அதிமுக தலைமையை விட்டு எடப்பாடி பழனிச்சாமி விலக வேண்டும்.. இல்லாவிட்டால் விலக்குவோம்.. ஓ.பி.எஸ்

Jul 08, 2024,05:53 PM IST

சென்னை:  சர்வாதிகாரியாக மாறி விட்டார் எடப்பாடி பழனிச்சாமி. தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த கழகத்தை பயன்படுத்துவதற்கு பத்து தோல்வி பழனிச்சாமி பதவியில் இருந்து விலகினால் நன்றாக இருக்கும் என்று பொதுமக்களும் தொண்டர்களும் விரும்புகிறார்கள். தானாக பதவியை விலக எடப்பாடி பழனிச்சாமி மறுக்கும் பட்சத்தில் தொண்டர்களும் பொதுமக்களும் இணைந்து அதற்கான சூழ்நிலையை உருவாக்குவார்கள் என்று கூறியுள்ளார் முன்னாள் முதல்வரும், அதிமுக உரிமை மீட்புக் கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம்.


அதிமுக - பாஜக இடையே ஒரு பக்கம் பரபரப்பான சண்டை ஓடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை இடையே கடும் வாக்குவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சண்டையின்போது ஓ.பி.எஸ் பெயரையும் எடப்பாடி பழனிச்சாமி இழுக்கவே ஆவேசமடைந்த ஓ.பி.எஸ். தற்போது 7 பக்கங்களில் ஆவேசமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கை:


துரோகம் - பொய்மையின் மொத்த உருவம் எடப்பாடி பழனிச்சாமி:




துரோகம், பொய்மை, செய்நன்றி மறத்தல் வன்முறை ஆகியவற்றின் மொத்த உருவமாக விளங்கும் எடப்பாடி பழனிச்சாமி என்னை விசுவாசமற்றவன் என்று பேட்டி அளித்திருப்பது முழு பூசணிக்காய் சோற்றில் மறைப்பது போல் உள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கும் எந்த அளவிற்கு விசுவாசமாக இருந்தேன் என்பதை அம்மா அவர்களே பல சந்தர்ப்பங்களில் தெரிவித்து இருக்கிறார்கள். என்னுடைய விசுவாசத்திற்கு ஈடாக ராமாயணத்தில் வரும் பரதனை ஒப்பிட்டு பேசிய அம்மா அவர்களின் பேச்சினை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். அம்மா அவர்களே என்னுடைய இந்த விசுவாசத்தை இந்த நாட்டிற்கு பறைசாற்றிய நிலையில், அதைப்பற்றி பேச பத்து தோல்வி பழனிச்சாமிக்கு தகுதி இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.


முதலமைச்சர் பதவியை கொடுத்தவருக்கு துரோகம் ,பரிந்துரை செய்தவருக்கு துரோகம், நான்காண்டு ஆட்சிக்கு உறுதுணையாக இருந்தவருக்கு துரோகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை காப்பாற்றி கொடுத்தவருக்கு துரோகம் என சுயநலத்திற்காக பல துரோகங்களை செய்து கொண்டு வரும் எடப்பாடி பழனிச்சாமி என்னுடைய விசுவாசத்தை பற்றி பேச அருகதை அற்றவர். அம்மா அவர்கள் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து போட்டியிட்டபோது அம்மா அவர்களுக்கு எதிராக போட்டியிட்ட வேட்பாளருக்கு தலைமை தேர்தல் முகவராக நான் செயல்பட்டேன் என்று எடப்பாடி பழனிச்சாமி பேட்டியில் தெரிவித்திருக்கிறார். இதற்கு நான் ஏற்கனவே மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகிவிடும் என்ற கோயபுல்ஸ் வேலையை செய்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.


இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இதனை ஆதாரத்துடன் நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என்று நான் ஏற்கனவே தெரிவித்திருந்தேன். இதுநாள் வரை ஆதாரத்தை வெளியிடாத எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் அதே குற்றச்சாட்டினை என் மீது வைத்திருக்கிறார். தன்னுடைய நடவடிக்கையின் மூலம் தான் ஒரு கோயபல்ஸ் என்பதை நிரூபித்திருக்கிறார்.


ஊர்ந்து தவழ்ந்து பதவி பெற்றவர் எடப்பாடி பழனிச்சாமி:




அடுத்தபடியாக 2017 ஆம் ஆண்டு மூன்று சதவீதம் ஆதரவு இருந்த எனக்கு ஒருங்கிணைப்பாளர் பதவி தந்ததாகவும் துணை முதலமைச்சர் பதவி தந்ததாகவும் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்திருக்கிறார். நான் 2017 ஆம் ஆண்டு தர்மயுத்தம் நடத்திய காலத்தில் எனக்கு கிட்டத்தட்ட 42 விழுக்காடு மக்கள் ஆதரவு என்பது பத்திரிகைகள் படம் பிடித்து காட்டின. அந்த தருணத்தில் நான் எடப்பாடி பழனிச்சாமி இடம் சென்று எனக்கு ஒருங்கிணைப்பாளர் பதவி அளியுங்கள் துணை முதல்வர் பதவி தாருங்கள் என்று கேட்கவில்லை. நான் தர்மயுத்தம் சார்பாக எம்ஜிஆர் அவர்களுடைய நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு 16வது முறையாக மாபெரும் கூட்டத்தினை கோயம்புத்தூரில் கூட்டிய போது அங்கு கூடிய கூட்டத்தைக் கண்டு அதிர்ந்து அதற்கு மறுநாள் அதிமுக மூத்த விசுவாசிகளான எஸ் பி வேலுமணியும், பி தங்கமணியும் சென்னையில் உள்ள என்னுடைய மகள் வீட்டில் என்னை சந்தித்து நாம் ஒன்று சேர்ந்தால் தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலுப்பெறும் அப்போதான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று கட்சித் தொண்டர்களின் கூற்றினையும் விருப்பத்தினையும் என்னிடம் வெளிப்படுத்தினர். கட்சியின் நலன் கருதி கழகம் ஒன்று பட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களின் கோரிக்கையை நான் ஏற்றுக்கொண்டேன். 


நான் போய் பழனிச்சாமிடம் எந்த பதவியையும் கேட்கவில்லை. இனியும் கேட்க மாட்டேன். பழனிச்சாமி தான் தவழ்ந்து ஊர்ந்து காலில் விழுந்து பெற்ற முதலமைச்சர் பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக தூது விட்டார். எடப்பாடி பழனிச்சாமி பதவி வெறி பிடித்தவர் சுயநலவாதி என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவர். தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் தனக்கு பெரும்பான்மை இல்லை என்பதால் எனக்கு தூது விட்டார் எடப்பாடி பழனிச்சாமி. 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் 136 இடங்களில் அதிமுக வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. அம்மா அவர்கள் தன்னுடைய உடல் நலத்தை கூட பொருட்படுத்தாமல் சூறாவளி தேர்தல் பிரச்சாரம் செய்ததன் காரணமாக மாபெரும் வெற்றி அதிமுகவுக்கு கிடைத்தது. இந்த வெற்றி அம்மா அவர்களுக்கு கிடைத்த வெற்றி. அம்மா அவர்கள் மறைவுக்கு பின் சின்னம்மா அவர்களின் தயவால் முதலமைச்சர் பதவி பெற்றுக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்த போது அவருக்கு ஆதரவாக 122 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். இந்த122 சட்டமன்ற உறுப்பினர்களில் 19 பேர் சில மாதங்கள் கழித்து ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடுத்த ஆதரவை திரும்ப பெறுவதாக கடிதம் அளித்தனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 103 ஆக குறைந்தது.


முதல்வர் பதவியில் நீடிக்க என்னிடம் கெஞ்சினார்:




இது தவிர மேலும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகவே செயல்பட்டு கொண்டிருந்தனர். இதையும் சேர்த்தால் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவான சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 100க்கும் கீழே சென்று விட்டது. அதே சமயத்தில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 98 ஆக இருந்தது. ஆளும் கட்சியை விட எதிர்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அப்பொழுது பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவேண்டும் என்று ஆளுநரிடம் கடிதம் கொடுத்தது திமுக. அந்த சமயத்தில் ஆளுநர் அவர்கள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டிருந்தால் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் பதவி அன்றைக்கே போயிருக்கும். இந்த சிக்கலில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள எனக்கு தூதுவிட்டு கெஞ்சியவர் எடப்பாடி பழனிச்சாமி. எனக்கு எடப்பாடி பழனிச்சாமி உடன் சேர விருப்பமில்லை என்றாலும் எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும் என்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் அம்மா அவர்கள் சொன்ன அந்த வார்த்தைகளை மனதில் நிலை நிறுத்தி மீண்டும் இணைவதற்கு முடிவு எடுத்தேன்.


என்னிடம் தூது வந்தவர்கள் சொன்னது கட்சிக்கு நானும் ஆட்சிக்கு எடப்பாடி பழனிச்சாமி என்று கூறினார்கள். நானும் ஒத்துக்கொண்டேன். ஆனால் ஒத்துக்கொண்டதற்கு மாறாக கையெழுத்திடும் அதிகாரமுடைய இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தனக்கு தரப்பட வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தார் எடப்பாடி பழனிச்சாமி. எம்ஜிஆர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட அம்மா அவர்களால் கட்டிக் காக்கப்பட்ட அதிமுக நலன் கருதி நான் அதனை ஏற்றுக்கொண்டேன். இது கட்சியின் மீது எனக்குள்ள விசுவாசத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. துணை முதலமைச்சர் பதவியைப் பொறுத்தவரையில் முதலில் நான் வேண்டாம் என்றுதான் சொன்னேன். இருப்பினும் பிரதமர் அவர்கள் என்னை டெல்லிக்கு நேரில் அழைத்து வலியுறுத்தியதன் காரணமாக அந்த பதவியை ஏற்றுக் கொண்டேன். 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது தேனி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ரவீந்திரநாத் அவர்களை மட்டும் நான் வெற்றி பெற வெற்றி பெற வைத்தேன் என்றும் அதே நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட கழக வேட்பாளரை வெற்றி பெறச் செய்யவில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்திருக்கிறார். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. 


ரவீந்திரநாத்தைத் தோற்கடிக்கத் துடித்தார்:




39 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டு தேனி தொகுதியை மட்டும் ரவீந்திரநாத் வெற்றி பெற்றதை எடப்பாடி பழனிச்சாமியால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் தான் இது போன்ற குற்றச்சாட்டினை என் மீது சுமத்தி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு. மாறாக ரவீந்திரநாத் தோற்கடிக்க வேண்டும் என்ற கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டவர் எடப்பாடி பழனிச்சாமி .இருப்பினும் எம்ஜிஆர் அம்மா அவர்களின் ஆசியாலும் ஆண்டவனின் அருளாலும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தேனி மக்களவைத் தேர்தலில் தேர்தல் பிரச்சாரம் செய்ததன் காரணமாகவும் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.


புரட்சித்தலைவி அவர்களின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று நான் சொன்னதற்கு காரணம் மக்களுக்கு அதில் சந்தேகம் இருந்ததால் தான். மக்களின் கருத்தைத்தான் நான் பிரதிபலித்தேன். அதேபோல நீதியரசர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு நான் ஆஜராகவில்லை என்று கூறியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இது முற்றிலும் தவறு. முதன்முதலாக எனக்கு 20. 12. 2018 அன்று நீதியரசர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு ஆஜராக மாறு உத்தரவிடப்பட்டது. இருப்பினும் 19. 12. 2018 அன்று நடைபெறவிருந்த எய்ம்ஸ் மருத்துவர்களின் விசாரணை 20 .12. 2018 அன்று மாற்றப்பட்டதால் என்னுடைய விசாரணையை ஆணையமே நிறுத்திவிட்டது. இதனைத் தொடர்ந்து 8.1.2019 அன்று ஆஜராகுமாறு நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையமே எனக்கு உத்தரவிட்டதே. ஆனால் சட்டமன்ற கூட்டத்துடன் நடந்து கொண்டிருந்தால் விசாரணையை தள்ளி வைக்குமாறு என்னுடைய வழக்கறிஞர் மூலம் கோரி இருந்தேன். பின்னர் 23. 1. 2019 அன்று ஆஜராகுமாறு நீதியரசர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் உத்தரவிட்டது. அன்று உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றதால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. பின்னர் 29. 1. 2019 அன்று ஆஜராகுமாறு எனக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இருப்பினும் அப்பல்லோ நிர்வாகம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்ததன் காரணமாக 29. 1. 2019 விசாரணை ஒத்திவைக்கப்பட்டு 19. 2. 2019 அன்று ஆஜராக உத்தரவிடப்பட்டது. 19.2. 2019 அன்று நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருந்ததால் 28. 2. 2019 அன்று ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு 26. 4. 2019 அன்று இடைக்கால தடை விதிக்கப்பட்டது. பிறகு 2022 ஆம் ஆண்டு இருமுறை நீதியரசர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகி என்னுடைய விளக்கத்தை நான் அளித்தேன். இதுதான் உண்மை நிலை. எனவே பொத்தாம் பொதுவாக நான் ஆணையம் முன்பு ஆஜராகவில்லை என்று கூறுவது அரசியல் காழ்ப்புணர்ச்சி.


கொடநாடு குறித்து வாய் திறக்கட்டுமே:




அம்மா அவர்களின் மரணம் குறித்த நீதி அரசர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் பற்றி கருத்து தெரிவிக்கும் எடப்பாடி பழனிச்சாமி கொடநாடு கொலை கொள்ளை வழக்கு குறித்து வாய் திறக்க ஏன் மறுக்கிறார். கொடநாடு கொலை கொள்ளை வழக்கினை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி என்னுடைய தலைமையில் நான் ஆர்ப்பாட்டம் நடத்தினேன். கொடநாடு கொலை கொள்ளை வழக்கு குறித்து போராட்டம் நடத்த எடப்பாடி பழனிச்சாமி ஏன் தயங்குகிறார். இது மக்கள் மத்தியில் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.


23 6 2022 அன்று நடைபெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்குழு கூட்டத்தில் பொதுக்குழு. உறுப்பினர்கள் அல்லாத சமூக விரோதிகளையும் ரவுடிகளையும் உட்கார வைத்து வரவு செலவு திட்ட அறிக்கையை கூட என்னால் வாசிக்க முடியாத நிலையை உருவாக்கி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் மேடையில் இருந்த என் மீதும் எனக்கு ஆதரவாக இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜேசிடி பிரபாகர் உள்ளிட்ட நிர்வாகிகள் மீதும் தண்ணீர் பாட்டில்களை வீசி கொலை வெறி தாக்குதல் நடத்த மூல காரணமாக இருந்த எடப்பாடி பழனிச்சாமி, நான் ரவுடிகளை வைத்து தலைமைக் கழகம் முன்பு வன்முறை செய்ததாக கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. உண்மை நிலை என்னவென்றால் 11 .7. 2022 அன்று வானகரத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் மாவட்ட கழகச் செயலாளர்கள் எட்டு பேரையும் சமூகவிரோதிகள் 300 பேரையும் தலைமை கழகத்திற்கு அனுப்பி தலைமை கழகத்தின் கதவை பூட்ட சொல்லி வன்முறையை உருவாக்கியவர் எடப்பாடி பழனிச்சாமி. தலைமை கழகம் அமைந்திருக்கும் தெருவிற்கு செல்ல முடியாத அளவுக்கு நாங்கள் சென்ற வாகனங்களின் மீது கற்கள் வீசப்பட்டன. நாங்கள் அந்த தெருவில் உள்ள இந்தியன் வங்கி அருகில் நின்று கொண்டிருந்த நேரத்தில் காவல் துறையினர் வந்ததின் காரணமாக அங்கு குழுமியிருந்த சமூகவிரோதிகள் அங்கிருந்து சென்றதை எடுத்து திறந்திருந்த தலைமைக் கழகத்திற்குள் நாங்கள் சென்றோம். இதுதான் உண்மை நிலை.


வரலாறு காணாத தோல்விக்குக் காரணம் எடப்பாடி பழனிச்சாமி:




இரட்டை தலைமை இருந்த காலகட்டத்தில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக 22 இடங்களில் போட்டியிட்டு ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. அதிமுக கழகம் மட்டும் பெற்ற வாக்கு விகிதம் 19.39 விழுக்காடு. கூட்டணி பெற்ற வாக்கு சதவீதம் 31.05. ஒற்றை தலைமை வந்த பிறகு 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக 34 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. 34 தொகுதிகளில் போட்டியிட்டு அதிமுகவின் வாக்கு சதவீதம் 20.46. கூட்டணிக் கட்சி ஆன தேமுதிகவின் வாக்கு சதவீதமான 2.59 விழுக்காட்டினை சேர்த்தால் மொத்த வாக்கு சதவீதம் 23.05. 8 சதவீத வாக்குகளை அதிமுக இழந்திருக்கிறது. ஏழு தொகுதிகளில் டெபாசிட் பறிபோயிருக்கிறது. அதிமுக வரலாற்றில் ஏழு தொகுதிகளில் டெபாசிட் பறிபோனது இதுவே முதல் தடவை. இந்த சாதனைகளைப் படைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி. 12 இடங்களில் மூன்றாவது இடத்திலும், ஒரு இடத்தில் நான்காவது இடத்திலும் சென்றது. விளவங்கோடு சட்டமன்ற தேர்தலில் வெறும் 5267 வாக்குகளை மட்டுமே பெற்றது.


2019 ஆம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 30 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகளை அதிமுக இழந்துவிட்டது. இந்த உண்மையை ஒப்புக் கொள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு மனதில்லை. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது தென் மாவட்டங்களில் உள்ள ஒன்பது மக்களவைத் தொகுதிகளில் அதிமுக பெற்ற வாக்குகள் 30 லட்சத்திற்கும் மேல். ஆனால் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அது 15 லட்சமாக குறைந்துவிட்டது. 50 சதவீத வாக்குகளை அதிமுக இழந்துள்ளது. இந்த வாக்குகளும் இரட்டை இலை சின்னத்திற்காக போடப்பட்ட வாக்குகள். புரட்சித்தலைவரின் வெற்றிச்சின்னமாம் இரட்டை இலை சின்னம் இல்லாது இருந்தால் நிலைமை மிகவும் மோசமாக இருந்திருக்கும். இதுதான் அதிமுகவின் இன்றைய நிலைமை. இதற்கு முழு முதல் காரணம் எடப்பாடி பழனிச்சாமி மட்டும்தான். நான் இந்த அறிக்கை விரிவாக வெளியிடுவதற்கு காரணம் நேற்றைய தினம் மதுரை விமான நிலையத்தில் உண்மைக்கு புறம்பான முரண்பட்ட கருத்துக்களை எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தது தான்.


அதிமுக ஒன்றுபட வேண்டும்.. எடப்பாடி விலக வேண்டும்:




என்னை பொறுத்தவரையில் அதிமுக ஒன்று பட வேண்டும். அம்மா அவர்களின் ஆட்சி 2026 ஆம் ஆண்டு அமையய வேண்டும் என்பதுதான் என் விருப்பம். இந்த விருப்பம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் தலைமை மாற்றப்பட வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை அழிவு பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார். தொடர் தோல்வியை சந்தித்து வரும் படுதோல்வி எடப்பாடி பழனிச்சாமி தலைமையை தொண்டர்கள் நிராகரித்து விட்டார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை. இந்த தலைமை தொடர்ந்தால் அதிமுக மாபெரும் வீழ்ச்சியைத்தான் சந்திக்கும். தோல்வியின் மறு உருவமாக விளங்கும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையை எந்த தொண்டனும் பொதுமக்களும் ஏற்காத நிலையில் பிளவு பட்டு இருக்கின்ற கழகம் இணைந்தால்தான் 50 ஆண்டிற்கும் மேலாக இயங்கி வரும் அதிமுக வலுப்பெறும். இதனை மனதில் வைத்து தான் கழகம் இணைய வேண்டும் என்ற கருத்தினை நான் சொல்லி வருகிறேன். இது பழனிச்சாமிக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.


நான் எந்த நேரத்திலும் என்னை கட்சியில் சேர்க்குமாறு கோரிக்கை வைக்காத நிலையில் என்னை கட்சியில் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது. அதிமுக என்பது தொண்டர்களுக்கான இயக்கம். இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. என்னை பொருத்தவரையில் எந்தக் காலத்திலும் நான் எடப்பாடி பழனிச்சாமிடம் யாசகம் கேட்க மாட்டேன். எனக்கு அதற்கான அவசியமும் இல்லை. அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று நான் தான் சொல்லி வருகிறேன். கட்சி இணைவதற்கு நான் எந்த தியாகத்தையும் செய்ய தயார். கட்சி இணைய எடப்பாடி பழனிச்சாமி எந்த தியாகத்தையும் செய்ய தயாரா என்பதுதான் என் கேள்வி.


நிரந்தர பொதுச் செயலாளர் அம்மா அவர்கள் தான் என்பதையும் சாதாரண தொண்டனும் உச்சக்கட்ட பதவி அடையலாம் என்ற விதியையும் மாற்றியுள்ள சுயநல சர்வாதிகாரி எடப்பாடி பழனிச்சாமியிடம் நான் எந்த கோரிக்கையும் விடுக்காத நிலையில் என்னை சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்று எடப்பாடி பழனிச்சாமி செல்வது ஆணவத்தின் உச்ச கட்டம். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நீடிப்பதை தொண்டர்களும் பொதுமக்களும் விரும்பவில்லை. இதனை புரிந்து கொண்டு தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த கழகத்தை பயன்படுத்துவதற்கு பத்து தோல்வி பழனிச்சாமி பதவியில் இருந்து விலகினால் நன்றாக இருக்கும் என்று பொதுமக்களும் தொண்டர்களும் விரும்புகிறார்கள். தானாக பதவியை விலக எடப்பாடி பழனிச்சாமி மறுக்கும் பட்சத்தில் தொண்டர்களும் பொதுமக்களும் இணைந்து அதற்கான சூழ்நிலையை உருவாக்குவார்கள் என்று கூறியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.

சமீபத்திய செய்திகள்

news

ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினுக்கு மேலும் 2 மகன்கள் உள்ளனராம்.. யார் மூலமா தெரியுமா?.. பரபர தகவல்!

news

ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பினார் மகாவிஷ்ணு.. சைதாப்பேட்டை போலீஸ் கிடுக்கிப்பிடி விசாரணை!

news

ஸ்டிரைக் அறிவிப்பை மறு பரிசீலனை பண்ணுங்க.. தயாரிப்பாளர்களுக்கு நடிகர் சங்கம் கோரிக்கை

news

சின்னத்திரையில் பாலியல் அத்துமீறல்கள் கிடையாது.. எல்லாமே மியூச்சுவல்தான்.. நடிகையின் ஸ்டேட்மென்ட்!

news

28வது வருட திரையுலக வாழ்க்கையில் சிம்ரன்.. தி லாஸ்ட் ஒன்.. நாயகியாக மீண்டும் ரீ என்ட்ரி!

news

விதம் விதமான விநாயகர்கள்.. தமிழ்நாடு முழுவதும் 35,000 சிலைகள்.. விநாயகர் சதுர்த்தி கோலாகலம்

news

விளையாட்டுக் களத்திலிருந்து.. அனல் பறக்கும்.. தேர்தல் களத்திற்கு என்ட்ரி கொடுக்கும் வினேஷ் போகத்!

news

செப்டம்பர் 07 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

ரிஷப ராசிக்காரர்களே... திறமை வெளிப்படும் காலமிது

அதிகம் பார்க்கும் செய்திகள்