இன்று ஒரு கவிதை.. மகளிர் உரிமை!
- கவிஞாயிறு இரா. கலைச்செல்வி
ஆம். மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
என்ன உரிமை ? எதற்காக வேண்டும் ?
ஆண், பெண் சரிநிகர் சமான உரிமை வேண்டும்..!!
அவள் அவளாக இருக்க உரிமை வேண்டும் ..!!
பத்துக்கும் ஐந்துக்கும் ஆணைச் சார்ந்து ,
பரிதவிக்கும் நிலை மாற ,
படித்து, ஆணுக்கு நிகராக சம்பாதிக்க ,
பாடுபடும் குடும்ப மகளிர்க்கு ,
சமையல் கடமையோடு, இப்போது ,
சேர்ந்து விட்டது அலுவலகக் கடமையும் .
சம்பாதிக்க ஆரம்பித்தும், சமையல் கட்டு மட்டும் ,
சாகிற வரை அவளை விடுவதாய் இல்லை .
ஞாயிறு என்றால் அனைவருக்கும் ஓய்வு.
ஞாயிறு என்றால் அவளுக்கோ நாள் முழுதும் வேலை .
ஆணுக்கு நிகராக உழைக்கும் அவளுக்கும் ,
அந்த ஒரு நாள் ஓய்வு எடுக்க உரிமை வேண்டும்.
மலர் என்றோ, நிலவு என்றோ,
பூமித்தாய் என்றோ, காவிரித்தாய் என்றோ,
சரஸ்வதி என்றோ, லெஷ்மி என்றோ,
மகளிரை வர்ணிக்க வேண்டாம்..!!
பெண்மையை இழிவுபடுத்தும் சொற்களை,
அகராதியில் இருந்து அகற்றினாலே போதும்.!!
அது இல்லையெனில்..!!
விதவை, வாழாவெட்டி, மலடி, வேசி, பரத்தை... என்ற
விகற்ப சொற்களுக்கு, ஏற்ற எதிர்பால் சொல்லை,
அகராதியில் சேர்க்க, அவளுக்கு உரிமை வேண்டும்..!!
பெண் போகப் பொருள் அல்ல. அவள் ,
உணர்வுள்ள மனுஷியாய் வாழ உரிமை வேண்டும்..!!
பெண்ணுக்கு எதிரான வன் கொடுமைகள் ,
அனைத்தையும் வேரறுக்க உரிமை வேண்டும்..!!
(எழுத்தாளர் பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். நிலாமுற்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்துள்ளார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிக அளவில் எழுதி வருகிறார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்)