சென்னை: சிறைக் கைதிகளுக்கு புதிய டயட் உணவு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழ்நாடு அரசின் சிறைத்துறை.
கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபையில் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சிறைக் கைதிகளுக்கான உணவு முறையில் மாற்றம் தேவை என்று கோரிக்கைகள் வந்தன. இதுதொடர்பாக நிபுணர் குழு அமைக்கப்பட்டு அதன் அறிவுரை பெறப்பட்டுள்ளது. அவர்கள் தரும் பரிந்துரைகளை அமல்படுத்துவோம் என்று கூறியிருந்தார்.
அதன்படி நிபுணர் குழு அமைத்து அதன் அறிக்கை பெறப்பட்டுள்ளளது. தற்போது அதன் அடிப்படையில் புதிய டயட் மனு உருவாக்கப்பட்டு அது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரூ. 26 கோடி மதிப்பீட்டில் இந்த புதிய டயட் மெனு செயல்படுத்தப்படவுள்ளது. சென்னை புழல் சிறையில் இந்த புதிய டயட் மெனு திட்டம் தொடங்கப்பட்டது. கைதிகளுக்கு தனது கையால் அமைச்சர் ரகுபதி உணவு பரிமாறினார்.
புதிய திட்டப்படி தினசரி காலை 6.30 மணிக்கு முதலில் கைதிகளுக்கு டீ கொடுக்கப்படும். அதன் பின்னர் 7.30 மணிக்கு காலை உணவு வழங்கப்படும். மதிய உணவு 11.30 மணிக்கு விநியோகிக்கப்படும். மாலை 3 மணிக்கு டீ, ஸ்னாக்ஸ் தரப்படும் . இரவு உணவு 4. 30 மணிக்கே வழங்கப்பட்டு விடும்.
புதிய உணவுப் பட்டியலில் கோதுமை உப்புமா, ராகி உப்புமா, எலுமிச்சம்பழ சாதம், சப்பாத்தி, இட்லி சாம்பார், தக்காளி சாதம், பொங்கல் சாம்பார், புதினா சாதம் ஆகியவை காலை உணவுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. முன்பெல்லாம் வெறும் அரிசிக் கஞ்சிதான் காலை உணவாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மதிய உணவில் ரசம், சாதம், ரவா கேசரி, நெய், வாழைப்பழம், கீரை, சிக்கன் கறி, அவியல், சாம்பார், தயிர், காரக் குழம்பு, பொறியல், கொய்யா, கீரை சாம்பார் ஆகியவை இடம் பெற்றுள்ளது. வாரம் 3 நாட்கள் ஏ கிளாஸ் கைதிகளுக்கும், 2 முறை பி கிளாஸ் கைதிகளுக்கும் சிக்கன் தரப்படும்.
மாலை ஸ்னாக்ஸ் பட்டியலில் டீ, கொண்டைக் கடலை சுண்டல், பச்சைப் பயறு, காராமணிசுண்டல், மூக்குக் கடலை சுண்டல் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது. இரவு சாப்பாட்டில் சப்பாத்தி, அரிசி, சாதம், ரசம், சென்னா ஆகியவை இடம் பெற்றுள்ளது.
ஒரு ஏ கிளாஸ் கைதிக்கான சாப்பாட்டுச் செலவு தற்போது ரூ. 207.89 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பி கிளாஸ் கைதிக்கான சாப்பாட்டுச் செலவு ரூ. 135.26 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
{{comments.comment}}