மதுரை: மறைந்த பழம்பெரும் பின்னணிப் பாடகர் டி.எம். செளந்தரராஜனின் முழு உருவச் சிலையை மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
மதுரை முனிச்சாலை பகுதியில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. இன்று இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து அவரது குடும்பத்தினருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மத்திய அரசின் பத்மஸ்ரீ உள்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள டிஎம்எஸ்ஸின் சாதனை வாழ்க்கைக்கு புகழ் சேர்க்கும் வகையிலும், மதுரையில் அவர் வாழ்ந்ததன் நினைவுகளை சிறப்பிக்கும் வகையிலும், மதுரை மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும் டி .எம் சௌந்தரராஜன் சிலையை அரசே நிறுவும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி மதுரை முனிச்சாலையில் தினமணி தியேட்டர் அருகே பழைய மாநகராட்சி மண்டல
அலுவலக வளாகத்தில் ரூ. 50 லட்சம் செலவில் சிலை உருவாக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை இன்று இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எவ வேலு, மு. சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து டிஎம்எஸ்ஸின் புகைப்படத்துக்கும் மலர் அஞ்சலிசெலுத்தினார் முதல்வர். அதைத் தொடர்ந்து டிஎம்எஸ்ஸின் குடும்பத்துடன் சிலை முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். அரசு சார்பில் டிஎம்எஸ்ஸுக்கு சிலை திறக்கப்பட்டதற்காக அவருக்கு அவரது மகன் டிஎம்எஸ் பால்ராஜ் முதல்வருக்கு நன்றி கூறிக் கொண்டார்.
ஏழிசை வேந்தர்
ஏழிசை வேந்தர் என்று அழைப்படும் டி.எம்.செளந்தரராஜன், "டிஎம்எஸ்" என்று மக்களால் செல்லமாக அழைக்கப்படுபவர். டி.எம்.எஸ் மதுரையில் 1922ம் ஆண்டு பிறந்தார். மதுரையில் உள்ள சௌராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். அவருக்கு சிறுவயதிலிருந்தே சங்கீதத்தில் ஆர்வம் இருந்தது. தனது 21 வது வயதிலிருந்து கச்சேரிகளில் பாட ஆரம்பித்தார். அப்போதுதான் அவருக்கு திரைப்படத்தில் பாட வாய்ப்பு கிடைத்தது.
எம்.ஜி.ஆர் ,சிவாஜி ,ஜெய்சங்கர் போன்ற முன்னணி நடிகர்களுக்கு பின்னணி குரலாக பிரபலமடைந்தார். குறிப்பாக எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் ஆகியோரின் திரைக் குரலாக விளங்கியவர் டிஎம்எஸ். பின்னர் ரஜினிகாந்த் , கமல்ஹாசன் போன்ற அடுத்த தலைமுறைக்கும் பாடல்கள் பாடியுள்ளார்.
பத்தாயிரம் தமிழ் பாடல்களும் ,2500 பக்தி பாடல்களையும் பாடியுள்ளார். திரைப் பாடல்கள் எந்த அளவுக்கு பிரபலமானதோ அதேபோல டிஎம்எஸ் பாடிய முருகன் பாடல்களும் மிகப் பிரபலமானவை. இவரின் பாடல்கள் இன்றும் காலத்தை வென்று காதுகளை வசீகரிக்கின்றன.
{{comments.comment}}