சென்னை: ஓபிஎஸ் ஒரு கொசு. அந்த கொசுவை விடுங்க. அவரைப் பற்றி பேசுவதற்கு இது நேரமில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
2021ம் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணம் அதிமுகவில் ஏற்பட்ட பிரிவு தான். அதிமுக 6 இடங்களில் டெபாசிட் இழந்தது. கட்சி ஒன்றிணைத்தால் தான் ஜெயிக்க முடியும் என நான், சசிகலா உள்ளிட்டோர் கூறினோம். அதிமுக ஒன்றிணைய எந்த நிபந்தனையும் நான் விதிக்க மாட்டேன். கட்சி இணைய எவ்வளவோ நான் விட்டுக் கொடுத்துள்ளேன். அதிமுக ஒன்றிணைந்தால் நான் உட்பட அனைவருக்கும் வாழ்வு. இல்லையேல் அனைவருக்கும் தாழ்வு. இரட்டை இலையை முடக்கும் நிலையை உருவாக்கியவர்கள் அவர்கள் தான் என்று அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசியிருந்தார் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் ஓபிஎஸ் குறித்து கேட்டதற்கு, ஓ.பன்னீர்செல்வம் ஒரு கொசு. நாட்டில் பல பிரச்சனைகள் இருக்கின்றன. நாட்டில் பேசுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. அந்த கொசுவைப் பற்றி பேசுவதற்கு இது நேரமில்லை. ரகசியம் என்று கூறி சொல்கிறார். அந்த ரகசியம் என்றாலே யாருடன் யார் தொடர்பு என்று நல்ல தெரியும். ரகசியம் என்று சொல்லி தொண்டர்களை ஏமாற்றும் வேலையை தான் இந்த 4 ஆண்டுகளாக செய்து வருகிறார். தொண்டர்கள் மத்தியில் இது எடுபடாது.
அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவும் இருமொழிக் கொள்கையை பின்பற்றுகிறோம். மொழி என்பது தனிப்பட்ட விஷயம். ஹிந்தி பிடிக்கும் என்றால் நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள் அடுத்தவர்கள் மீது திணிக்காதீர்கள். தமிழகத்தில் ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ளது. தமிழ் தாய்மொழியாக இருக்கின்றது. தமிழ் மொழி அழியாமல் இருக்கின்றது. ஹிந்தி மொழித் திணிப்பை தமிழக மக்கள் ஒரு காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
தமிழ்நாட்டில் பெண் காவலருக்கே பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது காட்டாட்சி நடக்கிறது. 2026ம் ஆண்டுக்கு பின் பாஜகவோடு திமுக கூட்டணி வைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. திமுகவின் பாஜக எதிர்ப்பு அடிப்பது போல அடிக்கிறேன், அழுவது போல அழு என இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
{{comments.comment}}