உச்சம் தொடும் இந்தியா - சீனா விவகாரம்.. ஜி20 மாநாட்டை புறக்கணிக்குமா சீனா

Aadmika
Sep 02, 2023,09:54 AM IST

பீஜிங் : இந்தியாவில் அடுத்த வாரம் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க சீன அதிபர் ஷின் ஜிங்பிங் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


ஜி 20 மாநாடு அடுத்த வாரம் டில்லியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் தான் கலந்து கொள்ள போவதில்லை என்றும், தனக்கு பதிலாக வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்து கொள்வார் என்றும் ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பிரதமர் மோடியை ஏற்கனவே தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.




இந்நிலையில் இந்தியா - சீனா எல்லை விவகாரம் உச்சகட்டத்தை எட்டி வருகிறது. இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளுக்கு பெயர் மாற்றிய சீனா, தற்போது அருணாச்சல பிரதேசத்தை சீனாவிற்கு உட்பட்ட பகுதி என குறிப்பிட்டு வரைபடம் வெளியிட்டு, மீண்டும் எல்லை பிரச்சனையை ஊதி பெரிதாக்கி உள்ளது. இரு நாடுகள் இடையேயான எல்லை பிரச்சனை தீவிரமடைந்த வரும் நிலையில், இந்தியாவில் நடக்கும் ஜி20 மாநாட்டை புறக்கணிக்க சீன அதிபர் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 


ஷி ஜின்பிங், இந்தியா வருவது தொடர்பாக இதுவரை எந்த உறுதியான தகவலும் இல்லை. ஜி 20 மாநாடு தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாமளர் வாங் வென்பின் தெரிவித்துள்ளார். சீனா சார்பில் பிரதிநிதிகள் யாராவது கலந்து கொள்கிறார்களா என்ற கேள்விக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிலளிக்க மறுத்து விட்டது.


ஆனால் ஷி ஜிங்பிங், ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்றும், அவர் கலந்து கொள்வார் என நம்புவதாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.