உதடுகள் ஒட்டாத திருக்குறள்... என்னங்க சொல்றீங்க... தமிழில் இப்படி எல்லாம் இருக்கா?

Aadmika
Oct 24, 2024,10:12 AM IST

திருக்குறள் என்பது பள்ளியில் படிக்கும் போது பரிட்சைக்காக, மார்க் வாங்க வேண்டும் என்பதற்காக விழுந்து விழுந்து கஷ்டப்பட்டு மனப்பாடம் செய்து படித்திருப்போம். இன்னும் சிலர் திருக்குறள் போட்டியில் பரிசு வாங்குவதற்காக படித்திருப்பார்கள். திருவள்ளுவர் 1330 குறள்களை எழுதி உள்ளார். இதில் நமக்கு எத்தனை குறள் தெரியும்? அதுவும் சரியான பொருளுடன் எத்தனை குறள் தெரியும் என்று கேட்டால் 10, 20 ஐ கூட தாண்ட மாட்டோம். ஆனால் சோஷியல் மீடியாவில் போஸ்ட் போடும் போது மட்டும் தமிழன், தமிழ், திருக்குறள் உலக பொதுமறை என ஆஹா ஓஹோ என புகழ்ந்து தள்ளுவோம்.


இன்று நாம் குழந்தைகளுக்கு பேச்சு பயிற்சிக்காக பயன்படுத்தும் டங்க் ட்விஸ்டர் போன்ற பல பயிற்சிகளை கொடுத்து வருகிறோம். ஆனால் இவற்றை எல்லாம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தன்னுடைய திருக்குறளில் வைத்து விட்டார் திருவள்ளுவர். திருக்குறளை பற்றி மட்டுமல்ல திருக்குறளில் மறைந்துள்ள அற்புதங்கள் பற்றியும் நம்மில் பலருக்கும் தெரியாது. அப்படி திருக்குறளில் நமக்கு தெரியாமல் மறைந்திருக்கும், ஆச்சரியப்படும் விஷயம் தான் உதடுகள் ஒட்டாத திருக்குறள்.




"யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன்."


தெளிவுரை :


நம் மனம் எந்தெந்தப் பொருள்களில் எல்லாம் விலகி இருக்கின்றதோ, அந்தப் பொருள்களால் நமக்கு துன்பம் கிடையாது... இதை இன்னும் கிளியரா சொல்லணும்னா.. ஆசையே துன்பத்திற்கு காரணம் அப்படின்னு புத்தர் சொல்றார் இல்லையே.. அதைத்தாங்க நம்ம திருவள்ளுவர் இவ்வளவு அழகா அவருக்கு முன்னாடியே சொல்லி வச்சிருக்கார்.. ஒரு விஷயத்தை ஆசைப்பட்டால்தானே நமக்கு அதை அடையணும் அப்படிங்கிற ஆர்வம் வரும்.. அது கிடைத்தால் ஓகே.. கிடைக்காமல் போகும்போது மனசு வருத்தப்படுகிறது.  ஆசையே வைக்காவிட்டால் அந்தத் துன்பம், வராது இல்லையா.. இதைத்தான் சொல்ல வருகிறார் திருவள்ளுவர்.


இந்த குறள் எதன் மீதும் பற்று இல்லாமல், மனது ஒட்டாமல் இருக்க வேண்டும் என்பதை உணத்துகிறது. இந்தக் குறளை உச்சரிக்கும் போது நம் உதடுகள் கூட ஒட்டாது. உதடுகள் ஒட்டாமல் உச்சரிக்கக் கூடிய ஒரே குறள் என்ற சிறப்பு வாய்ந்தது. மனது ஒட்டக் கூடாது என்பதை உணர்த்தும் திருக்குறளை உதடுகள் ஒட்டாத வகையிலான வார்த்தைகளை பயன்படுத்தி இயற்றி இருக்கும் நமது திருவள்ளுவர் எவ்வளவு ஜீனியஸ்  பாருங்கள்.


கருத்தாக்கம் + ஓவியம்: ஸ்வர்ணலட்சுமி



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்