விழுப்புரம்: மதுரை அதிமுக மாநாட்டுக்குச் செல்லும் வழியில், சாலையோர மர நிழலில் அமர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உணவு உண்ட வீடியோவை பலரும் ரசித்துப் பார்த்து வருகின்றனர்.
மதுரையில் இன்று அதிமுகவின் எழுச்சி மாநாடு நடைபெற்றது. மாநாடு என்று வந்தாலே கட்சிக்காரர்களுக்கு எப்போதுமே குஷிதான். கூட்டம் கூட்டமாக ஜாலியாக கிளம்பி விடுவார்கள். மாநாட்டுக்குப் போவதை விட அந்த பயணம்தான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
நண்பர்களோடு நீண்ட தூர பயணம், அறட்டைக் கச்சேரி, ஜாலியான பேச்சுக்கள், போகும் வழியெல்லாம் வாகனத்தை நிறுத்தி நிறுத்தி ஏதாவது சாப்பிடுவது, முக்கிய இடங்களுக்கு விசிட் அடிப்பது, சுற்றுலாத் தலம் ஏதாவது கண்ணில் பட்டு விட்டால் அங்கு ஒரு விசிட்.. என்று மறக்க முடியாத பயணமாக அது இருக்கும்.
இதுபோன்ற லாங் டிரிப்புகளில் அந்த சாலையோர மர நிழலில் அமர்ந்து சாப்பிடும் அருமையான தருணத்தைத்தான் பலரும் எதிர்பார்ப்பார்கள். அது தரும் சுகமே தனிதான். துண்டு அல்லது போர்வையை எடுத்து கீழே விரித்து அதன் மேல் அமர்ந்து கொண்டு வந்துள்ள சாப்பாட்டைப் பிரித்து பகிர்ந்து கொண்டு குடும்பத்தோடும், நண்பர்களோடும் சாப்பிடுவது போன்ற சந்தோஷம் வேறு எதுவும் கிடையாது.
அப்படி ஒரு சந்தோஷத்தை நேற்று மதுரை அதிமுக மாநாட்டுக்காக சென்ற பலரும் அனுபவித்து மகிழ்ந்தனர். நம்ம ஜெயக்குமாரும் அந்த சந்தோஷத்தை நுகர்ந்துள்ளார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மிகவும் எளிமையான மனிதர், ஜாலியான மனிதரும் கூட. எல்லோராலும் எளிதில் அணுக முடியும் அளவுக்கு மிக மிக சிம்பிளான ஒரு மனிதர்தான் ஜெயக்குமார்.
நேற்று தனத சகாக்களோடு மதுரை கிளம்பிய அவர் வழியில் சாலையோரத்தில் மரத்தடியில் அமர்ந்து ஜாலியாக சாப்பிட்ட வீடியோவைப் பகிர்ந்துள்ளார். சால்வைகளை புல்தரையில் போட்டு அதன் மேல் அமர்ந்து ஜெயக்குமாரும் அவரது நண்பர்களும் சாப்பிட்டுள்ளனர்.
விக்கிரவாண்டி அருகே இந்த சாப்பாட்டுக் கடை விரிக்கப்பட்டு கலக்கலாக சாப்பிட்டுள்ளனர். பார்சல் சாப்பாடுதான் என்றாலும் கூட அந்த இடம், லேசான மனநிலை, அமைதி, பக்கத்தில் சாலையில் விர்ரென பறக்கும் வாகனங்களின் சத்தம் எல்லாம் சேர்ந்து ஆஹா என்று மனம் குளிர வைத்து விட்டது.
இதை ஜெயக்குமாரே தனது வார்த்தைகளில், எத்தனையோ நட்சத்திர உணவகங்களில் கிடைக்காத ஒரு சந்தோஷம்! மதுரை மாநாட்டிற்கு செல்லும் வழியில் விக்கிரவாண்டியில் எழில் கொஞ்சும் இயற்கையோடு மதிய உணவு அருந்திய போது என்று கூறி மகிழ்ந்துள்ளார் ஜெயக்குமார்.
அண்ணே, உங்களைப் பார்க்கும்போது எங்களுக்கும் உடனே ஓடிப் போய் இப்படி உட்கார்ந்து சாப்பிடணும் போல இருக்கே...!
{{comments.comment}}