்ணுவீங்க.. அப்ப பாராட்டுவதற்குப் பதில், முதலிலேயே பாராட்டினீங்கன்னா குறைஞ்சா போய்ருவீங்க.


உங்கள் மனைவிக்கு  ஓவியம் வரைவதில் திறமை இருக்கலாம், அது உங்கள் அம்மாவிற்கு இருக்காது.. அதேபோல  மனைவியும் சிறுவயதில் இந்த கதாநாயகரை போல கணவன் வர வேண்டும் என்று விரும்பி இருப்பார். ஆனால் அதற்கு நேர் மாறாக  கணவர் அமைந்திருப்பார். அதற்காக அவர்  செய்யும் வேலையை பற்றியோ அல்லது  அவர் உருவ அமைப்பை பற்றியோ அடுத்தவருடன் ஒப்பிடக் கூடாது. நமக்கு கிடைத்தது சொர்க்கும், அது போதும் என்ற எண்ணத்துடன் வாழ பழகிக் கொண்டால் இங்கு பல பிரச்சினைகள் வராது.


அடுத்தவர்களை தலையிட அனுமதிக்காதீர்கள் :-




கணவன் மனைவி உறவுக்குள் யாரையும் நுழைய விடாதீர்கள். முக்கியமாக மூன்றாம் நபர்களை அனுமதிக்க கூடாது.. அது கணவனின் தாய் தந்தையாகவும் இருக்கலாம், மனைவியின் தாய் தந்தையாகவும் இருக்கலாம் அல்லது சகோதர சகோதரிகளாக இருக்கலாம். யாராக இருந்தாலும் கணவன் மனைவி பர்சனல் விஷயத்தில் அவர்கள் மூன்றாம் நபர்கள் தான்... எந்தப் பிரச்சனையானாலும் அதை கணவன் மனைவி இருவருமே பேசி தீர்க்க முயல வேண்டும்.


இருவரும் உட்கார்ந்து மனம் விட்டு பேசி விட்டாலே இங்கு பல பிரச்சினைகள் தீர்ந்து விடும்... கணவன் மனைவிக்குள் நடக்கும் சிறு பிரச்சனைகளை கூட தாய் தந்தை தலையிட்டு அதை பெரிய பிரச்சினையாக உண்டு பண்ணி விடுவார்கள்... பல குடும்பங்களில் இது நடக்கிறது. தீர்க்க முடியாத பிரச்சனை என்றால் மட்டுமே அடுத்தவர்களின் உதவியை நாட வேண்டும்.. இங்கு பலரது வாழ்க்கை விவாகரத்து வரைக்கும் செல்வதற்கு முக்கிய காரணம் இந்த மூன்றாம் நபர்கள் தான்.


உனக்கு நான் எனக்கு நீ:-




இன்றைய உலகத்தில் மிகவும் உன்னதமான உறவு என்றால் அது கணவன் மனைவி உறவு தான்...  எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து யார் என்றே தெரியாத இருவர் ஒன்றாக சேர்ந்து வாழ்வதுதான் இல்லறம்... நம்மைப் பெற்ற தாய் தந்தையரோ  அல்லது நம்மோடு பிறந்த உடன்பிறப்புகளோ  இல்லை நாம் பெற்ற குழந்தைகளோ கண்டிப்பாக ஒருநாள் நம்மை விட்டு செல்வார்கள்... திருமணம் முடிந்ததும் தாய் தந்தை, உடன்பிறப்புகளை  விட்டு பிரிந்து வருகிறோம்.


அதேபோல் நமது குழந்தைகளுக்கு திருமணம் ஆனதும் அவர்களும் நம்மை விட்டு விலகி தான் இருப்பார்கள். ஆனால் கடைசி காலம் வரை நம்மோடு பயணிப்பது கணவனோ மனைவியோ தான். அதை மட்டும் நன்றாக புரிந்து கொள்ளுங்கள்... யார் என்னை விட்டு சென்றாலும் உனக்காக நான் இருப்பேன் உனக்காக மட்டுமே வாழ்வேன் என்று வாழும் வாழ்க்கை துணை கிடைத்தால் வாழும் நாட்கள் எல்லாம் சொர்க்கம் தான்.


பாராட்டுங்கள் :-




இந்த உலகத்தில் பாராட்டிற்கு மயங்காத ஆட்களே இல்லை எனலாம்.. அப்படி இருக்கும்போது நமக்கு மிகவும் பிடித்தவர் நம்மை பாராட்டும் போது அந்த சந்தோஷத்தை வார்த்தையால் சொல்லவே முடியாது... சிறு சிறு பாராட்டுகள் கூட  உறவை இனிமையாக்கும்... வீட்டு வேலை செய்து அலுப்பில் இருக்கும் மனைவிக்கு இன்னைக்கு சமையல் சூப்பராக இருக்கு என்று ஒரு சிறு பாராட்டு கொடுங்கள். அவர்கள அடையும் சந்தோஷத்திற்கு அளவே கிடையாது.


எந்த கணவனுக்கும் மனைவி தன்னை பாராட்டும் போது சிறு வெட்கம் கலந்த சந்தோசம் வரும்.  இன்னைக்கு இந்த ஹேர் ஸ்டைல்  ரொம்ப நல்லா இருக்கு உங்களுக்கு என்று கூறிப் பாருங்கள் அவர் கண்களில் நிச்சயம் சந்தோசம் இருக்கும்... சிறு சிறு பாராட்டுகள் கூட தன் துணையிடமிருந்து கிடைக்கும் போது அவர்கள் மீது அன்பு பல மடங்கு கூடும்...


குறைகளை மறங்கள்: -




குறைகள் இல்லாத மனிதர்கள் என்று யாருமே இந்த உலகில் கிடையாது. நமது துணையிடம் ஏதேனும் குறை இருப்பின் அதை நாசுக்காக கூறி அதை மாற்ற முயற்சி செய்ய வேண்டுமே தவிர அதை பெரிது படுத்தி உறவில் விரிசல் ஏற்பட காரணமாகி விடக்கூடாது. அதேபோல  குடும்பம் மட்டுமல்லாது  வீட்டு பொருளாதாரம் முதற்கொண்டு அனைத்தையும் இருவருமே  கலந்து ஆலோசித்து முடிவெடுக்கும் போது  அந்த குடும்பம் சிறப்பாக வளர்ச்சி அடையும்... இன்றைய காலகட்டத்தில் இருவருமே வேலைக்கு போனால்  நல்லது தான்.. வீட்டில் உள்ள வேலையை இருவருமே  பங்கிட்டு செய்யும் போது  இருவருக்குள்ளும் அன்பு கூடி உங்கள் உறவு இன்னும் பலப்படும்..


பெரும்பாலான கணவர்கள் வேலை முடிந்து வந்ததும் மொபைல் போனை எடுத்துக் கொண்டு தனியாக சென்று விடுகிறார்கள்.. வீட்டில் இருக்கும் மனைவியோ நாள் முழுவதும் வேலை பார்த்து முடித்துவிட்டு இரவில் சிறிது நேரம் கணவருடன் அமர்ந்து பேசலாம் என்றால்  முடியாது.. அதுவே தொடர்கதை ஆனால் அங்கு பிரச்சனை ஆரம்பமாகிவிடும். இனியாவது அருகில் அமர்ந்து மனம் விட்டு பேச முயற்சி செய்யுங்கள்..


ஒரு ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ திருமணம் என்பது ஒரு வரம்... மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது போல கணவன் அமைவதும் இறைவன் கொடுத்த வரம் தான்... அதை நல்ல விதமாக கொண்டு செல்வது நம்முடைய கையில் தான் இருக்கிறது... திருமணம் சொர்க்கம் ஆவதும் நரகம் ஆவதும் அவரவர் கையில் தான் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு இனியாவது ஒருவருக்கொருவர் அன்பு செய்து விட்டுக் கொடுத்து வாழுங்கள்... இந்த உலகில் நாம் வாழ்வது ஒருமுறைதான்.. அந்த வாழ்க்கையை, நமக்குக் கிடைத்த துணையோடு  சேர்ந்து  சிறப்பாக நடத்துவோம்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்