சென்னை: எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். எந்த கவலையும் இல்லாமல் சந்தோஷங்களை மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்பது தான் மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரின் ஆசையும்.ஆனால் அனைவராலும் அப்படி வாழ முடிகிறதா...துன்பம் இல்லாத மனிதன் உண்டா என்றால் நிச்சயம் இல்லை.
சந்தோஷம் என்பது என்ன? நாம் நினைத்தது நடந்தால் சந்தோஷம். வேண்டியது கிடைத்தால் சந்தோஷம். ஆனால் இந்த சந்தோஷம் என்பது அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்குமா என்றால் அதுவும் இல்லை.மனிதனுக்கு மனிதன் சந்தோஷத்திற்கான காரணம் மாறுபடும்.
சந்தோஷம், மனிதனுக்கு மனிதன் மாறுபட கூடியது. ஆனால் ஆனந்தம் என்பது அனைவருக்கும் ஒன்று தான். அந்த ஆனந்தம் எங்கே உள்ளது, அதை அடைய நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தெய்வத்தின் குரலில் காஞ்சி மகா பெரியவா மிக எளிமையாக கூறி உள்ளார். அதை இங்கே பார்க்கலாம்.
முதலில் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். சந்தோஷம் என்பது வேறு, ஆனந்தம் என்பது வேறு. சந்தோஷம் நிலையற்றது. ஆனந்தம் நிரந்தரமானது. அதனால் தான் பெரியவர்கள் இறைவனை குறிப்பிடும் போது சந்தோஷம், இன்பம் என்ற வார்த்தைகளை பயன்படுத்தாமல் 'ஆனந்தமயமானவர்'என குறிப்பிடுகின்றனர்.
மனிதனாய் பிறந்த ஒவ்வொருக்கும் ஆசை உள்ளது. இந்த ஆசை ஒன்றுடன் முடிவதும் அல்ல. ஒன்று முடிந்தால் மற்றொன்று என்று முடிவில்லாமல் போய் கொண்டே இருக்கும். நாம் எதிர்பார்த்த விஷயம் நடந்தால் சந்தோஷத்தை உணர்கிறோம். நடக்காவிட்டால் கவலை கொள்கிறோம். அதே விஷயம் ஏன் நடந்தது என சில காலங்கள் கழித்து வருந்துகிறோம். நடக்காததால் கவலைப்பட்ட விஷயத்தை நினைத்து, நல்ல வேளை நடக்கவில்லை என சந்தோஷமும்படுகிறோம். இது தான் மனித வாழ்க்கை.
அப்படியானால் ஆனந்தம் என்பது என்ன? எந்த வித ஆசையும் இல்லாத நிலையே ஆனந்தம்.அந்த ஆனந்தம் நம்மிடமே உள்ளது. உலக ஆசைகளில் இருந்து விடுபட விடுபட மனிதன் ஆனந்த நிலையை நோக்கி முன்னேறுகிறான். ஒவ்வொரு ஆசையும் ஒரு துன்பத்தின் ஆரம்ப புள்ளி. ஆசைகளில் இருந்து விடுபடும் போது இன்ப - துன்பத்திற்கு அப்பாற்பட்ட நிலை ஏற்படுகிறது.
நன்கு சிந்தித்து பார்த்தால் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் கிடையாது. அவைகளும் தான் பிறந்து, வாழ்ந்து, உண்டு, சந்ததியை விருத்தி செய்கின்றன. ஆனால் விலங்குகளால் ஞானத்தை அடைய முடியாது. மனிதனால் அது முடியும். மற்ற உயிர்கள் அனைத்தும் தாங்கள் வாழ்நாளில் செய்த வினைக்கான எதிர்வினை அல்லது கர்மாவை அனுபவித்தே தீர வேண்டும். மனிதனுக்கும் இதே நிலை தான். ஆனால் நினைத்தால் அந்த கர்மாவில் இருந்து விடுபட்டு, இறை நிலையை அடைய முடியும்.
ஆசைகளில் இருந்து விடுபடும் போது நாம் யார் என்பது உணரும் ஞானம் பிறக்கிறது. நான் யார் என்ற கேள்விக்கு விடை தெரிந்தாலே, நமக்குள் தான் கடவுள் இருக்கிறார் என்பதை உணர முடியும். இறைவன் நீயே என்பதை உணரும் நிமிடம் உனக்குள் நிறைவதே ஆனந்தம். வெளி வஸ்துக்களிலிருந்து நமக்கு ஆனந்தம் வரவில்லை. நம்மிடமிருந்தேதான் ஆனந்தம் பிறக்கிறது.
{{comments.comment}}