தென்னிந்தியாவின் பழம்பெரும் நடிகை.. சிஐடி சகுந்தலா.. நெஞ்சு வலியால் பெங்களூரில் மரணம்!

Manjula Devi
Sep 18, 2024,11:14 AM IST

சென்னை:   தென்னிந்தியாவின் பழம்பெரும் நடிகையான சிஐடி சகுந்தலா (84) திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் காலமானார். பெங்களூரில் அவர் காலமானார்.


சேலம் மாவட்டத்தில் பிறந்த சி ஐ டி சகுந்தலா ஆரம்பக் காலத்தில் நாடகங்களில் பங்கு பெற்று தனது கலை வாழ்க்கை பயணத்தை தொடங்கினார். பின்னர் தமிழ் சினிமாவில் நடன கலைஞராகவும், சிறு சிறு வேடங்களிலும், வில்லி கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார். இவரின் துள்ளலான நடனம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 




1970 ஆம் ஆண்டு வெளியான சி ஐ டி சங்கர் என்ற படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் இவர் சிஐடி சகுந்தலா என்ற பெயர் பெற்றார். நாளடைவில் இப்பெயரே அவருக்கு நிரந்தரமானது. இதனைத் தொடர்ந்து தவப்புதல்வன் திரைப்படத்தில் நடிகர் சிவாஜி கணேசனை பழிவாங்கும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த நடித்த சகுந்தலாவின் கதாபாத்திரம்  பாராட்டப்பட்டது. அதேபோல் கருந்தேள் கண்ணாயிரம், வசந்த மாளிகை, இதயவீணை உள்ளிட்ட படங்கள்  இவரின் முக்கிய படைப்புகளாக அறியப்படுகிறது.


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு  மொழிகளில் இதுவரை 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக பொன்மானை தேடி என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு பல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார்.


84 வயதாகும் சகுந்தலா வயது மூப்பின் காரணமாக பெங்களூரில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்தார். அவருக்கு திடீரென நேற்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 


நடிகர் சங்கம் இரங்கல்:




சி ஐ டி சகுந்தலாவின் மறைவுக்கு மூத்த நடிகர் நடிகைகள், திரையுலகினர், ரசிகர்கள், என பலரும் தங்களின் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். தென்னிந்திய நடிகர் சங்கமும் சிஐடி சகுந்தலா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:


சிஐடி சகுந்தலா என்று மிகப் பிரபலமாக அழைக்கப்படும் அருணாச்சலம் சகுந்தலா அவர்கள், 1960-ஆம் ஆண்டு முதல் திரைத்துறையில் கோலோச்சி, 600-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரைப்படங்களில் கதாநாயகியாகவும், பல்வேறு முக்கிய கதாபாத்திரங்களிலும் திரையில் தனி முத்திரை பதித்தவர். திரையுலகில் நான்கு தலைமுறைகளைக் கடந்து பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்றவர்.


மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்கள், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள், மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்கள் உள்ளிட்ட பல முன்னணி கலைஞர்களோடு இன்றளவும் மனதில் நிற்கும் பல கதாபாத்திரங்களில் மிளிர்ந்து, தமிழ்த் திரையுலக வரலாற்றில் தன் சுவடுகளை பதித்தவர். காண்போரை கவர்ந்திழுக்கும் தனது நடனத் திறமையினாலும், நடிப்பு ஆற்றலாலும், ஆயிரக்கணக்கான ரசிகர்களை திரையரங்குகளுக்கு ஈர்த்த பெருமைக்கு உரியவர். 


கைதி கண்ணாயிரம், படிக்காத மேதை, ஒளி விளக்கு, சி ஐ டி சங்கர், வசந்த மாளிகை, தவப்புதல்வன், பொன்னூஞ்சல், அன்பைத் தேடி, ரோஜாவின் ராஜா, அதிர்ஷ்டக்காரன், இமயம், வண்டிச்சக்கரம், புதிய ராகம் உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் இவரது அற்புதமான நடிப்பின் மூலமாக ரசிகர்கள் நெஞ்சங்களில் நிரந்தரமாக குடி கொண்டவர். அன்பான இவரது அணுகுமுறையால் அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்பவர்.


தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மதிப்பிற்குரிய உறுப்பினராகவும், குறிப்பிடத்தகுந்த மூத்த திரைக்கலைஞர்களில் ஒருவராகவும் திகழ்ந்த சிஐடி சகுந்தலா அவர்கள்,17/09/2024 அன்று இயற்கை எய்தியது, தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும், எங்கள் உறுப்பினர்களுக்கும் ஈடு செய்ய இயலாத ஒரு பேரிழப்பாகும். அவர்தம் நினைவும், புகழும் என்றென்றும்  திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீடித்து நிலைத்திருக்கும்.


 அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தவருக்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக கனத்த இதயத்துடன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்