எழுத்தாளர் மா. அன்பழகன் எழுதிய செம்பியன் திருமேனி.. மொரீஷியசில் வெளியீட்டு விழா!

Su.tha Arivalagan
Jul 29, 2024,03:06 PM IST

போர்ட் லூயிஸ்:   சிங்கப்பூர் தொழிலதிபரும், எழுத்தாளருமான கவிஞர் மா.அன்பழகன் எழுதிய வரலாற்று நூலான "செம்பியன் திருமேனி" நூல் வெளியீட்டு விழா மொரீஷியசில் நடைபெற்றது. மொரீஷியஸ் நாட்டின் முன்னாள் துணை அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி இந்த நூலினை வெளியிட்டுள்ளார்.


சிங்கப்பூரில் தொழிலதிபர், பத்திரிக்கையாளர், கவிமாலை அமைப்பின் தலைவர், எழுத்தாளர் என பல்வேறு பரிமாணங்களில் ஜொலித்து வரும் கவிஞர் மா.அன்பழகன் பல்வேறு நூல்களை எழுதி, வெளியிட்டுள்ளார். அவரது சமீபத்திய படைப்பாக செம்பியன் திருமேனி என்ற வரலாற்று புதினம் உருவாகி உள்ளது. இதன் வெளியீட்டு விழா மொரீஷியசில் ஜூலை 27ம் தேதி நடைபெற்றது. 




கவிஞர் மா.அன்பழகன், தமிழகத்தின் வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலன் என்னும் கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். வணிக நிர்வாகத்தில் இளங்கலை பட்டம் பயின்ற இவர், சிங்கப்பூரில் கவிமாலை என்ற அமைப்பினை எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறார். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் உறுப்பினராகவும் இருந்து வருகிறார். கவிமாமணி, முத்தமிழ் காவலர் உள்ளிட்ட பல விருதுகளையும் இவர் வென்றுள்ளார்.


புதுமை தேனீ என அனைவராலும் போற்றப்படும் மா.அன்பழகன், இதுவரை கவிதை, சிறு கதைகள், நாவல், கட்டுரை என 37 புத்தகங்கள் எழுதி உள்ளார். அது மட்டுமின்றி சிங்கப்பூரில் 150 க்கும் அதிகமான புத்தகங்கள் வெளியிடுவதற்கும் இவர் உதவி உள்ளார். இவர் தற்போது எழுதி உள்ள செம்பியன் திருமேனி என்ற நூல் இரண்டு வீரமங்கையர்களுக்கும், ஒரு மன்னனுக்கும் இடையேயான காதலை அடிப்படையாக கொண்ட நூலாகும். 9ம் நூற்றாண்டில் வாழ்ந்த குறுநில மன்னர்கள் இருவர் பற்றிய கதை இது. 




செம்பியன் திருமேனி நூலை  மொரீஷியஸ் நாட்டு முன்னாள் துணை அதிபர் மாண்புமிகு பரமசிவன் பிள்ளை வையாபுரி வெளியிட,  அந்நாட்டுப் பேராசிரியர் கதிர்வேல் சொர்ணம் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். மொரேஷியஸ் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் பாலன் சுப்பிரமணியன் மற்றும் முனைவர் அருள்ராஜ் உள்ளிட்ட பலரும் இந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர். மொரீஷியஸ் நாட்டு பிரமுகர்கள், மொழி அறிஞர்கள், பல துறை விற்பன்னர்கள் பலர் குடும்பத்துடன் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்தி, படங்கள்: சி.தாமோதரன்