Pongal Special Story: ஒரே வீடு.. 27 குடும்பம்.. 75க்கும் மேற்பட்டோர் இணைந்து பொங்கல்.. அற்புதம்!

Jan 17, 2024,06:37 PM IST

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை கிராமத்தில், ஒரே வீட்டில் கூடிய 27 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இணைந்து பொங்கல் வைத்துக் கொண்டாடிய நிகழ்வு அனைவரையும் அசர வைத்துள்ளது. இந்தக் காலத்தில் இப்படியும் குடும்பங்கள் கூடுவது அபூர்வமாக இருப்பதால் அந்தப் பகுதி மக்களும் வியந்து போய் இவர்களைப் பார்த்து மகிழ்ந்தனர்.


இந்தப் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு அதன் அனுபவத்தை தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம், சுவாரஸ்யமாக விவரித்துள்ளார். இனி அவரது வார்த்தைகளிலேயே அந்த அருமையான அனுபவத்தை நாமும் படித்துத் தெரிந்து கொள்வோம்.




கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக  நெற்குப்பை சார்ந்த சேதுராமன் சாத்தப்பன் அவர்கள் எங்களை கூட்டுக்குடும்ப பொங்கல் விழாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். அப்பொழுது நாங்கள் சென்ற பொழுது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. கணவன், மனைவியாக இரண்டு பேர் கூடி ஓரிடத்தில் இருப்பதே இன்று   மிகப்பெரிய விஷயமாக கருதப்படுகிறது. அதேபோல்தான் தந்தை, மகன், தந்தை, மகள், தாய் ,மகள் என்று அனைத்து குடும்ப உறுப்பினர்களும் ஒன்றாக கூடுவது என்பது மிகப்பெரிய விஷயமாக இன்று இருக்கின்றது.


7வது ஆண்டாக நடந்த கூட்டுப் பொங்கல்


இந்த நிலையில் 27 குடும்பங்களைச் சார்ந்த 75 இற்கும் மேற்பட்டோர் தொடர்ந்து 7 ஆண்டுகளாக மூன்று நாள் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்ளக் கூடிய கூட்டு பொங்கல்  விழா மிகப் பெரிய ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. இந்த கூட்டு பொங்கல் விழாவில் அனைத்து பெண்களும், அனைத்து ஆண்களும் ஒரே மாதிரியான கலரில் உள்ள சேலை, சட்டை அணிந்து பொங்கல் வைத்த நிகழ்வு இன்னும் ஒரு ஆச்சரியம்.




பொங்கல் வைத்ததுடன் பாரம்பரிய விளையாட்டுக்கள், புதுவிதமான விளையாட்டுக்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து ஒன்றாக இந்த விளையாட்டுகளில் பங்கேற்க வைத்தனர். இளையவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரையும் இந்த நிகழ்வில் முழுவதுமாக பங்கேற்க வைத்ததுதான் பாராட்டுக்குரிய விஷயம். கையெழுத்து போட்டி, தம்போலா போட்டி, குடும்ப உறுப்பினர்கள் கூடி விளையாடும் போட்டி, பட்டிமன்றம் என மூன்று நாட்களுமே வீடே களைகட்டியது.


பொதுவாக இன்று நகரத்தார் வீடுகளில் பெரும்பாலான வீடுகளில் பராமரிப்பு இல்லாமல் புறாக்கள், பல்வேறு விதமான எலி, பூனைகள்  கூடியிருக்கும் வீடுகளாக மாறி வருகிறது. ஆனால் அந்த சூழ்நிலையை மாற்றி மூன்று மாதத்திற்கு முன்பாகவே முயற்சி எடுத்து பல்வேறு விதமான திட்டங்களை தீட்டி 75 இற்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் இன்னும் உறவில் உள்ள 100 பேரையும் ஒரு வீட்டில் , ஒரே இடத்தில்  சந்திக்கக்கூடிய வாய்ப்பு மிகப் பெரிய ஆச்சிரியமாகவே  பார்க்கப்படுகிறது. 


ஒரே மாதிரி சேலை, சட்டை




பாம்பே சேதுராமன் சாத்தப்பன் அவர்கள்தான் இதற்கான பிள்ளையார் சுழி போட்டுள்ளார்.  இந்த ஆண்டின் நிகழ்வு குறித்து அமைப்பாளர்  முத்து கூறுகையில், மூன்று மாதங்களுக்கு முன்பாகவே சேலை எடுத்து, அந்த சேலையை தறியில்  நெய்ய கொடுத்து செய்த பிறகு அதற்காக ஜாக்கெட்டும் எடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்தோம். சேலைகள்  தயாரானதுடன் அமெரிக்கா , சிங்கப்பூர், கோவை,மதுரை, திருச்சி என பல இடங்களிலும் உள்ள உறவினர்களுக்கு கூரியர் மூலம் சேலைகளை அனுப்பி விடுவோம். ஆண்களுக்கும் ஒரே மாதிரியாக சட்டைகள் மீட்டர் அளவு கேட்டு  அதற்கான முயற்சிகளையும் எடுத்து பல்வேறு விதமான முயற்சிகளுக்குப் பிறகு இந்த நிகழ்வை நடத்துகிறோம்.


பொங்கல் விழாவுக்கு முன்பு முதல் நாள்  சேலைகளையும் , சட்டைகளையும் குடும்பத்தில் உள்ள  பெரியவர்களிடம்  கொடுத்து  ஆசீர்வாதம் வாங்கி பெற்றுக்கொள்வோம். போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் வாங்கப்படுகிறது. இந்த பரிசுக்காக வாட்ஸ்அப் குழுவில் பல்வேறு விதமான உரையாடல்களை நடத்தி அர்த்தமுள்ள பரிசுகளாக அனைவருக்கும் வழங்குகிறோம். மூன்று நாட்கள் நடப்பதற்கும் முன்கூட்டியே எங்கள் அண்ணன்கள், அண்ணிகள் , தம்பி ஆகிய அனைவரும் இணைந்து  நல்ல திட்டமிடல் செய்கிறோம். 


விதம் விதமான விளையாட்டுகள்




என்னென்ன மாதிரியான விளையாட்டுக்களை விளையாடலாம் என்பது தொடர்பாகவும், பழமையான, புதுமையான அனைத்து விதமான விளையாட்டுக்களை விளையாடுவது தொடர்பாகவும், ஒரு மாதம் முன்பாகவே வாட்ஸப் குழுவின் மூலமாக உரையாடல்களை நடத்தி அதிலும் மிகச் சிறப்பாக ஏற்பாடுகளை செய்கிறோம். என்று கூறினார்.


இந்த நிகழ்விற்கு என்னையும் அழைத்திருந்தார்கள். நானும் சென்றிருந்தேன். குடும்பத்தின் மூத்தவர் சுந்தரம் செட்டியார் முன்னிலையில் விழா நடந்தது. இவ் விழாவை நடத்த ஆண்டுதோறும் 2 இளைஞர்களை தேர்வு செய்கிறார்கள். அந்த இருவர்தான்  தான் பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்கிறார்கள்.இந்த ஆண்டில் ராஜா, முத்து ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டு விழா ஏற்பாட்டை செய்திருந்தனர். 


எனக்கும் இது புதிய அனுபவமாக இருந்தது. என்னுடன் புதுக்கோட்டை அரசு கலை  கல்லூரியில் பணிபுரியும்  நண்பர் கருப்பையா அவர்கள் வந்து இருந்தார். கருப்பையா அவர்கள் இந்நிகழ்வு குறித்து கூறும்போது, இந்த மூன்று நாள் பொங்கல் நிகழ்வில் இவர்கள் அனைவரும் ஒன்றாக கூடி  மகிழ்வது  அவர்களுக்கு பல மாதங்களுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும் என்று என்னிடம் கூறினார். ஒருவர் இருவரே இன்று சொந்தத்தில் அளவளாவ இயலாத நிலையில், இத்தனை பேர் ஒரே இடத்தில் அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர் என்று பல்வேறு இடங்களில் இருந்தும் வந்திருந்தது மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கிறது என்றும் அவர் என்னிடம் தெரிவித்தார்.


உறவுகள் வலுப்படும்




இந்த நிகழ்வை ஆரம்பித்த சேதுராமன் சாத்தப்பன் அவர்களுக்கும், தொடர்ந்து இதனை நடத்திவரும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். 


இந்த நிகழ்வில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர்  சபாரத்தினம் அவர்களையும், அவர்களது மகன் சிங்கப்பூரில் ஒளிபரப்புத்துறையில் மூத்த  செய்தி ஆசிரியராக இருக்கக்கூடிய சபா முத்து நடராஜன் அவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிங்கப்பூர் நியூஸ் தொலைக்காட்சியின் இயக்குனர்  மிகவும் அருமையான பல்வேறு தகவல்களை  எங்களுக்கு எடுத்துக்கூறினார். 


புத்தகங்களையும் பரிசாக வழங்கினார். அவர்களுடைய சந்திப்பும் இந்த பயணத்தின் மூலமாக எங்களுக்கு கிடைத்தது . அனைத்துக்கும் பாம்பே சேதுராமன் சாத்தப்பன் அவர்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றிகள் பல.


Watch Video

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்