"சுய ஒழுக்கம் வாழ்க்கையில்.. மிக முக்கியம்".. தேவகோட்டை விழாவில் நகராட்சி ஆணையாளர் பார்கவி அறிவுரை

Manjula Devi
Mar 08, 2024,03:08 PM IST

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் கலந்து கொண்ட நகராட்சி ஆணையாளர் எஸ் பார்கவி சுய ஒழுக்கம், தயக்கமின்மை, பெரியவர்களுக்கு மரியாதை செலுத்துதல் ,இவை மூன்றும் வாழ்க்கையில் முக்கியமானவை என மாணவர்களிடம் விழிப்புணர்வு அளித்து பேசி உள்ளார்.




ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்கள் இவற்றில் தான் பணியமர்த்த வேண்டும்.. இதில் தான் பணிபுரிய வேண்டும்.. என்ற நிலைமையை மாற்றி பெண்கள் எல்லா துறைகளிலும் சாதித்து வருகின்றனர். இது தவிர வீட்டிலும் பெண்கள் உழைத்து கணவனுக்காக.. மகளுக்காக.. மகனுக்காக.. தாய், தந்தைக்காக.. உழைத்து அவர்களின் சேவையை சிறப்பாக செய்து வருகின்றனர். 


இந்த நிலையில் அவர்களை கௌரவிக்கும் பொருட்டு பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்கள் உள்ளிட்ட பல இடங்களில் மகளிர் தினத்தை உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அந்த வரிசையில் இன்று சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக மகளிர் தின விழா சிறப்பாக நடைபெற்றது. 




இவ்விழாவில் தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக  நகராட்சி ஆணையாளர் எஸ் பார்கவி,  நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆதி நாராயணன் உட்பட பலரும் பங்கேற்றனர். விழாவில் கலந்து கொண்ட  நகராட்சி ஆணையாளர் எஸ்.பார்கவி மாணவிகளிடம் பேசுகையில் கூறியதாவது:


சுய ஒழுக்கம் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. பெரியவர்களுக்கு மரியாதை செலுத்துவது மிகச் சிறந்த பண்பாகும்.  சூழலுக்குத் தகுந்தவாறு புரிந்து படிக்க வேண்டும். கேள்வி கேட்க தயங்க தயங்கக்கூடாது .நமக்கு புரியாத தகவல்களை, படிப்பில் நமக்குத் தெரியாத விஷயங்களை ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.




தயக்கமில்லாமல் நம்முடைய சந்தேகங்களை கேட்கும் போதுதான் நமக்கு தெளிவு பிறக்கும். எனவே வாழ்க்கையில் ஒழுக்கம், மரியாதை, தயக்கமின்மை  மூன்றையும் கடைபிடித்தால் வெற்றி எளிதில் நம் பக்கம் வரும்.உங்கள் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள் என்று பேசினார்.


இவ்விழாவில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கவிதை போட்டி, பேச்சு போட்டி, மற்றும் ஓவியப்போட்டி ஆகியவை நடைபெற்றது.இதில்  வெற்றி பெற்ற சபரிவர்ஷன் , ரித்திகா, லட்சுமி ,கவிஷா ,  லோகப்பிரிய ஆகியோருக்கு நகராட்சி ஆணையாளர் எஸ் பார்கவி புத்தகங்களை பரிசாக வழங்கினார்.