தண்ணீரில்லாமல் வறளும் உலக ஏரிகள்.. அபாயகரமாகும் காலநிலை மாற்றம்!

Su.tha Arivalagan
May 20, 2023,04:19 PM IST
டெல்லி: உலகில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட பெரிய ஏரிகள் நீரின்றி வறளும் நிலைக்குப் போய்க் கொண்டிருப்பதாக ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. காலநிலை மாற்றத்தின் அபாயத்தை இது சுட்டிக் காட்டுவதாகவும் அந்த ஆய்வுத் தகவல் தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றத்துடன், தண்ணீருக்கான தேவை அதிகரித்து வருவதுமே இதற்கு முக்கியக் காரணங்கள்.
இதுதொடர்பாக சயின்ஸ் இதழ் ஒரு ஆய்வுச் செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வை மேற்கொண்ட அமெரிக்காவின் விர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பங்க்பாங்க் யாவோ கூறுகையில், பல்வேறு வகையான மாடல்களை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் உலகில் உள்ள மிகப் பெரிய ஏரிகளில் பாதிக்கும் மேலானவற்றில் நீர் இருப்பு வெகுவாக குறைந்து விட்டது.



காலநிலை மாற்றமே இதற்கு முக்கியக் காரணம். இன்னொரு முக்கியக் காரணம், நீரின் தேவை அதிகரித்திருக்கிறது.  இதனால் தண்ணீர் வேகமாக குறைந்து வருகிறது. கஜகஸ்தான், உஸ்பெக்கிஸ்தான் இடையிலான ஏரல் கடலில் நீர் வற்றி விட்டது. உலகில் உள்ள 2000க்கும் மேற்பட்ட ஏரிகள், அணைக்கட்டுகள் ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன. இவைதான்  உலகின் 95 சதவீத நீர்த் தேவையை பூர்த்தி செய்கின்றன.

இந்த ஏரிகள், அணைக்கட்டுகளில் கடந்த 30 ஆண்டு கால நீர் வரத்து, நீர் இருப்பு, நீர்ப்போக்கு ஆகியவை குறித்து சாட்டிலைட்  தகவல்களுடன் ஆய்வு நடத்தப்பட்டது.  இந்த ஆய்வில் 53 சதவீத ஏரிகள், அணைக்கட்டுகளில் நீர் இருப்பு அடியோடு குறைந்து விட்டது. கால நிலை மாற்றத்தால் இந்த நிலை. கிட்டத்தட்ட 100 ஏரிகளில் சுத்தமாகவே நீர் இல்லாத நிலை காணப்படுகிறது.

பெரும்பாலான அணைக்கட்டுக்களில் அதிக அளவில் மணல் தேங்கியிருப்பதால் அவற்றின் நீர் சேமிப்பும் குறைந்திருக்கிறது. இதனால் அந்த அணைகளில் அதிக அளவில் தண்ணீர் தேக்கி வைக்க முடியவில்லை. பெரும்பாலான ஏரிகளின் பரப்பளவும் குறைந்திருக்கிறது. இதனால் நீர் தேக்கம் குறைந்திருக்கிறது. அதேசமயம், சில நாடுகளில் ஏரிகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதால் அங்கு ஏரிகள் புத்துயிர் பெற்றிருப்பதையும் காண முடிகிறது.

ஆர்மீனியாவில் உள்ள சேவான் ஏரியில் தற்போது பரப்பளவு அதிகரித்து நீர் சேமிப்பும் அதிகரித்துள்ளது. கடந்த 20 வருடங்களாக அங்கு நீர்ப்பரப்பு ஏரியா அதிகரித்து வருகிறது என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.