செப்டம்பர் 9.. இன்று என்ன நாள் தெரியுமா?.. உலக முதலுதவி தினம்!

Meena
Sep 09, 2023,02:52 PM IST
- மீனா

இன்று உலக முதலுதவி  தினம் கொண்டாடப்படுகிறது. இது ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

முதலுதவி என்பது ஒருவருக்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது உடல் அசவுகரியம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டாலோ கொடுக்கப்படும் முதல் சிகிச்சை ஆகும். சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வரை காயம்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை என்பதே முதலுதவி என்பதாகும். முதலுதவி என்றால் என்ன என்று நம்மில் பெரும்பாலானவர்களுக்கும் ஓரளவுக்கு தெரிந்திருக்கும். 

இன்றைய காலகட்டங்களில் முதலுதவி என்பது அனைவராலும் மறக்கப்பட்ட ஒன்றாக மாறி வருகிறது. ஏனென்றால் முன்பெல்லாம் யாராவது அடிபட்டாலோ அல்லது விபத்து ஏற்பட்டாலோ மக்கள் உடனடியாக ஓடி வந்து அவர்களுக்கு தேவையான முதலுதவியை  செய்வார்கள். ஆனால் இன்று அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும் போது, லரும் அவர்களைக் காப்பாற்ற வேண்டும், முதலுதவி செய்ய வேண்டும், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இறங்காமல், பாதிக்கப்பட்டவர்களை வீடியோ எடுப்பதிலும், செல்பி எடுப்பதிலும்தான் கவனம் செலுத்துகிறார்கள்.

அதை  சோசியல் மீடியாக்களில் அப்லோடு செய்து, லைக்ஸ் வருமா, கமெண்ட்ஸ் வருமா, எத்தனை பேர் ஷேர் செய்கிறார்கள் என்று பார்ப்பதற்காகவே இந்த மாதிரியான செயல்களில் ஈடுபடுகிறார்கள். முதலுதவி எவ்வளவு முக்கியமானது என்று நாம் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டிய கட்டாயத்தில்  இருக்கிறோம். அதற்காகவே இந்த நாளையும் கூட நாம் முக்கியமான நாளாக கொண்டாட வேண்டும்.

மிகவும் அவசர கட்ட முதலுதவி என்பது மருத்துவ துறையில் உள்ள பயிற்சி பெற்ற நபர்களால்  அளிக்கப்படுகிறது. கட்டுப்படுத்தக்கூடிய நோய்கள் சிறிய காயங்களுக்கு முதலுதவி கொடுத்த பிறகு மருத்துவ தலையீடு கூட தேவைப்படாமல்  போகலாம். ஆனால் சில முக்கியமான முதலுதவிகளில் உயிரை காப்பாற்ற கூடிய அளவுக்கு திறன்களும் அடங்கி இருக்கு என்று  நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் முதலுதவி தேவைப்படுபவர்களுக்கு எப்படிப்பட்ட முதலுதவி  தேவை என்பதை அறிந்து, அது தக்க சமயத்தில் அவர்களுக்கு கொடுக்கும் பட்சத்தில் அவர்கள் உயிரையும் காப்பாற்ற கூடிய நிலையை இதன் மூலம் உருவாக்கலாம். 

முதலில் முதலுதவி என்பது எப்படி வந்தது என்பதை நாம் தெரிந்து கொள்வோம் . இந்த முதலுதவி பழக்கம் என்பது 11-ம் நூற்றாண்டில் நடைமுறைக்கு வந்துள்ளது. 1859 இத்தாலி போரின் போது காயப்பட்ட வீரர்களுக்கு முதலுதவி செய்வதற்காக கிராம மக்கள் அழைக்கப்பட்டார்கள், அவர்கள் முதலுதவி செய்தார்கள். 

முதலுதவியின் முக்கிய நோக்கம்

உயிரை பாதுகாப்பது.. இதுதான் முதலுதவியின் முக்கிய நோக்கம். கூடுதலான ஆபத்து ஏற்படுவதை தடுத்தல், விரைவாக குணமாகுதலை ஊக்குவித்தல், ரத்தப் போக்கு இருந்தால் அதை தடுத்து நிறுத்துதல் போன்றவையே இதன் முக்கியநோக்கம்.  தீக்காயங்கள், வெட்டுபடுதல் இந்த மாதிரி ஏற்படும் சமயங்களில் அவற்றிற்கு முதலுதவி செய்வதற்கு என்று சில மருந்துகளை பெட்டி  ஒன்றில் வைத்திருப்பது மிகவும் அவசியமானது. இதை தான் முதல் உதவி பெட்டி என்று சொல்வோம். இந்த முதலுதவி பெட்டியை நாம் அநேக இடங்களில் பார்த்திருப்போம்

நமது வீட்டிலும் கூட இந்த முதலுதவி பெட்டி இருப்பது மிகவும் அவசியம். இந்த முதலுதவிப் பெட்டியில், பஞ்சு ரோல், ஒரு சுத்தமான காட்டன் துணி, கத்திரிக்கோல், பேண்ட் எய்டு, பாண்டேஜ், சர்ஜிகல் டேப், காட்டன் கிரிப் பேண்டேஜ், காயங்களுக்கான ஆன்ட்டி செப்டிக் கிரீம்கள், தீ காயங்களுக்கான ஆன்ட்டிசெப்டிக் கிரீம்கள் தசை விலகுதலுக்கான கிரீம்கள் அல்லது ஸ்பீரே , கிருமி நாசினி போன்றவை இதில் இருக்க வேண்டும். 
முதலுதவி பெட்டியில் உள்ள பொருட்கள் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். இதனுடைய காலாவதியான தேதிகளை சரி பார்த்து நாம் அவ்வப்போதும் மாற்றிக் கொள்ளவும் வேண்டும். 

தீக்காயத்துக்கான முதலுதவி:  

லேசான தீக்காயம் ஏற்பட்டு விட்டால் முதலில் காயப்பட்ட இடத்தில் குழாயில் தண்ணீரை திறந்து விட்டு அந்த இடத்தை நன்கு காட்ட வேண்டும். குறைந்தது கால் மணி நேரம் இப்படி தண்ணீரில் காட்ட வேண்டும். பிறகு அந்த காயத்திற்கான மருந்துகளை நாம் போட்டுக் கொள்ளலாம். அதிகப்படியான தீக்காயம் ஏற்படும் போது இதே மாதிரி ஒரு துணி அல்லது சனல் சாக்கை ஈரத்துடன் அவர்கள் மேல் போர்த்தி விட்டு பிறகு மருத்துவமனைக்கு அழைத்து செல்வது நல்லது.

வெட்டுக்காயங்களுக்கான முதலுதவி:

வெட்டு காயம் ஏற்படும் போது அதிகப்படியான ரத்தக்கசிவு இருந்தால் , அதில் ஒரு சுத்தமான துணியை சுற்றி ரத்தக்கசிவை நிறுத்தும் அளவிற்கு அழுத்தி பிடித்துக் கொள்ள வேண்டும். பின்பு மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாம். ஆனால் கை விரல் அல்லது கையே வெட்டுப்பட்டால் அவற்றை முறையாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். துண்டான விரலை ஒரு ஈர துணியில் நன்கு சுற்றி ஒரு கவரில் போட்டு காற்று போகாத அளவுக்கு டைட்டாக கட்டிக்கொள்ள வேண்டும் .அதை ஐஸ் உள்ள பாக்ஸில் போட்டு  24 மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு சென்று, அதை எந்த பிரச்சனையும் இல்லாமல் மறுபடியும் பொருத்தி கொள்ளலாம்.




நாய்க்கடிக்கான முதலுதவி: 

எதிர்பாராத விதமாக நாய் கடித்து விட்டால், அந்த இடத்தை   முதலில் சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும். பிறகு மருத்துவமனைக்கு அழைத்து சென்று நாய் கடிக்கான தடுப்பு மருந்துகளை செலுத்திக் கொள்ள வேண்டும்.

பாம்புக் கடி முதலுதவி:

ஒருவரை பாம்பு  கடித்துவிட்டால் முதலில் அவரை பதற்றம் அடையாமல் இருக்க சொல்ல வேண்டும். பிறகு பாம்பு கடித்த  இடத்திற்கு மேலும்  கீழும் விஷம் பரவாமல் இருப்பதற்கு துணியை வைத்து நன்கு இறுக கட்டிக் கொள்ள வேண்டும். கட்டிய பிறகு அந்த இடத்திற்கு அதிகப்படியான அசைவுகள் கொடுக்காமல் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்வது நல்லது.

மயங்கி விழுபவர்களுக்கான முதலுதவி:

ஒருவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தால் முதலில் அவருக்கு நல்ல காற்று வரும் படியாக சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பிறகு தண்ணீரை கொண்டு அவருடைய முகத்தில் அடிக்க வேண்டும். அவரிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அவரால் பதில் சொல்ல முடியாவிட்டாலும், அவர் நாம் பேசுவதை கவனிக்கிறார் என்பதை உறுதி செய்து கொள்ளவும். பின்பு மருத்துவமனைக்கு உடனே அழைத்துச் செல்வது நல்லது.

நெஞ்சுவலி ஏற்பட்டால்:

நெஞ்சு வலி அல்லது இருதய அடைப்பு ஏற்பட்டு அவர் மயக்க நிலைக்கு செல்கிறார் என்று தெரிந்தால், உடனே  அவரது மார்பின் இடது புறத்தில் கையை வைத்து அழுத்தி சிபிஆர் முதலுதவியைக் கொடுக்க வேண்டும். அவருடைய இருதயத்துடிப்பு மீண்டும் வர  அழுத்தம் கொடுத்து மென்மையாக குத்த வேண்டும். இவ்வாறு முதலுதவி செய்த பிறகு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மேற்கொண்டு சிகிச்சைகளை செய்ய வேண்டும். 

இதுபோன்ற அடிப்படையான முதலுதவிகளை நாம் தெரிந்து வைத்துக் கொண்டால் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு ஏதாவது உடல் நல பாதிப்பு ஏற்பட்டால் அவர்களைக் காக்க நம்மால் உதவ முடியும்.