ஐஸ்வர்யா ரகுபதியிடம் அத்துமீறல்... சரமாரியாக சாத்திய நடிகை.. காலில் விழுந்த இளைஞர்!

Meenakshi
Jan 04, 2024,07:21 PM IST

சென்னை: கேப்டன் மில்லர் பட விழாவில் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரும் நடிகையுமான ஐஸ்வர்யா ரகுபதியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு சிக்கினார் ஒரு இளைஞர். அந்த இளைஞரை பிடித்து அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தார். 


நடிகர் தனுஷ் நடித்து பொங்கலுக்கு வெளியாக உள்ள படம் தான் கேப்டன் மில்லர் திரைப்படம். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த இந்நிகழ்ச்சியில் தனுஷ்சின் ரசிகர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


கேப்டன் மில்லர் படகுழுவினரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இப்படத்தில் தொகுப்பாளினி ஐஸ்வர்யா ரகுபதியும் நடித்துள்ளார். அவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். நிகழ்ச்சி முடிந்ததும் தனுஷ் ரசிகர்கள் தனுஷைப் பார்க்க முண்டியடித்து கொண்டு சென்றனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. 




அந்த சமயத்தில் யாரோ ஒரு இளைஞர், ஐஸ்வர்யா ரகுபதியிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக தெரிகிறது. 


இதனால் கோபமடைந்த ஐஸ்வர்யா அந்த நம்பரை காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்து சரமாரியாக அடித்துள்ளார்.  இதுகுறித்து ஐஸ்வர்யா கூறுகையில், அந்த கூட்டத்தில் ஒருவன் என்னிடம் அநாகரீகமாக நடந்து கொண்டான். உடனடியாக அவனைப் பிடித்து நான் அடி கொடுத்தேன். அவன் என்னிடமிருந்து தப்பி ஓட முயன்றான். நான் ஓடிப் போய் விடாமல் பிடித்துக் கொண்டு கத்தினேன், அடித்தேன்.


ஒரு பெண்ணின் உடல் தொடும் அளவுக்கு துணிவு அவனுக்கு இருந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதே சமயம் என்னைச் சுற்றி நல்ல மக்களும் இருந்தார்கள். எனக்கு தெரியும் இந்த உலகத்தில் இரக்கமுள்ள மரியாதை உள்ள நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இவனைப் போன்ற சிலரை பார்க்கும் போது தான் அச்சமாக உள்ளது  என தெரிவித்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


சமீபத்தில் சரக்கு  பட விழாவின் போது நடிகர் கூல் சுரேஷ் ஒரு தொகுப்பாளருக்கு மாலை போட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் இல்லையா.. அந்த தொகுப்பாளர்தான் இந்த ஐஸ்வர்யா ரகுபதி. கூல் சுரேஷின் செயல் அப்போது கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது. பின்னர் கூல் சுரேஷ் மன்னிப்பு கேட்டார். இப்போது அதே ஐஸ்வர்யாவிடம் இன்னொரு இளைஞர் வம்பு செய்து சிக்கியுள்ளார்.