பாவேந்தர் பாரதிதாசன் விருது விழாவில்.. எழுத்தாளர் -கவிஞர் இரா. கலைச்செல்விக்கு தமிழ்மாமணி விருது!
Apr 21, 2025,04:26 PM IST
திருச்சி: பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சியில் நடந்த விழாவில், எழுத்தாளர் -கவிஞர் இரா.கலைச்செல்விக்கு தமிழ்மாமணி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, 20/4/2025 அன்று திருச்சியில் உள்ள வசந்தம் அரங்கத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது. பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா, 423 வது மாத இளந்தென்றல் கவியரங்கம் மற்றும் தமிழ்ப்பணி, இலக்கியப் பணி, கவிப்பணி, பொதுப்பணி, சிறந்த தொழில் முனைவோர் மற்றும் உழைப்பால் உயர்ந்தோர் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் உலகம் போற்றும் பாவேந்தர் பாரதிதாசனின் பேரனான கலைமாமணி முனைவர் கோ. பாரதி, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்மாமணி விருது, கவிமாமணி விருது, உழைப்பு செம்மல் விருது, வாழ்நாள் சாதனை விருது, ஆகிய உயரிய விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
இதில் 2025 ஆம் ஆண்டுக்கான தமிழ்மாமணி விருது கவிஞர் - எழுத்தாளர். இரா கலைச்செல்வி அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார்.
அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாதனைப் பெண், தங்கத் தாரகை, கவிஞாயிறு உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.