தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவில் உள்நோக்கம் இல்லை.. யூடியூபர் இர்பான் விளக்கம் + வருத்தம்!

Meenakshi
Oct 26, 2024,02:41 PM IST

சென்னை: தொப்புள் கொடியை வெட்டியது தொடர்பாக, எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை என்றும், மருத்துவ சட்டங்களை மதிப்பதாகவும் யூடியூபர் இர்பான் விளக்கம் தெரிவித்துள்ளார்.


யூடியூபர் இர்பான், பல்வேறு மேலிடத் தொடர்புகளை வைத்துக் கொண்டு அவற்றை மிஸ் யூஸ் செய்கிறார், விளம்பரங்களுக்காக அத்து மீறி செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.  குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்தக் கூடாது என்று இந்தியாவில் சட்டமே உள்ளது. ஆனால் தனது மனைவிக்கு பெண் குழந்தை பிறக்கப் போவதாக வீடியோ போட்டு அதிர்ச்சி அளித்தார். இதுதொடர்பாக அவருக்குக் கண்டனங்கள் எழுந்தன. ஆனால் அவர் மீது எந்தக் கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.




இது தொடர்பாக இர்பானுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியதோடு அந்த வீடியோவை நீக்க வேண்டும் என்றும் இர்பானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்பின்னர் அந்த வீடியோ இணையதள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது. இர்பான் மருத்துவ குழுவிடம்  மன்னிப்பு கேட்டதால், அவர் மீதான நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.  இதுவே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சாதாரணமாக ஒருவர் இதைச் செய்திருந்தால் எந்த அளவுக்கு கடுமையான நடவடிக்கை பாய்ந்திருக்கும் என்ற விமர்சனங்கள் எழுந்தன.


இதனையடுத்து, தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் இர்பான். இர்பானின் மனைவிக்கு சில நாட்களுக்கு முன்னர் பிரசவம் நடந்தது. அப்போது ஆபரேஷன் அறைக்கும் சென்றுள்ளார் இர்பான். தனது குழந்தையின் தொப்புள் கொடியை கட் செய்துள்ளார். அதனை வீடியோவாக எடுத்து இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக உருவெடுத்துள்ளது. 


இந்திய மருத்துவச் சட்டத்தின் படி இது தவறு என்றும், மேலும், பயிற்சி பெற்ற மருத்துவர்கள் தான் இந்த அறுவை சிகிச்சையை செய்ய வேண்டும் என்றும், தொப்புள் கொடியை இர்பான் வெட்டுவது தனிநபர் உரிமையை மீறும் செயல் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இர்பான் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டது.


இந்நிலையில், தனது குழந்தையின் தொப்புள் கொடி வெட்டிய விவகாரத்தில் யூடியூபர் இர்பான், மருத்துவ துறைக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். தான் வெளிநாட்டில் இருப்பதால் உதவியாளர் மூலமாக தனது தரப்பு வருத்தத்தை கடிதத்தின் மூலமாக தெரிவித்துள்ளார். எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை என்றும், மருத்துவ சட்டங்களை மதிப்பதாகவும் இர்பான் விளக்கம் தெரிவித்துள்ள அந்த கடிதத்தை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ ஊரக நலப்பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தியிடம் கொடுத்துள்ளார்.


இந்த வருத்தத்தை ஏற்று விவகாரத்தை இத்தோடு விட்டுவிடுவார்களா அல்லது இந்த முறையாவது இர்பான் மீது நடவடிக்கை பாயமா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்