அலங்காநல்லூர் ஏறுதழுவுதல் அரங்கில்.. செப்டம்பர் 27ம் தேதி.. சுற்றுலா தின கொண்டாட்டம்.. அனுமதி இலவசம்

Manjula Devi
Sep 26, 2024,12:29 PM IST

மதுரை:   தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை சார்பில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் உலக சுற்றுலா தினம் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.


ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பு 1980 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் உலக சுற்றுலா தினத்தை நிறுவியது. இதனை தொடர்ந்து உலகில் உள்ள சுற்றுலா தளங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 27ஆம் தேதி உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இந்த வருடம் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி உலக சுற்றுலா தினம் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. 




மேலும் ஒவ்வொரு நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரம், அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தவே இந்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு சென்று பொழுதுபோக்கிற்காகவும், மகிழ்ச்சிக்காவும் நேரத்தை செலவிட்டு சுற்றுலா சேவையை பயன்படுத்தி வருவதே இதன் நோக்கமாகும். அதிலும் உளவியல் ரீதியாக டென்ஷனைப் போக்கி மன அமைதியைப் பெறவே சுற்றுலா சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. 


இதனால் மக்கள் சமீப காலமாகவே தொடர் விடுமுறை நாட்களில் வீட்டில் இல்லாமல் வெளியே சென்று சுற்றுலா சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக தமிழ்நாடு சுற்றுலாத்துறை தனியார் சுற்றுலா நிறுவனங்களுடன் இணைந்து மாநிலங்களின் சுற்றுலா வளர்ச்சிக்காக, மக்களின் தேவைகளுக்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 


அந்த வரிசையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தினம் வரும் செப்டம்பர் 27 மற்றும் 28ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளும் நடைபெற உள்ளன. அரசு சார்பில் அனுசரிக்கப்படும் இந்த உலக சுற்றுலா தின விழாவிற்கு அனுமதி இலவசம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்