பெண்களே.. உடம்பில் கட்டி இருந்தால் கவனக்குறைவா இருக்காதீங்க.. எச்சரிக்கும் அரசு டாக்டர்!

Manjula Devi
Feb 14, 2024,04:01 PM IST

சிவகங்கை:  உடம்பில் எங்காவது கட்டி இருந்தால், அதிலும் வலி இல்லாமல் இருந்தால் உடனே டாக்டரிடம் ஆலோசனை வாங்குங்க. குறிப்பாக பெண்கள் மார்பகப் புற்று நோய் குறித்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று தேவகோட்டை அரசு மருத்துவர் டாக்டர் மீரா கணேஷ் கூறியுள்ளார்.


தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் திருவேகம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மீரா கணேஷ் கலந்து கொண்டு மாணவ மாணவிகளிடம் புற்றுநோய் குறித்து விளக்கிப் பேசினார்.  தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். செவிலியர்கள் சௌந்தரவல்லி மற்றும் பாரதி கனி ஆகியோரும் பங்கேற்றனர். 


விழாவில் டாக்டர் மீரா கணேஷ் பேசியதாவது:




உடலில் எங்கேயும் கட்டி இருந்தால் அதனை தவிர்த்து விடக் கூடாது. குறிப்பாக கட்டிகள் வலியில்லாமல் இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். 30 வயதிற்கு மேலாக பெண்கள் அவசியம் வருடத்திற்கு ஒருமுறை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக வழங்கப்படும் பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். 


புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து விட்டால் மிக எளிதாக குணப்படுத்திவிடலாம். மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், ஆகியவை பெண்களைப் பாதிக்கும் முக்கியமான நோய்களாக உள்ளன. புகைப்பிடிப்பதால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும். புகை பிடிப்பவர் மட்டுமல்லாமல் அருகே இருப்பவர்களுக்கும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.




மாணவர்கள் இளம் வயதிலேயே நல்ல ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை கற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் பல்வேறு வியாதிகளில் இருந்து தங்களை காத்துக் கொள்ள முடியும். காலையில் விரைவாக எழுந்து நல்ல முறையில் உடற்பயிற்சிகள் செய்து நம் உடலை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும். மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அனைத்து விதமான உடல் பரிசோதனைகளையும் நல்ல முறையில் செய்து கொள்ள வேண்டும்.


புற்றுநோய் சிலருக்கு பரம்பரையாக வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. வாழ்க்கை முறையில் உணவு முறைகளை மாற்றுவதும் புற்றுநோய் வருவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றது. நம் உடலின் நகம் மற்றும் முடி தவிர மற்ற அனைத்து இடங்களிலும் புற்றுநோய் பாதிப்பு வர வாய்ப்புள்ளது என கூறினார்.




நிகழ்ச்சி முடிவில் மாணவர்கள் மருத்துவரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பினர். அதற்கு மருத்துவர் பதில் அளித்தார். விழா நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.