இந்தியாவில் சிலரது கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவு.. "எக்ஸ்" தளம் தகவல்

Su.tha Arivalagan
Feb 22, 2024,07:25 PM IST

டெல்லி: இந்தியாவில் உள்ள சில எக்ஸ் கணக்குகளை முடக்கவும், சில பதிவுகளை முடக்கவும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக எக்ஸ் தளம் தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக மத்திய அரசிடமிருந்து உத்தரவு வந்துள்ளதாகவும், அதில் தங்களுக்கு உடன்பாடில்லை என்றும் அதேசமயம், சட்டப்படி தாங்கள் நடக்கவுள்ளதாகவும் எக்ஸ் தளத்தின் டிவீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தி:




சில குறிப்பிட்ட கணக்குகள், பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசிடமிருந்து எங்களுக்கு உத்தரவுகள் வந்துள்ளன. சிறைத் தண்டனை, அபராதம் விதிக்கப்படக் கூடிய அளவிலான கருத்துக்களுடன் கூடிய பதிவுகள் அவை என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.


இந்த உத்தரவை ஏற்று, இந்தியாவில் மட்டும் இந்த பதிவுகள், கணக்குகளை நாங்கள் முடக்குவோம். அதேசமயம், இந்த உத்தரவின் மீது எங்களுக்கு உடன்பாடு இல்லை, அதிலிருந்து நாங்கள் முரண்படுகிறோம். கருத்து சுதந்திரம் அனைவருக்கும் பொதுவானது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.


இதுபோன்ற கணக்குகளை முடக்கக் கூறும் இந்திய அரசின் உத்தரவுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து ரிட் மனு நிலுவையில் உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் பாதிக்கப்பட்ட  பயனாளர்களுக்கு, எங்களது கொள்கைகளுக்கு உட்பட்டு நாங்கள் எடுத்து வரும் நடவடிக்கை குறித்த தகவல்களையும் அளித்துள்ளோம்.


சட்ட கட்டுப்பாடு காரணமாக,  மத்திய அரசு எங்களுக்குப் பிறப்பித்துள்ள உத்தரவை நாங்கள் வெளியிட முடியாது. ஆனால் இந்த விவகாரத்தில் வெளிப்படத்தன்மை தேவை என்று நாங்கள் கருதுகிறோம். இந்த வெளிப்படைத்தன்மை இல்லாவிட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நம்பகத்தன்மை இல்லாமல் போய் விடும் என்பதில் எங்களது கருத்தாகும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


எக்ஸ் தளத்தின் இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு தரப்பில் இதுவரை எந்தக் கருத்தும் வெளியிடப்படவில்லை.