துரோகம் உள்ளே நுழைந்ததால்.. அதலபாதாளத்திற்குப் போய் விட்டது அதிமுக.. சொல்கிறார் ஓபிஎஸ்

Oct 18, 2024,01:08 PM IST

சென்னை: துரோகம் உள்ளே நுழைந்ததால் அதிமுக பாதாளத்திற்கு சென்று விட்டது.2026-ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து களப் பணியாற்றி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க உறுதி ஏற்போம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் இணைக்க வாய்ப்பில்லை என்று நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.


அதில் ஓபிஎஸ் கூறியிருப்பதாவது: 




புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தமிழ்நாட்டு மக்களுக்கு பொற்கால ஆட்சியை அளிக்க வேண்டும் என்பதற்காக துவங்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தொடர்ந்து மூன்று முறை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தலைமையில் ஆட்சி அமைத்தது. சத்துணவு திட்டம், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 31 விழுக்காட்டிலிருந்து 50 விக்காடாக உயர்த்தியது, தஞ்சையில் தமிழ் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு பல்கலைக்கழகங்களை உருவாக்கியது, இலவச வேட்டி சேலை திட்டத்தை அறிமுகப்படுத்தியது, ஐந்தாவது உலக தமிழ் மாநாட்டை நடத்தியது எனப் பல்வேறு சாதனைகளைப் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நிகழ்ச்சி காட்டினார்கள்.


புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மறைவிற்குப் பிறகு, பல்வேறு தடைகளை தகர்த்தெறிந்த புரட்சித்தலைவி அம்மா கழகப் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டு, நான்கு முறை தமிழ்நாட்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை அமைத்தார்கள். தொட்டில் குழந்தை திட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையம், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், விலையில்லா அரிசி, கட்டணம் இல்லா கல்வி என பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி சாதனை படைத்தார்கள். நாடாளுமன்ற மக்களவையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை மூன்றாவது பெரிய கட்சியாக உருவாக்கிய பெருமை அம்மாவை சாரும். 


புரட்சித்தலைவி அம்மா மறைவிற்குப் பிறகு, துரோகம் உள்ளே நுழைந்ததன் விளைவாக, அதர்மங்கள் அதிகரித்து துரோக செயல்கள் தாண்டவமாடி, கட்சி அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. அனைவருக்கும் ஆனா கட்சி என்ற நிலை துரோக கூட்டத்தால் குழி தோண்டி புதைக்கப்பட்டதன் காரணமாக, நாடாளுமன்ற மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று வெற்றிடமாக காட்சியளிக்கிறது. ஏழு மக்களவை தொகுதிகளில் டெபாசிட் இழப்பு, 12 தொகுதிகளில் மூன்றாவது இடம், கன்னியாகுமரியில் நான்காவது இடம், புதுச்சேரியில் யூனியன் பிரதேசத்தில் நான்காவது இடம் என படுதோல்வியை நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சந்தித்தது.  இதன் மூலம் முதலமைச்சர் பதவிக்கு பரிந்துரைத்தவர், முதலமைச்சர் பதவியில் அமர்த்தியவர், முதலமைச்சர் பதவியில் தொடர துணை புரிந்தவர்கள் என அனைவரையும் முதுகில் குத்திய துரோகியை  மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பது தெளிவாகிறது.


இந்த துரோக செயல் காரணமாக, புரட்சித்தலைவி அம்மா ஆட்சி காலத்தில் 45 விழுக்காடாக இருந்த வாக்கு வாங்கி இன்று 20 விழுக்காடாக குறைந்துவிட்டது. இப்படிப்பட்ட துரோகம் தியாகத்தை பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. இந்த நிலைமை நீடித்தால், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைக்க முடியாது என்பதோடு மட்டுமல்லாமல் அதன் வாக்குச் சதவீதம் குறைந்து கொண்டே செல்லும் வெற்றிக் கனி என்பது எட்டாக் கனி ஆகிவிடும்.


திணைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாகக்

கொள்வார் பயன்தெரி வார்.


அதாவது, தனக்கு செய்யப்பட்ட உதவி தினை அளவே ஆனாலும், பண்புள்ளவர்கள் அதைப் பனை அளவிற்குக் கருதி கொள்வார்கள் என்கிறது திருக்குறள்.


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வீறு கொண்டு எழ வேண்டும் என்றால், பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும்.  பிரித்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்றால் பண்புள்ளவர்கள் தலைமை பதவிக்கு வர வேண்டும்.


இந்த தருணத்தில்,




எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை 

செய்நன்றி கொன்ற மகற்கு 


என்ற வள்ளுவரின் வாய்மொழியினைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.


அதாவது எப்படிப்பட்ட பாவத்தைச் செய்தவர்க்கும் அதிலிருந்து தப்பிக்க வழி உண்டு. செய்நன்றி மறந்த பாவத்திலிருந்து விடுபட வேறு மார்க்கம் இல்லை என்கிறார் திருவள்ளுவர்.


எனவே, எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும் என்ற மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றிட, 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து களப் பணியாற்றி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க உறுதி ஏற்போம் என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாக்கெட் சாராயத்தை ஊத்து.. STOP... புதுச்சேரியில் இனிமேல் விற்பனை கிடையாது.. தடை!

news

புரட்டாசி மாதம் முடிஞ்சிருச்சு.. புதுக்கோட்டை சந்தையில்..ஆடு விற்பனை அமோகம்.. வியாபாரிகள் ஹேப்பி!

news

ஒன்னையே தங்க முடியல.. இதுல ரெண்டா?.. ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு உருவாகிறது.. வானிலை மையம்

news

துரோகம் உள்ளே நுழைந்ததால்.. அதலபாதாளத்திற்குப் போய் விட்டது அதிமுக.. சொல்கிறார் ஓபிஎஸ்

news

சென்னையில் வைத்து.. இந்தி வார கொண்டாட்டமா.. மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம்

news

பட்டி தொட்டியெங்கும் சிலாகிக்கப்படும்.. சிலாஞ்சிறுக்கி.. மகிழ்ச்சியில் மினி நா. முத்துக்குமார்!

news

த.வெ.க. வேற மாதிரி.. எந்தப் பதவியும் நிரந்தரமல்ல.. உழைப்புக்கே மரியாதை.. புஸ்ஸி ஆனந்த்

news

22ம் தேதி உருவாகப் போகும்.. காற்றழுத்த தாழ்வால்.. நமக்கு பெரிய மழைக்கு வாய்ப்பிருக்கா?

news

மீண்டும் மீண்டும் புதிய உச்சத்தை நோக்கி தங்கம் விலை... உயர்விற்கு இது தான் காரணமாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்