"அஸ்வின் அதுக்கெல்லாம் இனி சரிப்பட்டு வர மாட்டார்".. யுவராஜ் சிங் போட்ட குண்டு!

Su.tha Arivalagan
Jan 14, 2024,05:09 PM IST

டெல்லி: ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டி20 பார்மட்டுக்கு பொருத்தமில்லாதவராக மாறி விட்டார் ஆர். அஸ்வின் என்று கூறியுள்ளார் முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங்.


இந்திய அணியில் ஒரு காலத்தில் கோலோச்சி வந்தவர் யுவராஜ் சிங். குறிப்பாக எம்எஸ் தோனியின் இளம் படையில் முக்கியமானவராக திகழ்ந்தவர். ஆனால் போக்ப போக அவருக்கும், யுவராஜ் சிங்குக்கும் இடையே நட்பும், உறவும் கசந்து போனது. படிப்படியாக ஆட்டத் திறனையும் இழந்தார் யுவராஜ் சிங். இதனால் இந்திய அணியிலும் அவருக்கு இடமில்லாமல் போனது, ஐபிஎல்லிலும் கூட அவர் காணாமல் போய் விட்டார்.


இந்த நிலையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின் குறித்து சர்ச்சைக்கிடமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார் யுவராஜ் சிங். அஸ்வின், ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு பொருத்தமானவர் இல்லை என்று கூறியுள்ளார். 




இந்திய அணியின் டெஸ்ட் மட்டுமல்லாமல், ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் பலவற்றில் அஸ்வினின் பந்து வீச்சு பெரும் வெற்றிகளைத் தேடிக் கொடுத்துள்ளது என்பதில் சந்தேகமே இல்லை. பல உலகக் கோப்பைத் தொடர்களிலும் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடியும் உள்ளார். கடந்த ஆண்டு நடந்த ஒரு நாள் உலகக் கோப்பைத் தொடரில்தான் அவருக்கு சரியான வாய்ப்பு அளிக்கப்படவில்லை.


இந்த நிலையில் யுவராஜ் சிங், அஸ்வின் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு லாயக்கில்லாதவர் என்று கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:


அஸ்வின் சிறந்த வீரர்தான். சந்தேகமே இல்லை. ஆனால் ஒரு நாள், டி20 போட்டிகளுக்கு அவர் பொருந்த மாட்டார்.  அவர் நல்ல பேட்ஸ்மேனும் கூடத்தான். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது பங்களிப்பு இருக்கிறது. ஆனால் ஒரு நாள் போட்டிகளிலும், டி20 போட்டிகளுக்கும் அவரது ரோல் மிகச் சிறியதே. அவருக்கு இந்த இரு அணிகளிலும் இடமில்லை என்பதே எனது கருத்து என்று கூறியுள்ளார் யுவராஜ் சிங்.


யுவராஜ் சிங் இப்படிக் கூறியிருந்தாலும், அவரைப் பற்றி அஸ்வின் எப்போது பேசினாலும் உயர்வாக மட்டுமே பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக யுவராஜ் சிங் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சமயத்தில் அஸ்வின் அவரைப் பற்றி நிறையவே புகழ்ந்து பேசியிருந்தார். ஊக்கம் கொடுத்து பேசியிருந்தார்.


2011 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் அஸ்வினும், யுவராஜ் சிங்கும் இணைந்து ஆடியிருந்தது நினைவிருக்கலாம்.