ஏஆர்ஆர் பிலிம் சிட்டியில் பரிதாபம்.. 40 அடி உயரத்திலிருந்து விழுந்து தொழிலாளி பலி!

Baluchamy
Jan 18, 2023,02:12 PM IST
சென்னை: ஏ.ஆர்.ஆர் பிலிம் சிட்டியில் நடந்த படப்பிடிப்பின்போது, 40 அடி உயரத்தில் இருந்து கூலி தொழிலாளி ஒருவர் தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருவள்ளூர் மாவட்டம், கும்முடிப்பூண்டி ஐயர் கண்டிகையில் ஏஆர்ஆர் பிலிம் சிட்டி உள்ளது. இங்கு நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெப்பன் என்ற படத்தின் படிப்பிடிப்பு நடந்து வருகிறது. சவாரி, வெள்ளை ராஜா ஆகிய படங்களை இயக்கிய குகன் சென்னியப்பன் இயக்கி வருகிறார்.

அக்ஷன், திரில்லர் கதையாக எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் 'தரமணி' படத்தின் ஹீரோ வசந்த் ரவி நடிகர் சத்யராஜுடன் இணைத்து நடித்து வருகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க,பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்கிறார்.

படப்பிடிப்பின் போது சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த குமார் (47) என்பவர் 40 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுதொடர்பாக  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் குமார் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.  தமிழ் சினிமா படப்பிடிப்பு தளங்களில் ஸ்டண்ட் தொழிலாளர்கள் பலியாவது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகிவரும் 'விடுதலை' படப்பிடிப்பின் போது ஒரு ஸ்டண்ட் தொழிலாளர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.