Work from Home.. பெண் தொழிலாளர்களுக்காக இதைப் பண்ணுங்க.. அரசு தரும் அட்வைஸ்!

Manjula Devi
May 23, 2024,09:53 PM IST

சென்னை: கொரோனாவுக்குப் பிறகு வாழ்க்கை முறையே மாறி விட்டது. இப்படிப்பட்ட நிலையில், பெண்களுக்கு வீட்டிலிருந்தே பணியாற்றும் வாய்ப்புக்கு முன்னுரிமை கொடுப்பது குறித்து நிறுவனங்கள் பரிசீலிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை செயலாளர் குமார் ஜெயந்த் கூறியிருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது.


கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டது. சீனாவிலிருந்து கிளம்பிய கொரோனா வைரஸ் பரவல் நாடு நாடாக அலை அலையாக பரவி உலுக்கி எடுத்தது. பல லட்சம் பேர் உயிரிழ்தனர். கொரோனா எதிரொலியாக நோய்ப் பரவல் அதிகரிக்காமல் தடுக்க இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு ஊரடங்கும் போடப்பட்டது. 



இந்த ஊரடங்கு காலத்தில் வேலை செய்யும் பெண்கள், ஆண்கள் என பலரும் வேலைக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர். கூலித் தொழிலாளர்கள் பலர் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டது. அதேசமயம், ஐடி நிறுவனங்கள் உள்பட, கம்ப்யூட்டர் மூலம் வேலை பார்க்கும் வாய்ப்புள்ளோருக்கு Work from Home முறை அமல்படுத்தப்பட்டது. கொரோனா காலத்திலிருந்துதான் இந்த Work from Home இந்தியாவில் பிரபலமானது.


தற்போது வரை வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டத்தை பல நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர். Work from Home மூலம் உற்பத்தித் திறனை அதிகரிக்க முடியும், கூடுதலாக பணியாற்ற முடியும், அலைச்சல் குறைவு, உற்சாகமாக பணியாற்ற முடியும், ஏன், கூடுதல் நேரமும் கூட பணியாற்ற முடியும்.. இப்படி பல நல்ல விஷயங்கள் இதில் உள்ளதால் பல நிறுவனங்கள் இதையும் ஒரு ஆப்ஷனாக வைத்துள்ளன.




முன்பெல்லாம் பணியாளர்கள் தேவை என்றால் அடிக்கடி லீவு எடுப்பார்கள்.. இப்போது லீவுக்குப் பதில் Work from Home ஆப்ஷன் வாங்கிக் கொள்கின்றனர். பெர்சனல் வேலையையும் முடிக்க வசதியாக இருக்கும். அதை ஈடு செய்யும் வகையில் வீட்டிலிருந்தே அலுவலக வேலையையும் செய்ய முடிகிறது என்பதால் இது மிகப் பெரி வரப்பிரசாதமாகவே பார்க்கப்படுகிறது.


அதிலும் பெண்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதை விரும்பி செய்கின்றனர்.  காரணம், இதில் பல நன்மைகள் அவர்களுக்கு உள்ளன. பெண்கள் இயல்பாகவே, ஆண்களை விட கூடுதலான சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. வீட்டிலும் வேலை செய்து..  குழந்தைகளை கவனித்து.. அவர்கள் படிப்பையும் கவனித்து .. வீட்டில் உள்ளவர்களையும் கவனித்து, அப்படியே அலுவலக வேலையையும் பார்க்க வேண்டியுள்ளது. 


வீட்டு வேலைகளெயல்லாம் முடித்து விட்டு ஆபீஸுக்கு வந்து சேருவதற்குள் போதும் போதும் என்றாகி விடும். இதில் போக்குவரத்து நெரிசல், வெயில், மழை, உடல் அசவுகரியங்கள் என்று பலவற்றையும் தாண்டி அவர்கள் வேலை செய்ய வேண்டியுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் பெண்களுக்கு மிகப் பெரிய சவுகரியமாக இந்த Work from Home ஆப்ஷன் உள்ளது. 




இந்த நிலையில் பெண்களின் குடும்ப பொறுப்புகளை உணர்ந்து பெண் பணியாளர்களை நிரந்தரமாக வீட்டிலிருந்தே வேலை செய்ய  அனுமதிக்கலாம் என தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை செயலாளர் குமார் ஜெயந்த் யோசனை தெரிவித்துள்ளார். இந்த யோசனைக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.


இதுகுறித்து குமார் ஜெயந்த் கூறுகையில், இந்தியாவில் பணிபுரியும் பெண்களில் 43 சதவீதம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். பெண்கள் இன்று வேலை பார்க்காத துறையே இல்லை. வாய்ப்புள்ள துறைகளில், அவர்களை வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதித்தால் அவர்களது முன்னேற்றத்திற்கும், நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் என கூறியுள்ளார். இது உண்மையில் நல்ல யோசனைதான்.. நிறுவனங்கள் இதை சரியான முறையில் அமல்படுத்துவது குறித்து யோசிக்க வேண்டும்.