புதுச்சேரி முதல்வரின் சூப்பர் அறிவிப்பு.. மகளிர் உதவித் தொகை ரூ.1000ல் இருந்து ரூ.2500 ஆக உயர்வு!
Mar 12, 2025,06:44 PM IST
புதுச்சேரி: புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1000 உதவித்தொகை ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரிக்கான பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகித்து வரும் முதலமைச்சர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்தார். 2025-26 நிதியாண்டு பட்ஜெட் திட்ட மதிப்பீடு ரூ.13,600 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தென்னை சாகுபடி விவசாயிகளுக்கு இந்த ஆண்டு முதல் வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீடு அறிமுகப்படுத்தப்படும். . விவசாய தொழிலாளர் நலச்சங்கத்தி் பதிவு செய்துள்ள அனைத்து விவசாயத் தொழிலாளர்களுக்கும் மழைக்கால நிவாரணமாக ஆண்டுக்கு ரூ.2,000 வரும் நிதியாண்டு முதல் வழங்கப்படும்.
2015 முதல் 2021 ஆண்டுகளுக்கான தமிழ்மணி விருதுகள் வழங்கப்படும். புதிதாக சொற்பொழிவாளர், புகைப்படம், திரைப்படம், ஆவணப்படம் ஆகியத்துறைகளுக்கு கலைமாமணி விருது வழங்க உத்தேசித்துள்ளோம். வரும் நிதியாண்டு முதல் ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு இலவச அரிசியோடு 2 கிலோ கோதுமையும் இலவசமாக வழங்கப்படும். மதிய உணவுத்திட்டத்தில் வாரம் 3 நாட்களுக்கு தரப்படும் முட்டை வரும் கல்வியாண்டு முதல் அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் தரப்படும்.
வரும் கல்வி ஆண்டு முதல் அரசு ஒதுக்கீட்டில் சென்டாக் மூலம் சேர்க்கை பெறும் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் நிதியுதவி விரிவுபடுத்தப்படும். அரசு பள்ளியில் படித்து நீட் பாடப்பிரிவுகளின் 10 சதவீத இட ஒதுக்கீட்டில் சேரும் அனைவருக்கும் 100% கட்டண விலக்கு அளிக்கப்படும். அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து கல்லூரிகளில் இளநிலை படிக்கும் அனைவருக்கும் மாதம் ஆயிரம் வீதம் 3 ஆண்டுகளுக்கு ஊக்குவிப்புத் தொகை இந்தக் கல்வி ஆண்டு முதல் தரப்படும்.
காரைக்காலில் செயற்கை தடகளப்பாதை அமைக்கப்படும். திருக்கோயில்களில் ஒரு கால பூஜைக்காக தற்போது தரப்படும் நிதி உதவித்தொகை ரூபாய் 20,000த்தில் இருந்து 30,000 ஆக உயர்த்தப்படும். கிழக்குக் கடற்கரை சாலையில் அமைய உள்ள புதிய பஸ் நிலையத்திற்கு அடல் பிகாரி வாஜ்பாய் பேருந்து நிலையம் என பெயர் சூட்டப்படும். இதற்காக பத்து கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறை கைதிகளின் தகவல்கள் டிஜிட்டல் முறையில் பராமரிக்கப்படும். ஏழை சிறை கைதிகள் நலத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு தேவையான சட்ட உதவி திறன் மேம்பாட்டு திட்டம் அளிக்கப்படும். விமான நிலையத்தின் ஓடு தளத்தை விரிவாக்க நிலம் கையகப்படுத்த முதல் கட்டமாக ரூபாய் 20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் அனைத்து பகுதிகளிலும் மறு நில அளவை ட்ரோன் சர்வே நடத்தப்படும். மணப்பட்டு கிராமத்தில் 100 ஏக்கர் சுற்றுலா மண்டலம் அமைத்து அரசு தனியார் பங்களிப்புடன் தீம் பூங்காக்கள், ஓய்வு விடுதிகள், மாநாட்டு கூட்டங்கள் அமையும். மின் வாகனங்களுக்கு சாலை வரியில் 50 சதவீத சலுகை தரப்படும். ஆதிதிராவிட பழங்குடியின மக்களுக்கு சிறப்புக்கூறு திட்டநிதி ரூபாய் 526. 82 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 30 வயதை கடந்து திருமணமாகாத, கணவரை இழந்த வேலையற்ற ஆதிதிராவிட பழங்குடியின பெண்களுக்கு மாதம் 3,000 அவர்களுக்கு திருமணம் ஆகும் வரை மற்றும் பணிக்கு செல்லும் வரை தரப்படும்.