சிறந்த தொழில் சூழல் இருக்கு..  தமிழ்நாட்டில்  தொழில் தொடங்குங்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!

Jan 30, 2024,06:05 PM IST

மாட்ரிட்: தமிழ்நாடு இந்தியாவின் 2வது பெரிய பொருளாதாரம். இங்கு சிறந்த தொழில் சூழல்கள் உள்ளன. இங்கு வந்து தொழில் தொடங்குங்கள் என்று ஸ்பெயின் முதலீட்டாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.


முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயினுக்கு அரசு முறைப் பயணமாக சென்றுள்ளார். அங்கிருந்து தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக  அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், ஸ்பெயின் நாட்டு தலைநகர் மாட்ரிட், நகரில் நடைபெற்ற ஸ்பெயின் தொழில் அமைப்புகள் மற்றும் ஸ்பெயின் பெரும் தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டார் முதல்வர்.


தமிழ்நாட்டில் நிலவும் சாதகமான முதலீட்டுச் சூழல் மற்றும் கட்டமைப்பு வசதிகள் குறித்து எடுத்துரைத்து தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்து பேசினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.  இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:


75 ஆண்டு கால பாரம்பரிய கட்சியின் தலைவர்




ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மாட்ரிட் நகருக்கு நான் வருகை தருவது இதுவே முதல்முறை. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இருக்கும் தமிழ்நாடு என்ற மிக முக்கியமான மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சராக நான் இருக்கிறேன். எங்களது கட்சி 75 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. ஆறு முறை அந்த மாநிலத்தில் ஆட்சிக்கு வந்துள்ளது.


திருவள்ளுவரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் தமிழ் மொழியில் தான் திருக்குறளை எழுதினார். அவரது திருக்குறள் உலகின் 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அத்தகைய பெருமையும் பாரம்பரியமும் கொண்ட மாநிலத்தில் இருந்து நான் வந்துள்ளேன். கால்பந்து விளையாட்டில் புகழ்பெற்ற நாடு. ஸ்பெயினை நான் இன்னும் சுற்றி பார்க்கவில்லை. நான் பார்த்தவரையில் கலைகளின் நாடாக காட்சியளிக்கிறது. உங்களது கலை உணர்வு ஒவ்வொரு கட்டிடத்திலும் தெருக்களிலும் ஒவ்வொரு மூலையிலும் உள்ளது. அழகான நிலப்பரப்பும் துடிப்பான கலாச்சாரமும் இணைய பெற்று மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடாக ஸ்பெயின் நாடு விளங்குகிறது.


பழம்பெரும் வரலாறும் பாரம்பரியமும் மிக்க நாடு




பழம்பெரும் வரலாறும் பாரம்பரியமும் பெற்ற இந்த நாடு போன்று வரலாற்று பெருமை கொண்ட தமிழ்நாட்டின் சார்பாக இங்கு வந்து உங்களை சந்திப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உலகிலேயே அதிகமாக பேசப்படும் இரண்டாவது மொழியாகவும் 20 நாடுகளின் அதிகாரப்பூர்வ மொழியாகவும் விளங்கும் ஸ்பானிஷ் மொழி போலவே எங்களது தமிழ் மொழியும் பாரம்பரியமிக்கது. கிட்டத்தட்ட ஐந்து ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபை கொண்டுள்ளது எங்கள் தமிழ்மொழி.


ஸ்பெயினுக்கும் தமிழ்நாட்டுக்கும் ஒரு மிகப்பெரும் ஒற்றுமை இருக்கிறது. காளை அடக்குதல் விளையாட்டு ஸ்பெயினின் தேசிய விளையாட்டாகவும் பாரம்பரிய விளையாட்டாகவும் விளங்குகிறது. எங்கள் தமிழ்நாட்டிலும் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு எமது கலாச்சாரத்தின் சின்னமாக உலகப் புகழ் பெற்று விளங்குகிறது. ஜல்லிக்கட்டு விளையாட்டுக்காகவே தனியாக ஒரு ஸ்டேடியம் கட்டி இருக்கிறோம். வருங்காலத்தில் தமிழ்நாட்டுக்கு வரும்போது அதைப் பார்க்கலாம்.


ஐரோப்பிய ஒன்றியத்தில் நான்காவது பெரிய பொருளாதார நாடாக ஸ்பெயின் விளங்குகிறது. 8 பார்ச்சூன் 500 நிறுவனங்கள் மற்றும் 20 ஃபார்ச்சூன் 2000 நிறுவனங்களும் ஸ்பெயின் நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படுகின்றன. தமிழ்நாட்டுடன் வணிக உறவு மேற்கொள்ளும் ஐரோப்பிய நாடுகளில் ஆறாவது பெரிய நாடாக ஸ்பெயின் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் நான்காவது பெரிய பொருளாதாரமாக ஸ்பெயின் திகழ்வது போல இந்தியாவின் இரண்டாவது பொருளாதாரம் ஆக தமிழ்நாடு விளங்குகிறது. இந்த ரெண்டு பொருளாதாரங்களுக்கும் நிறைய தொடர்புகள் உள்ளன. கெஸ்டாம்ப், கமேசா, ரோக்கா, உர்பேசர், இன்கிடீம், ஆம்ப்போ, பபேசா, ஆர்பினாக்ஸ், கோர்லான் ஆகிய முக்கிய ஸ்பானிஷ் நிறுவனங்கள் எங்கள் நாட்டில் தற்போது செயல்பட்டு வருகின்றன. இந்த பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்திடும் விதமாக உங்களுடைய முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்வதற்காக நான் இங்கு வந்துள்ளேன்.



இதற்கு முன்பு ஐக்கிய அரபு நாடுகள், ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்த்துள்ளேன். தொடர்ச்சியாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளுக்கும் செல்ல இருக்கிறேன். கடந்த ஜனவரி 7, 8 ஆகிய நாட்களில் நாங்கள் நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அமெரிக்கா இங்கிலாந்து சிங்கப்பூர் ஜப்பான் கொரியா பிரான்ஸ் ஆஸ்திரேலியா ஜெர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய ஒன்பது நாடுகள் எங்களுடன் பங்குதாரர் நாடுகளாக இணைந்து இருந்தன. மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தைவான் பொருளாதாரம் மற்றும் கலாச்சார நிறுவனங்களும் எங்களுடன் இணைந்து செயல்பட்டார்கள்.


தமிழ்நாட்டை நோக்கி வாருங்கள்




30 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் எங்கள் மாநாட்டுக்கு வந்திருந்தார்கள். மிகப்பெரும் தொழில் நிறுவனங்களான ஹூண்டாய் டாடா போன்ற நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை பன்மடங்கு அதிகரித்துள்ளன. 130க்கும் மேற்பட்ட பார்ச்சூன் 500 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தமது திட்டங்களை நிறுவியுள்ளது, தமிழ்நாட்டில் முதலீட்டுக்கான சிறந்த சூழல் அமைந்துள்ளதற்கு சான்று. இதன் தொடர்ச்சியாக ஸ்பெயின் நிறுவனங்களும் தமிழ்நாட்டை நோக்கி வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


வாகனங்கள் குறிப்பாக மின் வாகனங்கள், மின்னணு கருவிகள், தோல் பொருட்கள், தோல் அல்லாத காலணிகள், ஆடைகள் போன்றவற்றின் உற்பத்தியிலும் தகவல் தொழில்நுட்பம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உயர் மருத்துவ சேவைகள் போன்ற பல்வேறு துறைகளிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு  திகழ்ந்து வருகிறது. இந்தத் துறைகளிலும் வான்வெளி மற்றும் பாதுகாப்பு, உயிர் அறிவியல் மற்றும் உயிரி தொழில்நுட்பம், மருந்துகள், உணவு பதப்படுத்துதல், உப்புநீக்கம் மற்றும் நீர் சுத்திகரிப்பு ஆகிய துறைகளில் உங்களின் மேலான முதலீடுகளை மேற்கொள்ளுமாறு ஸ்பெயின் முதலீட்டாளர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.


தமிழ்நாட்டில் தொழில்களை துவங்க வரும் முதலீட்டாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தமிழ்நாடு அரசு காத்திருக்கிறது. பல்வேறு தொழில்களை மேற்கொள்ள உகந்த சூழ்நிலையும் திறன்மிக்க மனித வளத்தையும் உறுதி செய்வதோடு பல்வேறு தொழில் கொள்கைகளின் கீழ் உயர் சலுகைகளையும் அளிக்க உள்ளோம். இவை குறித்து தொழில்துறை அமைச்சர் அவர்களும், அலுவலர்களும் விரிவாக உங்களுக்கு எடுத்துரைக்க உள்ளார்கள். எனவே தங்களது முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன் என்று முதல்வர் கோரிக்கை விடுத்தார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்