கருவைச் சுமக்கும் பெண்கள் இனி.. கருவறைக்குள்ளும் நுழைவார்கள்.. மு.க.ஸ்டாலின்

Su.tha Arivalagan
Sep 14, 2023,02:03 PM IST
சென்னை:  கருவைச் சுமக்கும் பெண்கள் நுழைய முடியாத இடமாக கோவில் கருவறைகள் இருந்தன. இனி வரும் நாட்களில் கோவில் கருவறைக்குள்ளும் பெண்கள் நுழைவார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற புரட்சித் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டத்தை உச்சநீதிமன்றம் செல்லுபடியாகும் என்று அதிரடியாக தீர்ப்பளித்து விட்டது. இந்த நிலையில் இந்தத் திட்டத்தின் கீழ் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் படித்து தேறியவர்களுக்கு சான்றிதழ் அளித்து பணி நியமனமும் வழங்கப்பட்டுள்ளது. அந்த அர்ச்சகர்களில் 3 பேர் பெண்கள்  ஆவர்.

இதுகுறித்து பெருமிதம் வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோயில் கருவறைகள் இருந்தன. பெண் கடவுளர்களுக்கான கோயில்களிலும் இதுவே நிலையாக இருந்தது.

ஆனால், அந்நிலை இனி இல்லை! அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனப் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நமது #திராவிடமாடல் ஆட்சி அகற்றியதில், கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்... என்று கூறியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.