சென்னை : சூரியனை மையமாகக் கொண்டே தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுகின்றன. சூரிய பகவான் தனது ஓராண்டு பயணத்தை நிறைவு செய்து, அடுத்த பயணத்தை அதாவது தனது ஏழு குதிரைகள் கொண்ட ரதத்தை தெற்கு நோக்கி செலுத்த துவங்கும் நாளே சித்திரை முதல் நாளாகும். சூரிய பகவான், மேஷ ராசியில் தனது பயணத்தை துவங்கும் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடி மகிழ்கிறோம்.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான தமிழ் புத்தாண்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 14 ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மங்களகரமான வெள்ளிக்கிழமை மற்றும் பெருமாளுக்கு உகந்த திருவோண நட்சத்திர நாளில் தமிழ் புத்தாண்டு பிறந்துள்ளது. சுபகிருது ஆண்டு நிறைவடைந்து, சோபகிருது ஆண்டு பிறந்துள்ளது. 60 ஆண்டுகளை கொண்டு தமிழ் ஆண்டுகளின் சுழற்சியில் 37 வது ஆண்டாக வருவது சோபகிருது.
சோபகிருது என்றாலே மங்கலம் என்றும் பொருள். பெயருக்கு ஏற்றது போலவே சோபகிருது ஆண்டு வளமான, மகிழ்ச்சிகரமான, வெற்றிகரமான ஆண்டாக இருக்கும் என பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. போதிய அளவு மழை பெய்து, விவசாயம் செழிக்கும். மக்கள் வளமான, வெற்றிகரமான வாழ்க்கை வாழ்வார்கள். பழமையான நாடுகள் மற்றும் நகரங்கள் புகழ் பெறும். வியாபார, தொழில் விருத்தி ஏற்படும் என பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்படுகிறது.
மங்கலங்களையும், செல்வ வளத்தையும் அள்ளித் தரும் சோபகிருது ஆண்டின் துவக்க நாளான தமிழ் புத்தாண்டு தினத்தில் அதிகாலையில் எழுந்து நீராடி, விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். இந்த நாளில் கனி காணுதல் மிக விசேஷமானது. முதல் நாளே இரவே ஒரு தட்டில் மா, பலா, வாழை என்ற முக்கனிகளுடன், பிற பழங்கள், வெற்றிலை -பாக்கு, பூ, மஞ்சள், குங்குமம், வீட்டில் இருக்கும் ஏதாவது ஒரு வகை, பணம் ஆகியவற்றுடன், முகம் பார்க்கும் கண்ணாடியை தயாராக எடுத்து வைக்க வேண்டும். தமிழ் புத்தாண்டு அன்று காலையில் வீட்டில் உள்ள அனைவரும் எழுந்ததும் முதலில் தட்டில் பரப்பி வைக்கப்பட்ட பழங்களை தான் முதலில் பார்க்க வேண்ட���ம். பிறகு கண்ணாடியில் தங்களின் முகத்தை பார்க்க வேண்டும். இதற்கு கனி காணுதல் என்று பெயர்.
பகலில் அறுசுவை உணவு சமைத்து, இறைவனுக்கு படைத்து வழிபட வேண்டும். இன்றைய உணவில் வேப்பம்பூ ரசம் மற்றும் மாங்காய் பச்சடி கண்டிப்பாக உணவில் இடம்பெற வேண்டும். இந்த நாளில் புதிதாக உப்பு, மஞ்சள், அரிசி, வெல்லம் போன்ற மங்கல பொருட்களை வாங்கி வந்து வீட்டில் சுவாமி படங்களுக்கு முன்பு வைத்து வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் வீட்டில் ஆண்டு முழுவதும் மங்களங்களும், செல்வ வளமும் நிறைந்திருக்கும் என்பது ஐதீகம்.
{{comments.comment}}