சிசுவின் பாலினத்தை வெளியிட்ட விவகாரம்.. யூடியூப்பர் இர்ஃபானிடம் அதிகாரிகள் விசாரணை!

Meenakshi
May 22, 2024,05:43 PM IST

சென்னை: தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை வெளியிட்ட விவகாரத்தில், இன்று இர்ஃபானிடம் சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பல்வேறு உணவகங்களுக்குச் சென்று உணவுகளை சுவைத்து அதனை வீடியோவாக யூடியூபில் வெளியிட்டு  பிரபலமானவர்  இர்ஃபான். இவருக்கு யூடியூபில் லட்சக்கணக்கான பாலோயர்கள் இருக்கிறார்கள். யூடியூப்பின் மூலம் பிரபலமான இவருக்கு  கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.  இர்பானின் மனைவி ஆலியா தற்போது கர்ப்பமாக உள்ளார். அவருக்கு என்ன குழந்தை பிறக்கும் என்பதை ஒரு பார்ட்டி வைத்து அறிவித்து இருக்கிறார். குழந்தையின் பாலினத்தை துபாயில் உள்ள மருத்துவமனையில் கண்டறிந்துள்ளார்.




இந்த விழாவின் இறுதியில், ஸ்கேன்  முடிவுகளின் படி தங்களுக்கு பெண் குழந்தை தான் பிறக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பாலினத்தை அறிவதும், வெளியிடுவதும் சட்டப்படி குற்றமாகும். இதனால் இர்பான் மீது வழக்கு பாயும் சூழல் ஏற்பட்டுள்ளது. சர்ச்சையைத் தொடர்ந்து தற்போது இர்பானின் வீடியோ நீக்கப்பட்டுள்ளது. அவரும் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில்  இர்ஃபானிடம் மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  அவரிடம் விளக்கம் கேட்ட பிறகு இந்த வழக்கை எப்படிக் கொண்டு போவது என்பது குறித்து அதிகாரிகள் முடிவெடுப்பார்கள் என்று தெரிகிறது.