குழந்தையின் பாலினத்தை அறிவித்த யூடியூபர் இர்ஃபான்.. சுகாதாரத்துறை நடவடிக்கை பாய்கிறது!

Meenakshi
May 21, 2024,04:10 PM IST
சென்னை: தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்த யூடியூபர் இர்பான் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது. இதனால் இர்பானுக்கு சிக்கல் எழுந்துள்ளது.

பல்வேறு உணவகங்களுக்குச் சென்று உணவுகளை சுவைத்து அதனை வீடியோவாக யூடியூபில் வெளியிட்டு  பிரபலமானவர் தான் இர்ஃபான்.  சுருக்கமாக சொல்வதானால் "சாப்பாட்டு ராமன்".. சமீபகாலமாக சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளிடமும் பேட்டி எடுத்து யூடியூபில் பதிவிட்டும் வருகிறார். நடிகர் நெப்போலியனியன் அமெரிக்க வீட்டுக்கு விஜயம் செய்து இவர் போட்ட வீடியோக்கள் பெரும் வைரல் ஆயின. 

இவருக்கு யூடியூபில் லட்சக்கணக்கான பாலோயர்கள் இருக்கிறார்கள். யூடியூப்பின் மூலம் பிரபலமான இவருக்கு  கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்தின் போது மறு வீட்டிற்கு மணப்பெண் வீட்டிற்கு சென்று விட்டு சென்னை திரும்பிய போது இவரது கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பல்வேறு விதமாக செய்திகள் வெளியாகி சர்ச்சையை கிளப்பின.



இந்நிலையில் சமையல் கலையை மையமாக வைத்து நகைச்சுவை மற்றும் கேளிக்கை நிறைந்த நிகழ்ச்சியாக விஜய் டிவியில் ஒளிபரப்பபட்டு வரும் குக் வித் கோமாளி  நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கியுள்ளார் இர்ஃபான். இர்பானின் மனைவி ஆலியா தற்போது கர்ப்பமாக உள்ளார். அவருக்கு என்ன குழந்தை பிறக்கும் என்பதை ஒரு பார்ட்டி வைத்து அறிவித்து இருக்கிறார். இந்த விழாவின் இறுதியில், ஸ்கேன்  முடிவுகளின் படி தங்களுக்கு பெண் குழந்தை தான் பிறக்க உள்ளதாக அறிவித்துள்ளார் இர்ஃபான்.

இந்த அறிவிப்பால் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்ததால், அவர் மீது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர். இது குறித்து இவர் வெளியிட்ட வீடியோவிற்கு விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்ப உள்ளது. மேலும் காவல்துறையிலும் யூடியூபர் இர்பான் மீது புகார் கொடுக்க உள்ளது.

இந்தியாவில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை  கண்டறிவது, அதை வெளியில் அறிவிப்பது சட்டப்படி குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.