"விட மாட்டேன்".. முழு வீச்சில் களம் குதித்த யூலியா.. அலெக்ஸி நவல்னி மனைவிக்கு அதிகரிக்கும் ஆதரவு!

Su.tha Arivalagan
Feb 20, 2024,07:28 PM IST

வார்சா: ரஷ்யாவில் சிறையில் மர்மமான முறையில் மரணமடைந்த எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் மனைவி யூலியா நவல்னியா, முழு வீச்சில் களம் இறங்கியுள்ளார். தனது கணவர் விட்டுச் சென்ற பணிகளை தான் மேற்கொள்ளப் போவதாக அவர் கூறியுள்ளதால் அலெக்ஸியின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


அலெக்ஸிக்கும், யூலியாவுக்கும் ஒரே வயதுதான். இருவரும் காதலித்து மணம் புரிந்து கொண்டவர்கள். அலெக்ஸி அரசியலில் ஈடுபட, பொருளாதாரம் படித்துள்ள யூலியா தனது பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வதற்காக தான் பார்த்து வந்த வேலையை விட்டு விட்டார். 




முழு நேரமும் வீட்டையும் பார்த்துக் கொண்டு, கணவருக்கும் துணையாக இருந்து வந்தார். வீட்டு நிர்வாகத்தை அவர் முழுமையாக பார்த்துக் கொண்டதால், அலெக்ஸிக்கு பொதுப் பணியில் ஈடுபடுவது எளிதாக இருந்தது. கணவரின் நிலைப்பாடுகளுக்கு முதல் ஆதரவுக் குரல் யூலியாவிடமிருந்துதான் வருமாம். அந்த அளவுக்கு கணவரின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்துள்ளார் யூலியா.


கணவருக்குத் துணை நின்ற யூலியா


பல வருடமாகவே அலெக்ஸி தீவிர அரசியல் செய்து வந்தார். அப்போதெல்லாம் அவருக்குப் பின்னால்தான் இருந்து வந்தார் யூலியா. ஆனால் மீடியா வெளிச்சத்தை அவர் விரும்பியதில்லை. எப்போதுமே முன்னுக்கு வந்து நிற்க மாட்டார். தான் உண்டு, வீடு உண்டு, கணவர் குழந்தைகள் என்ற அளவில்தான் இருந்து வந்தார்.


இருவருக்கும் இடையே துருக்கியில்தான் காதல் ஏற்பட்டது. சந்தித்த முதல் மீட்டிங்கிலேயே இருவரும் காதல் கொள்ள அதே வேகத்தில் திருமணமும் செய்து கொண்டனர்.  அலெக்ஸிக்கு மிகச் சிறந்த துணையாக இருந்தவர் யூலியா. அவரை முழுமையாக சப்போர்ட் செய்தார், அவருக்குத் துணையாக நின்றார்.  




கணவர் சந்தித்த சவால்களிலிருந்து அவர் மீள முழுமையாக பாடுபட்டார். 2020ம் ஆண்டு விஷ ஊசி போட்டு நவல்னியைக் கொல்ல முயன்றபோது அவர் கோமாவுக்குப் போய் விட்டார். அவரை ஜெர்மனிக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளித்தபோது யூலியாதான் கூடவே இருந்தார். கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார். அலெக்ஸி மீண்டு வந்ததில் யூலியாவின் பங்கும் அதிகம்.  


அலெக்ஸிக்கு உடல் நலம் சரியானதும் மீண்டும் ரஷ்யா திரும்ப அவர் முடிவெடுத்தபோது யூலியா அதிர்ச்சி அடைந்தார். நிச்சயம் புடின் அரசு கணவரை சிறையில் பிடித்துப் போடும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். ஆனாலும் கணவரின் விருப்பத்தை தடுக்க அவர் விரும்பவில்லை. மாறாக துணையாக இருக்கவே முடிவு செய்தார்.


கடைசியாகப் பார்த்தது 2022ல்




மாஸ்கோ விமான நிலையம் வந்து இறங்கியதுமே அலெக்ஸி கைது செய்யப்பட்டு விட்டார். அதுதான் யூலியா, அவரை கடைசியாக சுதந்திர மனிதராக பார்த்தது. விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட அலெக்ஸி அதன் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டு விட்டார். 2022ம் ஆண்டுக்குப் பிறகு அலெக்ஸியை நேரில் கூட பார்க்க முடியாமல் தடுக்கப்பட்டு விட்டார் யூலியா.


குடும்ப அன்பும், பாசமும் அதிகம் கொண்ட தம்பதி யூலியா - அலெக்ஸி. அடிக்கடி தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் தாங்கள் ஜோடியாக இருக்கும் புகைப்படம் அல்லது பிள்ளைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம், வீடியோ என்று ஏதாவது ஒன்றை போட்டுக் கொண்டே இருப்பார்கள்.


யூலியா தற்போது தனது கணவரின் பணிகளைத் தொடர முடிவு செய்திருக்கிறார். நாட்டுக்காகவும், அலெக்ஸிக்காவும், அவரை நம்பியவர்களுக்காகவும், தான் உறுதியோடு செயல்பட அவர் தீர்மானித்துள்ளார். எனக்குத் துணையாக இருங்கள் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவுக்கு அலெக்ஸியின் ஆதரவாளர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.


Images: yulia_navalnaya/Instagram