1650 வருடமாக நடக்கும்.. ஜப்பான் ஆண்கள் நிர்வாண திருவிழா.. முதல் முறையாக பெண்களுக்கும் அனுமதி!

Su.tha Arivalagan
Jan 24, 2024,06:09 PM IST

டோக்கியோ:  ஜப்பானில் கடந்த 1650 வருடமாக நடந்து வரும் ஆண்கள் நிர்வாணத் திருவிழாவில் இந்த ஆண்டு, முதல் முறையாக  பெண்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


நம்ம ஊரில் சில விழாக்கள் நடைபெறுவது எல்லோருக்கும் தெரிந்ததுதான். கேரளாவில் பெண்கள் மட்டும் பங்கேற்கும் பொங்கல் விழா நடைபெறுவது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அந்த விழாவில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பொங்கல் வைத்து வழிபடுவார்கள். பெண்களின் சபரிமலை என்றும் அதற்குப் பெயர் உண்டு.


அதேபோல மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் விழா ஒன்று நடைபெறும். அந்த விழாவில் கறிச்சோறு விருந்து வைக்கப்படும். இதில் ஆண்கள் மட்டுமே பங்கேற்பார்கள். அந்த வகையில் ஜப்பானில் ஒரு நிர்வாணத் திருவிழா நடைபெறுகிறது. இந்த கோவில் விழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்பது வழக்கம்.




ஜப்பானின் ஆய்ச்சி பிராந்தியத்தின் இனாசவா நகரில் உள்ள கோனோமியா கோவிலில்தான் இந்த ஆண்கள் நிர்வாணத் திருவிழா நடந்து வருகிறது. ஹடக்கா மட்சூரி என்று இந்த விழாவுக்குப் பெயர். பிப்ரவரி 22ஆம் தேதி இந்த திருவிழா நடைபெற உள்ளது. இதில் கிட்டத்தட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த ஆண்டு விழாவில் 40 பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சில சடங்குகளை செய்ய அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.


இருப்பினும் பெண்கள் முழுமையாக உடை அணிந்து இந்த விழாவில் பங்கேற்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு குறிப்பிட்ட சடங்கின் போது மட்டுமே பெண்கள் அங்கு இருக்க அனுமதிக்கப்படுவார்கள். மற்ற நேரத்தில் அவர்கள் அங்கிருந்து போய் விட வேண்டும். இது குறித்து போட்டி ஒருங்கிணைப்பு குழுவின் அதிகாரியான மிட்சுகு கட்டாயமா என்பவர் கூறுகையில் கடந்த மூன்று வருடங்களாக கொரோனா காரணமாக இந்த திருவிழா நடைபெறவில்லை. இப்போது தான் இந்த திருவிழா மீண்டும் நடைபெற உள்ளது. இந்த முறை எங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று பெண்கள் பலர் கோரிக்கை விடுத்து வந்ததால், அதை பரிசீலித்து 40 பெண்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


இந்த விழாவில் பெண்களுக்கு தடை என்று எப்போதும் இருந்ததில்லை. ஆனால் பெண்கள்தான் அவர்களாகவே இதில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்தனர். பின்னர் அது அப்படியே பாரம்பரியமாகி விட்டது. எனவே ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் திருவிழாவாக இவ்வளவு காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது என்றார். பெண்களுக்கு இந்த முறை இந்த திருவிழாவில் அனுமதி அளிக்கப்பட்டிருப்பதற்கு அங்குள்ள பெண்களிடையேயும், சமூக ஆர்வலர்கள் இடையேயும் பெரும் வரவேற்பும் பாராட்டும் கிடைத்துள்ளது. 


இந்த திருவிழாவை அனைவரும் இணைந்து கொண்டாட வேண்டும், அப்போதுதான் சமத்துவம் தழைத்தோங்கும் என்று சமூக ஆர்வலர்கள் ஏற்கனவே கூறி வருகின்றனர். இந்த திருவிழாவின்போது இதில் கலந்து கொள்ளும் ஆண்கள் கிட்டத்தட்ட நிர்வாணமாக இருப்பார்கள். அதே சமயம் அவர்களின் உடலில் வெகு சிறிய அளவிலான ஆடை இருக்கும். அந்த ஆடைக்கு ஜப்பானில் பண்டோசி என்று பெயர். திருவிழாவின்போது ஆண்கள் கோவிலை சுற்றி நிர்வாண கோலத்தில் ஓடி வருவார்கள். பின்னர் புனித நீராடுவது போல, கடும் குளிர் நீரில் குளிப்பார்கள். அதன் பிறகு முக்கிய கோவிலின் முன்பு அனைவரும் ஒன்று திரண்டு விழாவின் பிற  கொண்டாட்டங்கள் நடைபெறும்.